Saturday, April 7, 2012

மொழியின் கடைசிப் பெண்


மொழியின் கடைசிப்  பெண்

- சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள எனது இரண்டாவது சிறுகதை.

தமிழ்நாட்டில் அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு மூன்றுவயதாய் இருந்த போது வட இந்தியாவில் அப்பா வேலை பார்த்து வந்தார். அப்பாவின் அப்பா தமிழ்வாத்தியார் அதனால் அப்பாவிற்கு தமிழ் நன்கு எழுதப்படிக்க வரும். அம்மா வட இந்தியாவில் பிறந்தவள். தமிழ் பேசுவாள் தவிர எழுத படிக்க வராது. அம்மா அப்பாவிடம் தமிழ் எழுதப்படிக்க கற்று வந்தாள். அப்பா வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். அம்மா மாசமாக இருந்தாள். பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்ததால் பிரசவத்திற்கு பின்பு சென்னை செல்வோம் என்று அம்மா கூறினாள். அப்பா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் ரயில்மறியல் நடந்ததால் நாங்கள் சென்ற ரயில்வண்டி தமிழ்நாடு எல்லைக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அம்மாவிற்கு பிரசவவலி வந்தது. ரயில் காட்டினுள் நிறுத்தப்பட்டிருந்ததால் பக்கத்திலிருந்த டவுண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் வழியிலே அம்மா இறந்து போனாள். அம்மா இறப்பதற்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் காரணம் என அப்பா நம்பினார். மொழியை அரசியலாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று அரசியல்வாதிகளின் மீது கோபம் கொண்டார். சில நாட்களில் மற்றவர்களிடம் தமிழில் வேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அப்பாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த போது பேருந்து நிறுத்ததிலிருந்த ஒருவன் தலையில் அடித்தான். யாரிவன் என்று யோசிப்பதற்குள் மயக்கம் வந்தது. சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு கீழே விழுந்தேன்.

நீளமான வால் கொண்ட வெள்ளை குதிரையை அழகாக ஜோடித்திருந்தனர். அதன் முதுகில் சிவப்புநிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. குதிரையின் மேல் நானும் என் காதலியும் அமர்ந்திருந்தோம். சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியாய் அருகில் நிற்பவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நடந்து சென்ற குதிரை சிறிது நேரத்தில் பறக்கத் துவங்கியது. உடல் லேசாக குலுங்கியது. வாய் திறந்து பேச முயற்சி செய்த போதும் பேச முடியவில்லை. கைகளை கொண்டு குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்த போதும் கைகளை முன்னால் கொண்டுவர முடியவில்லை. சலப்பென்று உப்புத்தண்ணீர் முகத்தில் விழுந்தது.

முழித்துப்பார்த்த போது சூரியஒளி முகத்தில் விழுந்தது. எழுந்து அமர்ந்தேன். படகை ஒட்டிக்கொண்டிருந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தான். எனக்கு எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. எதற்காக படகில் பயணம் செய்கிறேன்? என்று தெரியவில்லை. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது. வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. உணவு எடுத்து வந்தவன் பொட்டலத்தை என் முன்னே வைத்துவிட்டு கைகள் கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட்டு வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை எடுத்துவிட்டான்.

“நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?” எழுந்து நடந்து படகு ஓட்டுபவனின் அருகில் சென்றேன்.

“நான் கேட்பது காதில் கேட்கலை. நீங்கள் யார்? எங்கே என்னை அழைத்துச் செல்கிறீர்கள்” என்று சத்தமாக அவன் அருகில் சென்று கேட்டேன். படகுஓட்டுபவன் பதிலேதும் கூறாமல் உணவு பொட்டலத்தை நோக்கி கை காட்டினான். அவன் என்னை சாப்பிடச் சொல்கிறான் என்பது புரிந்தது.

