Wednesday, January 13, 2010

ஜெயமோகனின் குறுநாவல் அனல்காற்று

 

புத்தக காட்சி கிணற்றில் இறைத்துக் கொண்டிருந்த போது என் வாளிக்குள் சிக்கிய புத்தகம் அனல்காற்று. புத்தகத்தின் முதற்பக்க குறிப்பை படித்த பின் தெரிந்தது பாலுமகேந்திரா இயக்கவிருந்த படம் ஜெயமோகனின் கதையென்று. ஹிந்து பேப்பரில் சில மாதங்களோ அல்லது வருடங்களோ முன்னாடி அனல்காற்று படத்தின் போஸ்டர் பார்த்தது புத்தக காட்சியில் மு.மேத்தாவின் கவியரங்கம் பார்த்துக் கொண்டிருந்த போது மூளை எனக்கு நினைவூட்டியது. புத்தக காட்சியில் நிறைய புத்தகம் வாங்கியிருந்ததால் எதை முதலில் படிப்பதென்ற சிந்தனையிலிருந்தேன். படம் கைவிடப்பட்டாலும் பாலுமகேந்திரா இயக்கவிருந்த படத்திற்கு ஜெயமோகனின் கதை எப்படியிருக்கும் என்ற எண்ணத்தின் உந்துதல் என்னை அனல்காற்று முதலில் படிக்க வைத்தது. புத்தக கண்காட்சி முடிந்து வந்த அடுத்தநாள் காலை 7:50 மணிக்கு சென்னையிலிருந்து சாத்தூர் வழியே குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ்சில் D1 கோச்சில் அமர்ந்து கொண்டு அனல்காற்றை படிக்கத் துவங்கினேன்.

விமானநிலையத்தில் நின்று கொண்டு வானத்தில் பறந்து மறைந்து கொண்டிருக்கும் விமானத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான் அருண். விமானத்தில் செல்வது அருணின் மாமன் மகள் சுசிலா. லண்டன் செல்கிறாள். மனஅழுத்தத்தில் நின்று கொண்டிருக்கும் அருண் வானத்தில் புள்ளியாக விமானம் மறைந்ததும் தன் காரில் ஏறி பாண்டிச்சேரிக்கு செல்கிறான். பாண்டிச்சேரியில் லாட்ச் ஒன்றில் ரூம் எடுத்து மணிக்கட்டை கத்தியால் அறுத்து விடுகிறான். மணிக்கட்டிலிருந்து இரத்தம் சொட்டு சொட்டாக வழிகிறது. அருண் ஏன் தற்கொலைக்கு முயற்சி செய்கிறான்? அப்படி அவனுக்கு என்ன நடந்தது? என்று வாசகர்களின் மனதில் கேள்வியை எழுப்பி கதையானது அடுத்த கட்டத்திற்கு முன்னேறி செல்கிறது. தொடரும் கதையை அருண் சுசிலாவிடம் சொல்வது போல் எழுதுயிருக்கிறார் ஆசிரியர், சுசிலாவை சுசி என்றழைக்கிறான் அருண்.  

லண்டனிலிருந்து சென்னை வந்திருக்கும் சுசியை வரவேற்க செல்கிறான் அருண். சுசியை வீட்டிற்கு காரில் அழைத்துச் செல்கிறான். அப்போது சுசி ஆண்கள் பெண்களின் மார்பையே அதிகம் பார்ப்பதாகவும், ரசிப்பதாகவும் பார்ப்பதை பெண்கள் பார்த்தவுடன் ஆண்கள் வேறொரு பக்கம் திரும்பிக் கொள்வதாகவும் ஆண்களை பற்றி விமர்சனம் செய்கிறாள். அருண் அதை மறுக்கிறான். சுசியோ பல உதாரணங்கள் தருகிறாள். சுசி மார்பை பப்ஸ் என்று சொல்கிறாள். தோளில் சரிந்து விழும் துப்பட்டாவை சரி செய்யும் போதும், சேலையை சரி செய்யும் போதும் ஆண்களின் கண்கள் பெண்ணின் மார்பகங்களை பார்ப்பதாக கூறுகிறாள். அருண் இதையும் மறுக்கிறான். அருகில் அமர்ந்திருக்கும் சுசி ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்கும் போது டீ-சர்ட்டினை முன் தள்ளிக் கொண்டிருக்கும் அவளின் மார்பகங்களை பார்க்கிறான் அருண். அருண் பார்ப்பதை சுசி பார்த்து விடுகிறாள் உடனே அருண் பார்வையை ரோட்டின் பக்கம் திருப்பி காரை செலுத்துகிறான். சுசியிடம் வசமாக மாட்டிக் கொண்ட அருண் அவளிடன் வதைபடுகிறான்.           

