Saturday, April 7, 2012

மொழியின் கடைசிப் பெண்


மொழியின் கடைசிப்  பெண்

- சொல்வனம் இதழில் வெளியாகியுள்ள எனது இரண்டாவது சிறுகதை.

தமிழ்நாட்டில் அப்போது ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு மூன்றுவயதாய் இருந்த போது வட இந்தியாவில் அப்பா வேலை பார்த்து வந்தார். அப்பாவின் அப்பா தமிழ்வாத்தியார் அதனால் அப்பாவிற்கு தமிழ் நன்கு எழுதப்படிக்க வரும். அம்மா வட இந்தியாவில் பிறந்தவள். தமிழ் பேசுவாள் தவிர எழுத படிக்க வராது. அம்மா அப்பாவிடம் தமிழ் எழுதப்படிக்க கற்று வந்தாள். அப்பா வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். அம்மா மாசமாக இருந்தாள். பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்ததால் பிரசவத்திற்கு பின்பு சென்னை செல்வோம் என்று அம்மா கூறினாள். அப்பா அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் ரயில்மறியல் நடந்ததால் நாங்கள் சென்ற ரயில்வண்டி தமிழ்நாடு எல்லைக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அம்மாவிற்கு பிரசவவலி வந்தது. ரயில் காட்டினுள் நிறுத்தப்பட்டிருந்ததால் பக்கத்திலிருந்த டவுண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் வழியிலே அம்மா இறந்து போனாள். அம்மா இறப்பதற்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் காரணம் என அப்பா நம்பினார். மொழியை அரசியலாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று அரசியல்வாதிகளின் மீது கோபம் கொண்டார். சில நாட்களில் மற்றவர்களிடம் தமிழில் வேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அப்பாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த போது பேருந்து நிறுத்ததிலிருந்த ஒருவன் தலையில் அடித்தான். யாரிவன் என்று யோசிப்பதற்குள் மயக்கம் வந்தது. சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு கீழே விழுந்தேன்.

நீளமான வால் கொண்ட வெள்ளை குதிரையை அழகாக ஜோடித்திருந்தனர். அதன் முதுகில் சிவப்புநிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. குதிரையின் மேல் நானும் என் காதலியும் அமர்ந்திருந்தோம். சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியாய் அருகில் நிற்பவர்களிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். நடந்து சென்ற குதிரை சிறிது நேரத்தில் பறக்கத் துவங்கியது. உடல் லேசாக குலுங்கியது. வாய் திறந்து பேச முயற்சி செய்த போதும் பேச முடியவில்லை. கைகளை கொண்டு குதிரையின் வேகத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்த போதும் கைகளை முன்னால் கொண்டுவர முடியவில்லை. சலப்பென்று உப்புத்தண்ணீர் முகத்தில் விழுந்தது.

முழித்துப்பார்த்த போது சூரியஒளி முகத்தில் விழுந்தது. எழுந்து அமர்ந்தேன். படகை ஒட்டிக்கொண்டிருந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தான். எனக்கு எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. எதற்காக படகில் பயணம் செய்கிறேன்? என்று தெரியவில்லை. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தது. வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. உணவு எடுத்து வந்தவன் பொட்டலத்தை என் முன்னே வைத்துவிட்டு கைகள் கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட்டு வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை எடுத்துவிட்டான்.

“நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?” எழுந்து நடந்து படகு ஓட்டுபவனின் அருகில் சென்றேன்.

“நான் கேட்பது காதில் கேட்கலை. நீங்கள் யார்? எங்கே என்னை அழைத்துச் செல்கிறீர்கள்” என்று சத்தமாக அவன் அருகில் சென்று கேட்டேன். படகுஓட்டுபவன் பதிலேதும் கூறாமல் உணவு பொட்டலத்தை நோக்கி கை காட்டினான். அவன் என்னை சாப்பிடச் சொல்கிறான் என்பது புரிந்தது.

“நீங்கள் சொமாலியா தீவிரவாதிகளா? என்னை பணத்திற்காக கடத்திச் செல்கிறீர்களா?.....நான் ஒரு எலக்ட்ரானிக் இஞ்ஜினேயர். நான் வடிமைத்த எலக்ட்ரானிக் இயந்திரம் நாளை இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அதை நான் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன். தயவு செய்து என்னை சென்னையில் விட்டு விடுங்கள்”