“நீங்கள் சொமாலியா தீவிரவாதிகளா? என்னை பணத்திற்காக கடத்திச் செல்கிறீர்களா?.....நான் ஒரு எலக்ட்ரானிக் இஞ்ஜினேயர். நான் வடிமைத்த எலக்ட்ரானிக் இயந்திரம் நாளை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அதை நான் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன். தயவு செய்து என்னை சென்னையில் விட்டு விடுங்கள்”

உணவு கொடுத்தவன் என்னை சாப்பிடச் சொன்னான். அவனருகில் நெருங்கி அவன் கழுத்தை கைகளால் நெறித்தேன். அவன் என் நெஞ்சில் கைவைத்து உதறி தள்ளியதில் கீழே விழுந்து தலை மரக்கட்டையில் இடித்தது. மயக்கம் வருவது போல் இருந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்த போது கடற்கரை மணல் மீது படுத்துக்கிடந்தேன். அருகில் பொட்டலம் ஒன்று கிடந்தது. நன்கு பசித்தது. பொட்டலத்தை எடுத்து பார்த்தேன். அதனுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன். காதில் வலி எடுப்பது போல் இருந்தது. சப்பாத்தியை சாப்பிட்டேன். சப்பாத்திக்கு வதக்கிய தக்காளி சுவையாக இருந்தது. கடத்தப்பட்டு தனியாக உச்சிவெயில் கடற்கரை மணலில் நின்று உண்ணும் போதும் நாவு சுவையை மறப்பதில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம் தான் என்பது போல் இருந்தது. கடற்கரை மணலிலே நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.

அதிகமான தென்னை மரங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்பட்டிருந்தன. சூரிய ஒளிக்கதிர்கள் தென்னங்கீற்றின் இடையில் புகுந்து தரையில் விழுந்தன. அங்கும் ஆட்கள் தென்படவில்லை. மரநிழலில் நடந்தேன். காய்ந்த இலைகள் தரையில் கிடந்தன. உள்ளே நடந்து செல்ல காடு போல் தெரிந்தது. பறவைகளின் சப்தம் மட்டும் கேட்டது. சப்தமாக கத்தினேன். பறவைகள் கிளைகளை விட்டு பறக்கும் சப்தம் கேட்டது. சிறுதுநேரத்தில் என் குரலே எனக்கு கேட்டது. பயமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த கடற்கரை, கடல் எதுவுமே இப்போது தெரியவில்லை.

இரவு ஆரம்பமாகியிருந்தது. வானத்தில் நிலவும் வந்திருந்தது. என்னை கடத்தி வந்தவர்கள் எங்கே என்று தேடினேன். எவரும் தென்படவில்லை. எதற்கு என்னை கடத்தி வந்தார்கள்? என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்? இது எந்த இடம்? எப்போது என்னை விடுதலை செய்வார்கள்? மனிதர்கள் இல்லாத இந்த இடத்தில் இறந்துவிட்டால் என் உடலை கடத்தியவர்கள் என் வீட்டிற்கு அனுப்புவார்களா? இல்லை கழுகுகள் தின்றுபோகட்டும் என்று விட்டுவிடுவார்களா? விபரீதமான கேள்விகள் மனதில் எழுந்தது. பொட்டலம் ஒன்று கடற்கரை மணலில் கிடந்தது. பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. இந்த பொட்டலத்தை யார் இங்கே போட்டது? கடத்திவந்தவர்களா இல்லை தன்னை கண்காணித்து வருபவன் இந்த பொட்டலத்தை இங்கே போட்டிருப்பானா?

தூரத்தில் வீடொன் று இருப்பது தெரிந்தது. வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப்பார்தேன். யாரும் இல்லை. வீட்டின் சுவரில் பெண் ஒருத்தியின் கருப்பு வெள்ளை புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்த பெண் ஆடையில்லாமல் பிறப்புறுப்பினை மட்டும் இலையால் மறைத்து கட்டியிருந்தாள். அவள் கருப்பு நிறமாக இருந்தாள். சிரிக்கும் போது தெரிந்த பற்கள் மட்டும் ஓரளவு வெள்ளையாக இருந்தது. யாரோ நடந்துவரும் சப்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியவந்து மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன்.