அருணின் அம்மா ஜி.சிவகாமி சுருக்கமாக ஜி.எஸ் சுசியை கொண்டாடுகிறாள். சுசியின் அப்பா லண்டனில் ரெஸ்டாரண்ட் வைத்திருக்கிறார். அதனால் அவளும் நன்கு சமைக்க கற்றுருக்கிறாள். இந்தியா வந்த முதல் நாளே சமையல் கட்டினுள் நுழைந்து அருமையான தோசை சுட்டுக் கொடுத்து ஜி.எஸ் சிடம் நன்மதிப்பு பெறுகிறாள். அருணின் செல்போனிற்கு அழைப்பு வருகிறது. பதற்றமடைகிறான். செல்போனை சைலண்டில் போட்டுவிட்டு சுசி சுட்டுதரும் தோசையை தின்கிறான். சந்திரா அருணின் வீட்டிற்கு வருகிறாள். சந்திரா ஜி.எஸ் வேலை பார்த்த கல்லூரியில் உடன் வேலை பார்த்தவள். ஜி,எஸ்ஸை விட பனிரெண்டு வயது இளையவள். வெளியில் இளமையாக காட்டிக்கொள்ளும் சந்திரா சுசி வருவது தெரிந்து அவளுக்கு சுடிதார் வாங்கி வந்திருக்கிறாள். ஜி.எஸ்சும் அவர்களுடன் கலந்து கொள்கிறாள். இனிவரும் கதையானது இந்த மூன்று பெண்கள், அருணை சுற்றியே அமைகிறது.

 சந்திரா கொடுத்த சுடிதார் அணிந்து கொண்டு சுசி அருணுடன் பாண்டிபஜாரில் சாப்பிங் செய்கிறாள். பாண்டிபஜாரில் கூட்டத்தை பார்த்து சந்தோசப்படுகிறாள். இது போன்ற கூட்டத்தை லண்டனில் பார்த்ததில்லை என்கிறாள். எதிரே தன்னை கடந்து செல்லும் ஆண்கள் எல்லாம் தன்னை வெறித்துப் பார்ப்பதாகவும் அது தனக்கு மகிழ்ச்சிதருவதாகவும் அருணிடம் கூறுகிறாள். ஆண்கள் எல்லாம் தன் மார்பை பார்ப்பதாக கூறி மார்பு பற்றிய பேச்சை மீண்டும் தொடங்குகிறாள். அருண் கோவப்படுகிறான். இருவரும் சண்டை போடுகிறார்கள். சண்டையும் தற்காலிகமான சண்டை வெகுநேரம் நீடிப்பதில்லை.

 அருண் சந்திராவின் வீட்டிற்கு போயிருக்கும் போது சந்திராவின் மகன் நவீன் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்க்கிறான். நவீன் குண்டான பையன், நவீன் அப்பா இறந்து ஒன்பது வருடம் ஆகியும் சந்திரா மறுமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறாள். சந்திரா, அருண் இருவருக்கும் டீ போட்டு கொண்டு வரும் நவீன் தன்னை ஸ்கூல் டென்னீஸ் டீமில் சேர்த்துக் கொள்ள மறுப்பதாகவும் அதற்கான காரணம் குண்டாக இருக்கிறேன் என்றும் சந்திராவிடம் சொல்கிறான். சந்திரா வெயிட் குறைக்கும் வழியொன்றை நவீனுக்கு கூறிவிட்டு தன் அறைக்குள் செல்கிறாள் அருணுடன் அதன்பின் நவீன் டிவி பார்ப்பதில் மும்மரமாகிறான். சந்திரா அருணை மிக நெருக்கமாக நெருங்கி ஏன் போன் செய்தால் பேசுவதில்லையென்றும்? புதிதாய் ஒருத்தி வந்ததும் தன்னை மறந்துவிட்டாயா? என்றும் கேட்கிறாள். அருண் இல்லையென்று சொல்கிறான். சந்திரா அருணிடம் நீ இல்லையென்றால் செத்துவிடுவதாக கூறி அழுகிறாள். இருவரும் ஆரத்தழுவிக் கொள்கின்றனர். உடலுறவு கொள்கின்றனர். கதையில் முதல் முடிச்சு இங்கே விழுகிறது.