உணவு கொடுத்தவன் என்னை சாப்பிடச் சொன்னான். அவனருகில் நெருங்கி அவன் கழுத்தை கைகளால் நெறித்தேன். அவன் என் நெஞ்சில் கைவைத்து உதறி தள்ளியதில் கீழே விழுந்து தலை மரக்கட்டையில் இடித்தது. மயக்கம் வருவது போல் இருந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்த போது கடற்கரை மணல் மீது படுத்துக்கிடந்தேன். அருகில் பொட்டலம் ஒன்று கிடந்தது. நன்கு பசித்தது. பொட்டலத்தை எடுத்து பார்த்தேன். அதனுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன். காதில் வலி எடுப்பது போல் இருந்தது. சப்பாத்தியை சாப்பிட்டேன். சப்பாத்திக்கு வதக்கிய தக்காளி சுவையாக இருந்தது. கடத்தப்பட்டு தனியாக உச்சிவெயில் கடற்கரை மணலில் நின்று உண்ணும் போதும் நாவு சுவையை மறப்பதில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம் தான் என்பது போல் இருந்தது. கடற்கரை மணலிலே நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.

அதிகமான தென்னை மரங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்பட்டிருந்தன. சூரிய ஒளிக்கதிர்கள் தென்னங்கீற்றின் இடையில் புகுந்து தரையில் விழுந்தன. அங்கும் ஆட்கள் தென்படவில்லை. மரநிழலில் நடந்தேன். காய்ந்த இலைகள் தரையில் கிடந்தன. உள்ளே நடந்து செல்ல காடு போல் தெரிந்தது. பறவைகளின் சப்தம் மட்டும் கேட்டது. சப்தமாக கத்தினேன். பறவைகள் கிளைகளை விட்டு பறக்கும் சப்தம் கேட்டது. சிறுதுநேரத்தில் என் குரலே எனக்கு கேட்டது. பயமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த கடற்கரை, கடல் எதுவுமே இப்போது தெரியவில்லை.

இரவு ஆரம்பமாகியிருந்தது. வானத்தில் நிலவும் வந்திருந்தது. என்னை கடத்தி வந்தவர்கள் எங்கே என்று தேடினேன். எவரும் தென்படவில்லை. எதற்கு என்னை கடத்தி வந்தார்கள்? என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்? இது எந்த இடம்? எப்போது என்னை விடுதலை செய்வார்கள்? மனிதர்கள் இல்லாத இந்த இடத்தில் இறந்துவிட்டால் என் உடலை கடத்தியவர்கள் என் வீட்டிற்கு அனுப்புவார்களா? இல்லை கழுகுகள் தின்றுபோகட்டும் என்று விட்டுவிடுவார்களா? விபரீதமான கேள்விகள் மனதில் எழுந்தது. பொட்டலம் ஒன்று கடற்கரை மணலில் கிடந்தது. பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. இந்த பொட்டலத்தை யார் இங்கே போட்டது? கடத்திவந்தவர்களா இல்லை தன்னை கண்காணித்து வருபவன் இந்த பொட்டலத்தை இங்கே போட்டிருப்பானா?

தூரத்தில் வீடொன் று இருப்பது தெரிந்தது. வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப்பார்தேன். யாரும் இல்லை. வீட்டின் சுவரில் பெண் ஒருத்தியின் கருப்பு வெள்ளை புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்த பெண் ஆடையில்லாமல் பிறப்புறுப்பினை மட்டும் இலையால் மறைத்து கட்டியிருந்தாள். அவள் கருப்பு நிறமாக இருந்தாள். சிரிக்கும் போது தெரிந்த பற்கள் மட்டும் ஓரளவு வெள்ளையாக இருந்தது. யாரோ நடந்துவரும் சப்தம் கேட்டு வீட்டைவிட்டு வெளியவந்து மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன்.

கிழவி ஒருத்தி கைகளில் மீன்களுடன் நடந்துவந்தாள். புகைப்படத்தில் பார்த்த பெண்போல் இருந்தாள். ஆனால் ஆடை அணிந்திருந்தாள். மேலே ப்ளவுஸ் கீழே பாவாடை. கிழவியின் வாய் அசைவை வைத்து பார்க்கும்போது யாருடனோ பேசிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அவளின் முன்னால் பின்னால் அருகில் எவரும் இல்லை. மரத்தின் பின்னால் நின்று கொண்டு அவளை நோட்டமிட்டேன்.

கிழவி துவைத்து வந்த துணிகளை மரத்தின் கிளைகளில் காயவைத்தாள். மீன்களை வீட்டினுள் வைத்துவிட்டு மரத்தின் நிழலில் வந்து படுத்துக்கொண்டாள். கிழவிக்கும் கடத்திவந்தவர்களுக்கும் தொடர்பு இருக்குமென்று நினைத்தேன். சப்பாத்தியை கடற்கரை மணலில் போட்டது கிழவியாக இருக்ககூடும்.