கிழவி ஒருத்தி கைகளில் மீன்களுடன் நடந்துவந்தாள். புகைப்படத்தில் பார்த்த பெண்போல் இருந்தாள். ஆனால் ஆடை அணிந்திருந்தாள். மேலே ப்ளவுஸ் கீழே பாவாடை. கிழவியின் வாய் அசைவை வைத்து பார்க்கும்போது யாருடனோ பேசிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அவளின் முன்னால் பின்னால் அருகில் எவரும் இல்லை. மரத்தின் பின்னால் நின்று கொண்டு அவளை நோட்டமிட்டேன்.

கிழவி துவைத்து வந்த துணிகளை மரத்தின் கிளைகளில் காயவைத்தாள். மீன்களை வீட்டினுள் வைத்துவிட்டு மரத்தின் நிழலில் வந்து படுத்துக்கொண்டாள். கிழவிக்கும் கடத்திவந்தவர்களுக்கும் தொடர்பு இருக்குமென்று நினைத்தேன். சப்பாத்தியை கடற்கரை மணலில் போட்டது கிழவியாக இருக்ககூடும்.

கிழவியிருக்கும் வீட்டை தள்ளி கொஞ்ச தூரத்தில் வேறோரு வீடு இருந்தது. வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டினுள் மரக்கட்டில், பழைய சீலிங்பேன், தூசிபடிந்த ஜன்னல் கதவுகள், பழுப்பு நிறத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தது. வேறெதுவும் வீடு இருக்கிறதாவென்று காட்டை சுற்றி வந்தேன். காட்டில் வேறுயாரும் இல்லை. காடு அதனை சுற்றிலும் கடல். இது ஒரு தீவு. காட்டினுள் நானும் அந்தக்கிழவியும் மட்டும் இருக்கிறோம்.

கடத்தியவர்கள் அல்லது கிழவி கடற்கரை மணலில் உணவுப்பொட்டலத்தை போடவருவார்கள் என்று கடற்கரையில் காத்திருந்தேன். கிழவி நடந்து வந்தாள். அவள் கையில் அரிக்கண்விளக்கு இருந்தது. நடக்கும்போது ஏதோ பேசிக் கொண்டே நடந்தாள். அவளை சுற்றி யாரும் இல்லை. இவள் யாருடன் பேசுகிறாள் என்பது புரியவில்லை. இவள் பைத்தியமாக இருப்பாளோ? என்று கூட நினைத்தேன். அரிக்கண்விளக்கை கீழே வைத்துவிட்டு மணலில் அமர்ந்து கொண்டாள். கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் பேசுவது போல் வாயை முணுமுணுத்தாள். ஓவென்று கத்தினாள். அகோரமாக சிரித்தாள். கிழவி எழுந்து அரிக்கண்விளக்குடன் வீட்டிற்கு நடந்து சென்றான். உணவுப்பொட்டலம் எங்கும் தென்படவில்லை. அன்றைய இரவு உணவு உண்ணாமல் தூங்கினேன்.

வீட்டின் கதவு பலமாக தட்டும் சப்தம் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறக்கச்சென்றேன். கடத்தல்காரர்கள் வந்திருப்பார்கள் . அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஊர்போய் சேர வேண்டும். கதவை திறந்தால் கிழவி நின்று கொண்டிருந்தாள். மெளனமாக நின்று கொண்டு என்னை மேலிருந்து கீழாக நோட்டமிட்டாள். நான் கிழவியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் உள்ளே வந்தவள் என் கைகளை பற்றி இழுத்துச் சென்றாள். நடக்கும்போது பேசிக்கொண்டே நடந்தாள். எனக்கு அவளது பேச்சு புரியவில்லை. மொழி புரியவில்லை.

அவள் வீட்டினுள் அழைத்துச் சென்று சுட்ட மீன் துண்டுகளை என் கைகளில் கொடுத்தாள். மீன் நன்கு வெந்திருந்தது. என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். இவள் கடத்தல் கூட்டத்தை சேர்ந்தவளாக இருக்க முடியாது. அவளிடம் ஆங்கிலத்தில் பேசினேன் பதிலேதும் இல்லை. தமிழில் பேசினேன் பதிலேதும் இல்லை. கிழவி பேசிய மொழி எனக்கு புரியவில்லை. இவளிடம் எவ்வாறு கேள்விகள் கேட்பதென்று யோசித்தேன். எனக்கு தெரிந்த மொழிகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