அருணின் கதாபாத்திரமானது சிக்கலானது. ஊஞ்சல் போன்றது. சுசியுடன் அருண் மகாபலிபுரம் செல்லும் போது சுசி அருணை காதலிப்பதாக சொல்கிறாள். சுசி திரும்ப லண்டன் செல்ல விருப்பமில்லையென்றும் இங்கேயே தங்கி நல்ல மனைவியாக, குழந்தைகளுக்கு தாயாக இருக்க விரும்புவதாக கண்ணீர் மல்க அருணிடம் கூறுகிறாள். அருண் மெளமாக இருக்கிறான். சுசி அவன் மெளனத்தை பார்த்து யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்கிறாள். அருண் இதற்கும் இல்லையென்று பதில் தருகிறான். கதையில் இரண்டாவது முடிச்சு இங்கே விழுகிறது. ஊஞ்சலின் இருமுனைகளிலும் கட்டப்பட்ட இறுக்கமான கயிறுகள் சந்திரா சுசிலா. ஒருமுனை ஊஞ்சலை தன்பக்கம் இழுக்க மறுமுனை ஊஞ்சலை அதன்பக்கம் இழுக்க ஊஞ்சலானது சமநிலையை அடையாமல் காமவெளியில் ஆடிக்கொண்டிருக்கிறது. முடிவில் எந்த முனை ஜெயித்ததென்பதே மீதிக்கதை.
 

Sunday, January 10, 2010

33வது புத்தக காட்சி கிணற்றில் இறைத்து வந்த புத்தகங்கள்


பொங்கல் விழாவிற்கு ஊருக்கு போகும் போது வழியில் இரண்டு நாள் சென்னையில் தங்கி புத்தக காட்சிக்கு செல்ல முடிவு செய்திருந்தேன். அது போலவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஹைதராபாத் காச்சிகுடா எக்ஸ்ப்ரஸ்சில் சொந்த விசயமாக சென்னை வருவதாக சொன்ன அலுவலக நண்பரும் நானும் ஏறிக்கொண்டோம். ரயில் பயணம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. அவர் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வமில்லாதவர் ஆனால் நான் புத்தகங்கள் படிப்பது ஏதோ எழுதுவேனென்று அவருக்கு தெரியும். நான் எவ்வளவோ மறுத்தும் நாம் எழுதிய கதைகளை சொல்லச்சொல்லி கேட்டார். அருகில் யாரும் தமிழ் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு நானும் சொல்லத்துடங்கினேன். என் சிறுகதையில் தொடங்கிய எங்கள் உரையாடல் சுஜாதாவின் ‘ஆ’, s.ramakrishnan ன் ‘பனாரஸ்’ என்று நீண்டு கொண்டே சென்றது. அவரும் அவர் அம்மா சொன்னகதைகளை சொன்னார். இரவு 10 மணி வரை எங்கள் உரையாடல் தொடர்ந்தது.
                     
அடுத்த நாள் காலை (நேற்று) நல்ல மனது கொண்ட ஆட்டோ காரனின் பேச்சைக்கேட்டு சென்னை எக்மோரிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் 23C பஸ்சில் ஏறுவதற்கு பதிலாக opposite directionல் செல்லும் 23C பஸ்சில் ஏறி அதன் பின் சற்று தூரத்தில் இறங்கி மீண்டும் எக்மோர் வந்து  சைதாப்பேட்டை செல்லும் 23C பஸ்சில் ஏறினோம். கூட வந்த நண்பர் சொன்னார் ”சென்னை ஆட்டோகாரங்களை மட்டும் நம்பவே கூடாது, திருட்டுபயக”              

நேற்று மதியம் 3 மணி வாக்கில் புத்தக காட்சிக்கு சென்றிருந்தேன். பட்டியலிட்டிருந்த வாங்க வேண்டிய புத்தகங்களை ஒவ்வொன்றாக வாங்கிக்கொண்டிருந்தேன். நிலாரசிகனை சந்தித்து இரண்டு நிமிடங்கள் பேசினேன். உயிர்மையில் புத்தகங்கள் வாங்கிக்கொண்டிருந்த போது மனுஸ்யபுத்திரன் சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். ராமகிருஸ்ணன் வருவார் என்று காத்திருந்து பார்த்தேன் வரவில்லை. இதே போலவே இரண்டாவது நாளும் சென்றது.