என் கைகளை பிடித்து கூட்டிச்சென்றாள். சிறுசெடிகளை பறித்து கைகளில் வைத்துக் கொண்டாள். என் கைகளிலும் சில செடிகளை கொடுத்தாள். காட்டிலிருந்து கடற்கரை நோக்கி நடந்தோம். கடற்கடரையில் பாறைகள் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றாள். பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டோம். செடிகளை பிய்த்து நீரின் மீது தூவிவிட்டாள். சிறிது நேரத்தில் நீருக்கடியிலிருந்து மீன்கள் செடிகளை தின்ன மேலே வந்தன. அப்போது கிழவி கையினால் மீன்களை பிடித்தாள். இப்படியாக பறித்து வந்த செடிகள் எல்லாத்தையும் நீரின் மீது தூவி நிறைய மீன்கள் பிடித்தாள். கிழவி சந்தோஷமடைந்தாள்.

இரவில் கடலின் சப்தம் பலமாக இருந்தது. கடல்நீர் குளிர்ந்திருந்தது. கால்களை உதைத்து கைகளை முன்னே செலுத்தி கடலில் நீந்தினேன். கால்கள் வலித்தது, உடல் குளிரில் உறைந்து போனது, இனியும் இப்பெருங்கடலை நீந்திக்கடப்பது முடியாது என்று மீண்டும் திரும்பினேன்.

கிழவி வீட்டில் படித்திருந்தேன். உடல் சூடாக இருந்தது. கிழவி ஏதோ பச்சிலையை பறித்து வந்து தலையில் வைத்தாள். மீன் துண்டை இளம் சூட்டில் வாட்டிக்கொடுத்தாள். நன்றாக இருந்தது. ஏதோ கேட்டாள். எனக்கு கிழவி கேட்பது புரியவில்லை. அழுகை வந்தது. கண்களிலிருந்து வழிந்து வந்த உப்புநீரின் சுவை கடல்நீரின் உப்பைவிட அதிகமாக இருந்தது. கிழவியும் அழத்துவங்கினாள்.

மறுநாள் கிழவி இறந்துவிட்டாள். அவள் சடலத்தை புதைக்க ஜந்தாறு பேர் வந்திருந்தனர். இவள் இறந்தவிவரம் இவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது. இத்தனை நாள் இவர்கள் எங்கிருந்தார்கள்? எல்லாம் மர்மமாக இருந்தது.

இவளின் பெயர் என்னவென்று வந்திருப்பவர்களிடம் கேட்டேன்.

“இந்தக்கிழவியின் பெயர் போவா. இவள் போ மொழியின் கடைசி பெண்”

“போ மொழி தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லையா?” என்ற கேட்டேன். கேள்விக்கு பதில் கூற எவரும் வரவில்லை. கடைசியாக கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி பதிலளித்தாள்.

“ஒரு மொழியின் அழிவு யாருக்கும் கவலை அழிப்பதில்லை. போ மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. போ அந்தமான் பழங்குடியினர் பேசும் மொழி. 1858ல் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் அந்தமானியர் பலர் கொல்லப்பட்டனர். பலர் ஆங்கிலேயர் கொண்டுவந்த நோயினால் இறந்து போயினர். இதனால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. 2004ம் ஆண்டு சுனாமியில் சிலர் இறந்து போயினர். கடைசியாக ஜம்பத்தியோரு பேர் இருந்தனர். அதில் போவா தவிர எவருக்கும் போ மொழி தெரியாது. ஜம்பது பேரும் நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்தனர். போவா மட்டும் செல்லவில்லை”

“இந்த இடம்? “

“அந்தமான், ஸ்டிரைட் ஜலேண்ட். இந்தியாவிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தீவு”
கடற்கரை ஓரத்தில் நின்றிருந்த படகில் என்னை இத்தீவிற்கு அழைத்து வந்த படகோட்டியும், உணவு கொடுத்தவனும் இருந்தனர். படகில் ஏறி அமர்ந்து கொண்டேன். படகு புறப்பட்டது. உணவு கொடுப்பவன் பொட்டலம் ஒன்றை கையில் கொடுத்தான். பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. உணவு கொடுத்தவனை பார்த்து சிரித்தேன். அவனும் சிரித்தான்.

படகு சென்னை கடற்கரை வந்து நின்றது. கரையில் தலையில் அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.

---------------------------------------முற்றும்-----------------------------------------------
கிரகம்.

Friday, March 16, 2012

வேசி வீட்டுத் திண்ணை - சிறுகதை

வருடம் முழுவதும் செய்யும் வேலையை மறந்து ஒருநாள் பொழுதை கழிக்கவும், உலகை மறப்பதற்கும், மடியில் படுத்து உறங்கவும், ஓடிப்பிடித்து விளையாடவும், காமம் கொண்ட உடலை உணவு கொடுத்து அடக்கவும் வேசி ஒருத்தி கொழும்பு நகரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து வந்தாள்.

1764ம் ஆண்டு பைபஸ் என்ற ஆங்கிலேயர் மெட்ராஸ் கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து கண்டியை ஆண்டு வந்த ராஜாவுடன் நல்லுறவு அமைக்க சிலோன் அனுப்பி வைக்கப்பட்டார். கண்டிராசா ஆங்கிலேயர்களை வணிகம் செய்ய அழைத்தார். ஆங்கிலேயர்கள் கொழுப்பில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார்.  ஆங்கில அரசாங்கம் துறைமுகத்திலிருந்து இறக்குமதி, ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டது.

வேசி வீட்டு திண்ணையில் பல தலைகள் தெரிந்தது. திண்ணையானது நீளமாகவும், அகலமாகவும் பலர் அமர்ந்து கொள்ளும் இடம் கொண்டது. யானைதந்தம், காட்டில் விளைந்த மிளகு, ஜப்பான் காப்பரில் செய்யப்பட்டிருந்த சமையல்பாத்திரங்கள், மதுரா முத்துமாலை மற்றும் பலவிதமான பொருட்களை கைகளில் தூக்கிப்பிடித்துக் கொண்டு சிறுவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தனர். இக்கூட்டத்தினுள் ரமணசிங்கா இலங்கபட்டை எண்ணெய் பாட்டிலை கையில் பிடித்திருந்தான். அவன் முதலாளி குணசேனா வேசி வீட்டு திண்ணை முன்னேயிருந்த தோட்டத்தினுள் திரிந்து கொண்டிருந்தார்.

 வேசி கதவை திறந்து வெளியே வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், தோட்டத்தின் முன்பு வரிசையாய் நின்று கொண்டிருந்த ஊர்தலைவர்கள், தொப்பை வைத்த இலவங்கபட்டை தோட்ட முதலாளிகள், உடல்பசி தேடி வந்தவர்கள் வேசியை பார்த்தனர். தலைக்கு கொண்டை போட்டு, அதன்மீது பூவை சுற்றி, கண்களுக்கு மை இட்டு, முலைக்காம்பு சேலை நுனியில் தெரியும் படி இறுக்கமாய் சேலை கட்டியிருந்தாள் வேசி.

வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

இலவங்கபட்டை சிலோனில் கொழும்பு, மதுரா, கேளி போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்தது. 12,000 பேருக்கும் மேல் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இலவங்கபட்டை காடுகளில் பயிரிடுவதால் வேலை பார்ப்பவர்களின் உயிர்களுக்கு யானை, எருமை, கரடி போன்ற விலங்குகளால் உயிருக்கு பாதிப்பு இருந்தது. அதற்காக இலங்கபட்டை பயிரிடும் தோட்டத்தை சுற்றி வேலிகள் போடப்பட்டிருக்கும். 