புத்தக காட்சி கிணற்றில் நான் இறைத்து வந்த புத்தகங்கள்

  1. இமையம் – நாவல் – ஆறுமுகம்
-          கோவேறு கழுதைகள்
-          செடல்
  1. இமையம் – சிறுகதை தொகுப்பு – வீடியோ மாரியம்மன்
  2. கி.ராஜநாராயணன் – சிறுகதை தொகுப்பு - தாத்தா சொன்ன கதைகள்
  3. நாஞ்சில் நாடன் – சிறுகதை தொகுப்பு – சூடிய பூ சூடற்க
  4. வண்ணதாசன் – சிறுகதை தொகுப்பு – கிருஸ்ணன் வைத்த வீடு
-          சின்னுமுதல் சின்னுவரை
  1. பாவண்ணன் – சிறுகதை தொகுப்பு –இரண்டு மரங்கள்
  2. விக்ரமாதித்யன் – சிறுகதை தொகுப்பு –  அவன் அவள்
  3. வண்ணநிலவன் – நாவல் – கடல் புரத்தில்
- கம்பாநதி
     9. ராமகிருஸ்ணன் – குருங்கதை – நகுலன் வீட்டில் யாருமில்லை
    10. சாருநிவேதிதா  – சிறுகதை தொகுப்பு - மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்
    11. ஜெயமோகன் - குறுநாவல் – அனல் காற்று  
    12. ஜே. மாதவராஜ் – வலையுலகில் வெளியான சிறுகதைகளின் தொகுப்பு – மரப்பாச்சியின் சில ஆடைகள்
    13. சந்திரன் – அறிவியல் புனைகதை தொகுப்பு – சுஜாதா நினைவுப்புனைவு 2009
    14. நிலாரசிகன் – சிறுகதை தொகுப்பு – யாரோ ஒருத்தியின் டையிரிக்குறிப்புகள்

இதை தவிர என் அண்ணன் மகளுக்காக Nursury Rhymes, மலரும் மலர் போன்ற குழந்தைகள் பாடல் புத்தகளும் வாங்கினேன்.

ஒவ்வொரு நூலாக படித்து நூல்கள் ஏற்படுத்தும் உண்ர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Sunday, January 3, 2010

குரங்கு - சிறுகதை - வல்லினம் இணைய இதழ்




1


அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது. ப்ளூரசன்ட் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கடிகாரத்தின் முள்கள் சிகப்புநிற ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் தோற்க்கும் என்று தெரிந்தும் பெரிய முள் சின்ன முள்ளை முந்திக்கொண்டு நகர்ந்தது. விஜயராஜ் பெண்தோழியுடன் படுக்கையறையை பகிர்ந்து கொண்டிருந்தான். அன்றைய தினத்தின் தோல்விகளின் வெறுப்பை அவள் மீது காட்டினான். உணர்ச்சிகளின் வெளிப்பாடான அவளின் முனகல்கள் அவனின் வசைகளில் மோதி சிதறியது. வசை, முனகல், இறுக்கம், வியர்வை, தேகத்தின் தேடல் எல்லாம் முடிந்து அறை முழுவதும் நிசப்தம் நிலவியது.


கடிகாரத்தின் முள்கள் பின்னோக்கி சுழன்றன. சில பகலிரவு இரவுபகல்களுக்கு முன்னால்,


"ஹலோ மிஸ்டர் விஜயராஜ்?" என்ற பெண்ணின் குரல்


"ஆமாம், விஜயராஜ் பேசுறேன்"


"நான் போக்கஸ் டெக்னாலஜி ஹட்ச்.ஆர் மேனேஜர் சரிதா பேசுறேன்"


"தயவுசெய்து ஒரு நிமிடம் காத்திருங்க" என்று இருக்கையிலிருந்துஎழுந்து கேன்டின் சென்றான். "இப்ப சொல்லுங்க சரிதா, என்ன விசயம்?"


"போனவாரம் நீங்க அட்டண்ட் செய்த இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கிங்க. உங்களோட வருட சம்பளம் பதினைந்து லட்சம். இது பத்தின முழுவிவரம் உங்க மெயிலுக்கு அனுப்பியிருக்கோம். உங்களோட கன்பர்மேசன் மெயிலை இன்னைக்கு சாங்காலத்துக்குள்ள அனுப்பிடுங்க. மற்ற விவரங்களை உங்களோட மெயில் பார்த்துட்டு போன் செய்கிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாள் சரிதா.