குணசேனாவிற்கு இலங்கபட்டை தோட்டம் காட்டின் பல இடங்களில் இருந்தது. அங்கு வேலை செய்வோரின் பெயர் கொண்ட புத்தகம் ரமணசிங்காவிடம் இருக்கும். இலங்கபட்டை பற்றி ரமணசிங்காவிற்கு குணசேனா கற்று கொடுத்தார். இலவங்கபட்டை யில் இருவகைகள். ஒன்று நல்ல மணமும் உணவுக்கு சுவையை தரக்கூடியது, இன்னொன்று இருபத்திஜந்து அடி முதல் முப்பது அடி வளரும் சுவையற்றது உணவுக்கு உதவாது. நல்லவகை இலவங்கபட்டை பயிரிட்ட மூன்று வருடங்களில் ஜந்தடி முதல் ஆறாடி உயரம் வரை மரம் போல் வளரும். கிளைகள் வரும். பூக்கள் வரும். பூக்களிலிருந்து வரும் பழங்கள் புளிப்பு சுவை கொண்டது. யானைகள் இப்பழங்களை சாப்பிடுவதற்கு ஆள் இல்லாத இரவு நேரங்களில் தோட்டத்திற்கு வரும். 

குணசேனா காட்டில் வளர்ந்தவர். அவருக்கு காட்டை நன்கு தெரிந்திருந்தது. வீசும் காற்றை வைத்து நடக்கப்போவதை கணித்துவிடுவார். ஒருநாள் இரவில் பறவைகளின் கீச்சுச்சப்தம், மரக்கிளைகள் ஒடியும் சப்தம் கேட்டு எழுந்தவர் கையில் தீபந்தத்துடன் தோட்டத்தினுள் நடந்து சென்றார். பத்து யானைகள் இலவங்கபட்டை மரத்திலிருந்த பழங்களை பறித்து சாப்பிட்டிக் கொண்டிருந்தது. யானைகள் பழங்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல் மரத்தையே ஒடித்துப்போட்டுவிடும். அதிகநஷ்டம் உண்டாகும். குணசேனா கையிலிருந்த தீ பந்தத்தை கொண்டு யானையை விரட்ட முயன்றனர். யானைகள் அசையாது ஒவ்வொரு பழமாக தின்று மரத்தை சாய்த்து கொண்டிருந்தது. குணசேனா தோட்டத்திலிருந்த கூலியை அனுப்பி மிஸ்டர்நார்தை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ்டர்நார்த் ஸ்கார்லாந்த் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு யானை வேட்டை பிரியர். தன் இருபது வருட சிலோன் வாழ்க்கையில் சுமார் இருநூறு யானைகளையாவது சுட்டுக்கொன்றிருப்பார். கையில் துப்பாக்கியுடன் தோட்டத்திற்கு வந்து பத்து யானைகளையும் சுட்டுக் கொன்றார். குணசேனா இதை கொண்டாடுவதற்கு மறுநாள் மிஸ்டர்நார்த்தை தோட்டத்திற்கு அழைத்து பனைமரத்து கள் விருந்தளித்தார். 

கொன்ற யானைகளிலிருந்து எடுக்கப்பட்ட துதிக்கைகளை ரமணசிங்கா வேசி வீட்டுற்கு எடுத்துச்சென்றான். திண்ணையில் அமர்ந்து கொண்டு தோட்டத்தை வேடிக்கை பார்த்தான். அவ்வாறு பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா ஒரு அநாதை. குணசேனா அவனை எடுத்து வளர்த்தார். குணசேனா ஒவ்வொரு முறை வேசி வீட்டிற்கு வரும் போதும் ரமணசிங்காவை கூடவே அழைத்து வருவார். அவன் கையில் வேசிக்கு கொடுக்க வேண்டிய பரிசுப்பொருள் இருக்கும். வேசி ஆண்களின் முகம் பார்த்தோ இல்லை புஜங்களின் பலம் பார்த்தோ அவர்களை தேர்தெடுப்பது இல்லை. அவர்கள் கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் கொண்டே ஆண்களை தேர்ந்தெடுத்தாள். தன்னை புரிந்த ஆண் தனக்கு விருப்பமான பரிசுப்பொருளை கொண்டு வந்திருப்பான் என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது. குணசேனா வேசியை பார்க்கவரும் நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைப்பார். பரிசுப்பொருளை வாங்க வெளியே வந்த வேசியின் வயிறு பெரிதாய் இருந்தது.  

வேசி மாசமாய் இருப்பது ஊரில் பலருக்கு தெரிய வந்தது. கர்ப்பகாலங்களில் வேசி யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பது ஊரின் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ரமணசிங்கா அதனால் தினமும் பார்க்க வருவான். இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசுவார்கள். தினமும் இலவங்க மரங்களுடன் பேசிப்பேசி அலுத்துப் போயிருந்தவனுக்கு அவளுடனான பேச்சு ஆனந்தத்தை அளித்தது. சூரியன் மறையும்வரை அவளுடன் பேசிவிட்டு செல்கையில் திரும்பி திண்ணையை பார்த்து செல்வான்.

வேசி இதுவரை ஏழுமுறை கருத்தரித்து ஏழு ஆண்பிள்ளைகள் பெற்றிருக்கிறாள். ஏழில் ஒன்றும் உயிருடன் இல்லை. பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிட்டாள். ஊர்காரர்களுக்கு வேசியின் செயல் கிறுக்குத்தனமாக தெரிந்தாலும் வேசியிடம் அதற்கான உறுதியான காரணங்கள் இருந்திருக்கலாம். வேசிக்கு பெண்குழந்தை பிறந்தது.

கூர்மையான கத்தியால் இலவங்க மரத்தில் மேலிருந்து கீழாக கீறினால் பிசுபிசுவென்று கீறும் இடத்திலிருந்து வரக்கூடாது. அவ்வாறு இருப்பவை அறுவடைக்கு தயாரானவை. அம்மரங்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட மரத்தின் சொரசொரப்பான வெளிப்பகுதி நீக்கப்படும். இவ்வாறு நீக்கப்பட்ட இலவங்கப்பட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கட்டப்பட்டு பெரிய மூடைகள் ஆக்கப்படும். இம்மூடைகள் பத்திரமாக குடோனில் கொண்டு சேர்க்கப்படும்.

ஆங்கில அதிகாரி ஒருவன் குடோனில் இலவங்கபட்டைகளின் தரத்தை பரிசோதனை செய்தான். அவன் அருகில் ரமணசிங்கா, குணசேனா நின்று கொண்டிருந்தனர். காவிநிறத்திலிருக்கும் இலவங்கபட்டை நல்லமணமும் இனிப்பு சுவையும் கொண்டது. அடர்காவிநிறத்திலிருக்கும் இலவங்கப்பட்டை மணமற்ற கசப்பு சுவை கொண்டது. 2500 மூடைகள் காவிநிற இலவங்கப்பட்டை ஜரோப்பாவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் ஏற்றமதி செய்ய வேண்டுமென்று ஆங்கில அதிகாரி கூறினான்.

தென் அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு இஞ்ச் இலவங்கபட்டை தினமும் உணவில் கலந்து சாப்பிட அளிக்கப்பட்டது. சுரங்கத்திலிருந்து வெளியாகும் நச்சுவாயுவை சுவாசிப்பதனால் ஏற்படும் சுவாச கோளாறுகளை இலங்கம் சரி செய்தது. இலவங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு குணசேனா ஒவ்வொரு மூடையிலும் கொஞ்சம் மிளகு சேர்த்து கட்டச்சொன்னார். மிளகு தரும் வெப்பம் இலவங்கபட்டை நமத்துப்போகாமல் பாதுகாப்பதோடு இலவங்கத்தின் சுவையையும் அதிகரித்தது. இந்த ஏற்றுமதியால் குணசேனாவிற்கு நல்ல லாபம் கிடைத்தது.

வேசியின் மகளுக்கு யார் அப்பா? என்ற கேள்விக்கான பதிலை ஊரிலுள்ள ஒவ்வொரு ஆணும் தன் பெயரை சொல்லிக் கொண்டான். வேசிக்கு மட்டும் யார் அப்பா என்பது தெரிந்திருந்தது. அது பற்றி வேசி யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வேசி தன் மகளுக்கு பிலோமி என்று பெயரிட்டாள். பிலோமி பிறந்த பின்பு வேசி எவருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. அவள் வீட்டிற்கு வரும் ஆண்கள் உண்டு, உறங்கி, பிலோமியுடன் விளையாடிச் சென்றனர்.