மதியஉணவு வேளையின் போது,


"நான் யு.எஸ் டெக்னாலஜி ஹட்ச்.ஆர் மேனேஜர் கீர்த்தி பேசுறேன். நீங்க கேட்டிருந்த வருடசம்பளம் பதினேழுப்புள்ளி ஜந்து லட்சம் தர முடிவு செய்திருக்கிறோம்"


மாலைப்பொழுதின் தேநீர் அருந்தும் வேளையில்,


"நான் ஜே.ஈ டெக்னாலஜி ஹட்ச்.ஆர் மேனேஜர் அனுசா ராணி பேசுறேன். உங்களுக்கு வருட சம்பளம் பதினேட்டு லட்சம் தருகிறோம். முதல் மாத சம்பளத்தோடு எழுப்பத்தி ஜந்தாயிரம் ரூபாய் ஜாயினிங்க் போனஸ் தருகிறோம்"


"இல்ல ராணி, நான் கேட்டிருந்தது இருபது லட்சம். இருபது லட்சம் தருவதா சொன்னால் நாம மேற்க்கொண்டு பேசலாம்"


"உங்களோட ஆறுவருட அனுபத்திற்கு இந்த தொகை அதிகம். சொன்னதற்கு தவறா எடுத்துக்காதீங்க. எங்க கம்பெனி பாலிசியை மீறி உங்க ஒருத்தருக்கு தான் நாங்க இவ்வளவு அதிகமான சம்பளம் தருகிறோம். அடுத்த வருடம் எங்க கம்பெனியோட யு.எஸ் ஆபிஸ்ல இரண்டு ஓபனிங்க்ஸ் வரும். நான் இப்பதான் செக் செய்தேன் உங்க ரிசியூம் அந்த வேளைக்கு சரியா பொருத்தம் ஆகுது. ஒருவருடம் இங்க அமிர்பேட் ஆபிஸ்ல வேலை பாருங்க ஒருவருடம் கழித்து யு.எஸ்க்கு அனுப்புறோம்"


"இதெல்லாம் சரிப்பட்டு வராது. நான் ஜாயின் செய்த ஒரு வாரத்தில என்னை யு.எஸ் அனுப்புறதா சொன்னால் வருட சம்பளம் பதினெட்டு லட்சத்துக்கு ஒத்துக்கிறேன்"


மறுமுனையில் சற்றுநேரம் மெளனம் நிலவியது,


"சரி, இதை நான் உடனே முடிவு செய்ய முடியாது. மேலதிகாரிககிட்ட பேசிட்டு உங்களுக்கு போன் செய்கிறேன்"


இவன் திருச்சி ஆர்.இ.சியில் (R.E.C )எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் துறையில் பொறியல் பட்டம் பெற்றவன். நன்கு தொழில் தெரிந்தவன். இவனிடம் யாராவது வந்து எனக்கு ஆப்பிள் ஜ-பாட் போன்று செய்து தர முடியுமா என்று கேட்டாள் மறுக்காமல் செய்து தரக்கூடிய திறமைவாய்ந்தவன். காலை எழுந்தால் அரை மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பான். அந்த அளவு வேகம். நோ ஸ்மோகிங்க் போர்ட் போட்டிருந்தால் அங்கு நின்று சிகரெட் குடிப்பவன். இரவில் தூங்கப்போனால் அவன் மூளையிலிருக்கும் நிறைவு பெறாத வேலைகள் (Pending Task)பூஜ்ஜியம். இதன் காரணமாக இவன் வேலை முடிக்காமல் வீடு திரும்புவது இல்லை. இவனை போன்றவர்கள் நம்மில் பலர் இருக்கின்றனர். இந்த கதையை படிக்கும் நீங்களும் இவனாக இருக்கலாம்.


2


கடிகாரத்தின் முள்கள் முன்னேறி சென்று கொண்டிருந்தன. மணி பனிரெண்டு ஆகியது. விஜயராஜ்க்கு வந்த தொலைபேசி அழைப்பு அறையிலிருந்த நிசப்சத்தை போக்கியது.