தொடர்மழையால் மழைநீர் குளங்கள் அமைத்திருந்தன. குளங்கள் எங்கும் கொசுக்கள் முட்டை பொரித்து கொழும்பு நகரெங்கும் குண்டு கொசுக்கள் மனிதர்களை கடித்துத்திரிந்தன. ஊரெங்கும் காலரா பரவியது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்தவர்கள் இறந்தனர். ஆங்கிலேயர்கள் காலரா பரவியிருக்கும் கொழும்பு நகர வீதிகளில் நடந்து செல்ல பயந்தனர். தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மிஸ்டர்நார்த் இறந்து போனார். அவர் சடலத்தை சென்று பார்த்து வந்த குணசேனாவிற்கு காலரா தொற்றிக் கொண்டது. நாளிற்கு இருபதுமுறை வயிற்றுப்போக்கு போனது. காட்டிலிருந்து பச்சிலை அறைத்து தின்று பார்த்தார் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. காய்ச்சலும் கூடிக்கொண்டே சென்றது. ரமணசிங்காவிடம் தன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகிறது சீக்கிரமே சாகப்போவதாக கூறினார்.

ரமணசிங்கா குணசேனாவை பல்லக்கில் வைத்து வேசி வீட்டிற்கு கூட்டிச் சென்றான். வேசி வீட்டு முற்றம், திண்ணை, தோட்டம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. வேசி குணசேனாவிற்கு சுடுநீரில் தேன்கலந்து கொடுத்தாள். வயிற்றுப்போக்கு நின்றது. பாலை சூடு செய்து அதில் மிளகு, இலவங்கம் சேர்த்து சாப்பிட்டதில் காய்ச்சலும் சரியானது. குணசேனாவின் உடல் நன்கு தேறியிருந்தது. பிலோமியுடன் விளையாடினார். வேசி, ரமணசிங்கா, குணசேனா திண்ணையில் அமர்ந்து கதை பேசினர். உற்சாகமான பேச்சு குணசேனாவை பூரணமாக குணமாக்கியது. பிலோமியுடன் விளையாடும் போது பிலோமியின் தொடையில் பெரிய மச்சம் ஒன்று இருப்பதை பார்த்தார். தன்னைப்போல் பிலோமி தொடையிலும் இது போன்ற மச்சம் இருப்பது கண்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தார். குணசேனா மறுநாள் கிழம்பி தன் தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.

குணசேனாவை ஒருவாரமாக காணவில்லை. எங்கு சென்றார் என்ற விவரமும் சரியாக தெரியவில்லை. ஆதிவாசியினர் குணசேனாவின் உடல் காட்டின் உட்பகுதியில் யானையின் பாததடங்களுக்கு அடியில் கிடந்தாக கூறி ரமணசிங்காவிடம் கொடுத்துச் சென்றனர்.

பிலோமி ருதுவானாள். ஊரே அவளின் சடங்கை செய்தது. ரமணசிங்கா குணசேனாவின் சார்பாக செய்யவேண்டிய சடங்குகளை செய்தான்.  மறுநாள் காலை வேசிவீட்டு கிணற்றில் வேசியின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

பழையது போல் திண்ணையில் பல தலைகள் தெரிந்தன. அதில் ரமணசிங்காவும் அமர்ந்து கையில் இலவங்க எண்ணெய் பாட்டிலை பிடித்திருந்தான். பிலோமி கதவை திறந்து வெளியே வந்தாள். பரிசுகளை வைத்து ஆண்களை தேர்வுசெய்யும் வழக்கத்தையே அவளும் கடைப்பிடித்தாள். இலவங்க எண்ணெய் பிலோமிக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா தேர்வு செய்யப்பட்டான். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர். ரமணசிங்கா பிலோமியின் இரண்டு கன்னத்தில் முத்தமிட்டு குணசேனா தங்கியிருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தான். இலவங்கபட்டை பிலோமியின் வாழ்க்கையில் புதிய பாதையை ஏற்படுத்தியது. தினமும் பரிசு கொடுத்து முத்தமிட்டு செல்வது ஊரின் வழக்கமாகிப்போனது.
---------------------------------------முற்றும்-----------------------------------------------
கிரகம்.

இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. http://solvanam.com/?p=19499

பார்வைகள்