"நான் மூன் டெக்னாலஜி எம்.ஆர் மற்றும் ஹட்ச்.ஆர் மேனேஜர் ரோபோ எண் 001002005 பேசுறேன்"


"யாருங்க இந்த நேரத்தில் விளையாடுறது. காலையில போன் செய்யுங்க ப்ளிஸ், இரண்டு நாள் சரியா தூங்கலை"


"சரி, உங்களுக்கு புரிகிற மாதிரியே பேசுறேன். நீங்க இண்டர்வியூவில் செலக்ட் ஆகியிருக்கீங்க. உங்களுக்கு விருப்பமென்றால் ஸட்டல் இன்னும் ஒரு மணி நேரம் பேகம்பேட் ஏர்போர்ட்டில் இருக்கும், அதில் ஏறிக்கிட்டா மூன்ல இருக்கிற எங்க ஆபிஸ்க்கு வந்திடலாம்"


"மூன்ல வேலையா!, சம்பளம் எவ்வளவு?"


"ஒரு கோடி" ஆ வென்று வாயைத்திறந்தான்.


"துணி எல்லாம் அழுக்காயிருக்கு துவைக்கணும். துணியை பேக் செய்யணும். கிளம்புறதுக்கு நேரமாகும் ஒரு மணி நேரம் பத்தாது"


"நீங்க துணியே இல்லாம வந்தாலும் எங்களுக்கு ஆட்சோபனை இல்லை. துணி எடுத்துட்டு வந்தாலும் மூன்ல உபயோகப்படாது. அதனால நீங்க இப்பவே பேகம்பேட் ஏர்போர்ட்க்கு கிளம்புங்க"


விஜயராஜ் சரியென்று கூறிவிட்டு படுக்கையில் கிடந்த பெண் தோழியின் நெற்றியின் முத்தமிட்டு பேகம்பேட் ஏர்போர்ட் நோக்கி சென்றான்.


3


சந்திரமண்டலம் காவல்நிலையத்தின் வாசலில் இரண்டு பெண் ரோபோக்கள் காவலுக்காக நின்றிருந்தன. இரண்டு ஆண் ரோபோக்கள் விஜயராஜை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்துக்குள் சென்றனர்.


விஜயராஜ்க்கு இருக்கை கொடுத்து அமரச்சொன்னது அவனை விசாரிக்கப்போகும் ஆண் ரோபோ. விஜயராஜிம் அமர்ந்தான்.


"என்ன பிரச்சனை?" என்று விஜயராஜை அழைத்து வந்த ரோபோக்களை பார்த்து கேட்டது விசாரிக்கப்போகும் ரோபோ.


"இவர் பேக்ட்ரி பக்கமா சுற்றிக்கொண்டிருந்தார். எங்களை பார்த்ததும் இவர் வேகமாக ஓடி ஸட்டலுக்குள் ஒளிஞ்சிட்டார். ஸட்டலுக்குள் இவரை தேடிட்டு ஆளைக்காணோமென்று ஸட்டலை விட்டு கீழே இறங்கின போது ஸட்டல் ஆன் ஆகிற சப்தம் கேட்டு உள்ளே போய் பார்த்தா பைலட் சீட்ல இவர் உட்கார்ந்திருந்தார்"


"உங்களுக்கு ஸட்டல் ஓட்டுகிற லைசன்ஸ் இருக்கா? இருந்தா காட்டுங்க"


"லைசன்ஸ் இல்ல. எனக்கு இங்க இருக்க பிடிக்கலை. என்னை பூமிக்கு அனுப்பிடுங்க"


"நீங்க தப்பிக்க முயற்சி செஞ்சிருக்கீங்க. இனிமே இப்படி முயற்சி செய்யாதீங்க. இவரை அவரோட ஆபிஸ்ல போய்விடுங்க" என்று விஜயராஜை விசாரணை செய்த ரோபோ அழைத்து வந்த ரோபோக்களிடம் கூறியது.


வாசலில் நின்றிருந்த பெண் ரோபோ விஜயராஜை பார்த்து கண் அடித்தது.


"இந்த ரோபோக்கு இதான் வேலை. நீங்க இதை இரண்டு நிமிடம் தொடர்ந்து பார்த்தால் கண்ணடிக்கும். இதற்கு வேறெதுவும் தெரியாது" என்றது விஜயராஜை அழைத்துச்செல்லும் ரோபோக்களில் ஒன்று.


"இங்கு மனிதர்களே இல்லாத போது எதற்கு காவல்நிலையம்?" என்று கேட்டான் விஜயராஜ்.


"இங்கிருக்கும் ரோபோக்கள் ஆறறிவு கொண்டது. சுயமாக சிந்திக்க கற்றுக்கொண்டது. சில சமயங்களில் சாப்ட்வேர்களை திருடி விற்கும். இப்படித்தான் இரண்டு நாள்களுக்கு முன்பு ரோபோ ஒன்று சாப்ட்வேர் திருடி விற்க முயன்றது. அதை கையும்களவுமாக நான் பிடிச்சேன். பிடித்த பிறகு அதன் மெம்மரியிலிருந்த டேட்டாக்களை நீக்கிவிட்டேன். இப்போது அது ஒரு ஜடம்" என்று கூறி பொக்கை வாய் கிழவன் போல் இரண்டு ரோபோக்களும் சிரித்தன.


4


விஜயராஜின் அறைக்குள் ஒருவன் வந்தான்.


"ஹலோ விஜயராஜ், எப்படி இருக்கீங்க? வேலை எப்படி போயிட்டிருக்கு?" என்று கேட்டான் உள்ளே நுழைந்தவன்.


"நான் நல்லாயிருக்கேன். வேலை எனக்கு சுத்தமா பிடிக்கலை. பூமியில் நான் செஞ்ச வேலைக்கும் இப்ப செய்ற வேலைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பூமியில டிசைன் இஞ்சினேயரா இருந்தேன் இங்க டெக்னிக்கல் ரைட்டராக இருக்கேன். சிலுக்கூர் பாலாஜி கோயிலை பதினோரு சுத்திசுத்தி தான் என் நண்பனுக்கு யூ.கே யில் வேலை கிடைத்தது. அவன் பேச்சை கேட்டு நானும் சுத்தினேன். ஆனா எனக்கோ மூன்ல கிடைச்சிருக்கு. எல்லாம் தலையெழுத்துப்படி தான் நடக்கும். இந்த இடத்தை விட்டு தப்பிக்க பத்து தடவை முயற்சி பண்ணிட்டேன். எப்படியோ பிடிச்சிடுதுங்க இந்த ரோபோக்கள். நீங்க யாரென்று சொல்லலையே?"


"என் பெயர் அசோக்பாபு. நீங்க வேலை செய்ற கம்பெனியோட சி.இ.ஓ"


"நீதான் இந்த ரோபோக்களை கட்டி மேய்க்கிற பெரிய ரோபோவா?"


"மனுசங்களை வச்சி மேய்க்க முடியாதுன்னு தான் ரோபோ வச்சி மேய்க்கிறேன். நான் இங்க வந்த விசயத்தை விசாரிக்காம ஏதேதோ பேசிட்டுயிருக்கேன். உங்களோட தேவைகள் என்ன? ஏன் அடிக்கடி பூமிக்கு தப்பித்து போக முயற்சி செய்றீங்க? "


"முதல்ல இங்க பார்க்கிற வேலை பிடிக்கலை"


"கொஞ்ச நாள் இந்த வேலையை பாருங்க. நீல் ஆம்ஸ்ட்ராங்க் சிட்டியில் நடக்கிற லேப் கண்ஸ்ட்ரக்சன் முடிஞ்ச பிறகு உங்களை அங்கே மாத்திடலாம்"


"இரண்டாவது வாய்க்கு ருசியா காரசாரமா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது. இப்படியே போனா என் நாவுக்கு ருசியே தெரியாம போயிடும். நாளையிலிருந்து எனக்கு ஹைதராபாத் பாரடைஸ் பிரியாணி வேணும்"


"இதுக்கென்ன நல்லா செய்திடலாம். நம்ம குக்கிட்ட சொன்னா ஹைய்தராபாத் பிரியாணியிலிருந்து வர்ற வாசனையை கேப்யூலுக்குள் கொண்டு வந்துடுவாங்க. அந்த கேப்யூலை ஹைதராபாத் பிரியாணியென்று நம்பி சாப்பிட்டா பிரியாணி சாப்பிட்ட முழு திருப்தி கிடைச்சிடும், இல்ல ஒரிஜினல் பிரியாணி தான் வேணும்னா நாளைக்கே ரெடி பண்ண முடியாது. கொஞ்ச நாளாகும். உங்களோட அடுத்த தேவை?"


"மூன்றாவது செக்ஸ் வச்சிக்க ஒரு இளம் பெண் தேவை"


"உங்களோட இந்த தேவை என்னோட வேலையே மாத்திடும் போல தெரியுது. என்னுடைய ஊழியர்களுக்காக இது கூட செய்யமாட்டேனா! ரோபோ டிசைனரை அனுப்பி வைக்கிறேன். உங்களோட விருப்பத்தை அவர்கிட்ட சொன்னா போதும் மார்லின் மண்ட்றோ மாதிரியே ஒரு பெண் ரோபோ செய்து கொடுத்துடுவார். நான் பேப்பர்ல படிச்சேன் ஜப்பான்ல புணர்ச்சிக்காக ரோபோக்களை பயன்படித்துறாங்களாம். அடுத்து ஆள் எடுத்தா ஜப்பானிலிருந்து எடுக்கணும்"


"முடியாது. என்னால ரோபோக்களோடு செக்ஸ் வச்சிக்க முடியாது. செக்ஸ் வைத்துக்கொண்டால் முழுமையான பெண்ணுடன் தான் வைத்துக்கொள்வேன். ரோபோக்களூடன் வாழும் நீயும் ரோபோவாகத்தான் இருப்பாய்"


"நான் முழுமையான மனிதன்"


"எனக்கு நம்பிக்கையில்லை, இதோ சோதித்துவிடுகிறேன்" என்று கூறி அசோக்பாபுவின் மூக்கில் ஓங்கி குத்துவிட்டான் விஜயராஜ். அசோக்பாபுவின் மூக்கிலிருந்து இரத்தம் கொட்டியது. பதிலுக்கு அசோக்பாபு விஜயராஜின் தாடையில் குத்தினான். விஜயராஜின் மேலுதடு பல்லில் அடிபட்டு உதட்டிலிருந்து இரத்தம் வழிந்தது. நேப்கீனால் மூக்கிலிருந்து வழிந்த இரத்தத்தை பொத்தியபடி பேசினான் அசோக்பாபு.


"உனக்கு இந்த வாசகம் சரியாக பொருந்தும். மனிதனின் மூதாதையர் குரங்கு. குரங்கிலிருந்து மனிதன் தோன்றி பலநூறு ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்னும் எங்கோ மூளையின் ஒர் இடத்தில் குரங்கின் குணாதிசயங்கள் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. உன்னை இந்த ரோபோக்காளால் சமாளிக்க முடியாது. தினமும் சூரியன் உதிப்பது போல் உனக்குள்ளும் தினமொரு தேவைகள் உதயமாகி கொண்டிருக்கின்றன. ஸட்டல் உனக்காக பேக்டரி வாசலில் காத்துள்ளது நீ இப்போதே உன் பூமிக்கு போகலாம். குட் பை"


5


பதற்றத்துடன் எழுந்தவன் அந்தரங்கத்தில் சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியை பார்த்தான். கடிகாரத்தில் மணி பத்தென காட்டியது. சூரியக்கதிர்கள் கண்ணாடி ஜன்னலை ஊடுருவிக்கொண்டு கட்டில்வரை வந்திருந்தன. விஜயராஜின் செல்போன் சிணுங்கியது.


" ஜே.ஈ டெக்னாலஜி ஹட்ச்.ஆர் மேனேஜர் அனுசா ராணி பேசுறேன்."


"சொல்லுங்க ராணி"


"நீங்க கேட்டிருந்த சம்பள தொகை இருபது லட்சத்தோடு உங்களை ஆன்-சைட் அனுப்ப முடிவு செய்திருக்கோம்"


"ரொம்ப சந்தோசம். இப்ப இருக்கிற கம்பெனியில இரண்டு மாசம் நோட்டீஸ் பீரியட் கேட்பாங்க. இன்னும் ஒரு வாரத்தில ஜாயினிங்க் டேட் உறுதி செய்து உங்களுக்கு சொல்றேன்"


"இல்ல விஜயராஜ், இது ரொம்ப அவசரமான வேலை. நீங்க உடனே கிளம்பி பேகம்பேட் ஏர்போர்ட் போங்க. அங்க உங்களுக்காக ஸட்டல் காத்திட்டிருக்கு. ஒரு மணி நேரத்தில போயிடுங்க"


"ஆன்-சைட் எந்த நாடு?"


"நீங்க வேலை பார்க்க போற இடம் நாடில்லை. பூமியின் துணைக்கோளான சந்திரனுக்கு"


ஆனந்த தாண்டவத்தில் துள்ளிக்குதித்தவன் பேகம்பெட் ஏர்போர்ட் நோக்கி சென்றான்.




முற்றும்.


- கிரகம்

வல்லினம் இணைய இதழ் 2010 ஜனவரி மாத இதழில் வெளியாகியுள்ளது.
http://www.vallinam.com.my/issue13/story1.html

பார்வைகள்