கிழவியிருக்கும் வீட்டை தள்ளி கொஞ்ச தூரத்தில் வேறோரு வீடு இருந்தது. வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டினுள் மரக்கட்டில், பழைய சீலிங்பேன், தூசிபடிந்த ஜன்னல் கதவுகள், பழுப்பு நிறத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தது. வேறெதுவும் வீடு இருக்கிறதாவென்று காட்டை சுற்றி வந்தேன். காட்டில் வேறுயாரும் இல்லை. காடு அதனை சுற்றிலும் கடல். இது ஒரு தீவு. காட்டினுள் நானும் அந்தக்கிழவியும் மட்டும் இருக்கிறோம்.

கடத்தியவர்கள் அல்லது கிழவி கடற்கரை மணலில் உணவுப்பொட்டலத்தை போடவருவார்கள் என்று கடற்கரையில் காத்திருந்தேன். கிழவி நடந்து வந்தாள். அவள் கையில் அரிக்கண்விளக்கு இருந்தது. நடக்கும்போது ஏதோ பேசிக் கொண்டே நடந்தாள். அவளை சுற்றி யாரும் இல்லை. இவள் யாருடன் பேசுகிறாள் என்பது புரியவில்லை. இவள் பைத்தியமாக இருப்பாளோ? என்று கூட நினைத்தேன். அரிக்கண்விளக்கை கீழே வைத்துவிட்டு மணலில் அமர்ந்து கொண்டாள். கடல் அலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் பேசுவது போல் வாயை முணுமுணுத்தாள். ஓவென்று கத்தினாள். அகோரமாக சிரித்தாள். கிழவி எழுந்து அரிக்கண்விளக்குடன் வீட்டிற்கு நடந்து சென்றான். உணவுப்பொட்டலம் எங்கும் தென்படவில்லை. அன்றைய இரவு உணவு உண்ணாமல் தூங்கினேன்.

வீட்டின் கதவு பலமாக தட்டும் சப்தம் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறக்கச்சென்றேன். கடத்தல்காரர்கள் வந்திருப்பார்கள் . அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஊர்போய் சேர வேண்டும். கதவை திறந்தால் கிழவி நின்று கொண்டிருந்தாள். மெளனமாக நின்று கொண்டு என்னை மேலிருந்து கீழாக நோட்டமிட்டாள். நான் கிழவியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் உள்ளே வந்தவள் என் கைகளை பற்றி இழுத்துச் சென்றாள். நடக்கும்போது பேசிக்கொண்டே நடந்தாள். எனக்கு அவளது பேச்சு புரியவில்லை. மொழி புரியவில்லை.

அவள் வீட்டினுள் அழைத்துச் சென்று சுட்ட மீன் துண்டுகளை என் கைகளில் கொடுத்தாள். மீன் நன்கு வெந்திருந்தது. என்னை பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன். இவள் கடத்தல் கூட்டத்தை சேர்ந்தவளாக இருக்க முடியாது. அவளிடம் ஆங்கிலத்தில் பேசினேன் பதிலேதும் இல்லை. தமிழில் பேசினேன் பதிலேதும் இல்லை. கிழவி பேசிய மொழி எனக்கு புரியவில்லை. இவளிடம் எவ்வாறு கேள்விகள் கேட்பதென்று யோசித்தேன். எனக்கு தெரிந்த மொழிகள் எதுவும் அவளுக்கு தெரியவில்லை.

என் கைகளை பிடித்து கூட்டிச்சென்றாள். சிறுசெடிகளை பறித்து கைகளில் வைத்துக் கொண்டாள். என் கைகளிலும் சில செடிகளை கொடுத்தாள். காட்டிலிருந்து கடற்கரை நோக்கி நடந்தோம். கடற்கடரையில் பாறைகள் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றாள். பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டோம். செடிகளை பிய்த்து நீரின் மீது தூவிவிட்டாள். சிறிது நேரத்தில் நீருக்கடியிலிருந்து மீன்கள் செடிகளை தின்ன மேலே வந்தன. அப்போது கிழவி கையினால் மீன்களை பிடித்தாள். இப்படியாக பறித்து வந்த செடிகள் எல்லாத்தையும் நீரின் மீது தூவி நிறைய மீன்கள் பிடித்தாள். கிழவி சந்தோஷமடைந்தாள்.

இரவில் கடலின் சப்தம் பலமாக இருந்தது. கடல்நீர் குளிர்ந்திருந்தது. கால்களை உதைத்து கைகளை முன்னே செலுத்தி கடலில் நீந்தினேன். கால்கள் வலித்தது, உடல் குளிரில் உறைந்து போனது, இனியும் இப்பெருங்கடலை நீந்திக்கடப்பது முடியாது என்று மீண்டும் திரும்பினேன்.

கிழவி வீட்டில் படித்திருந்தேன். உடல் சூடாக இருந்தது. கிழவி ஏதோ பச்சிலையை பறித்து வந்து தலையில் வைத்தாள். மீன் துண்டை இளம் சூட்டில் வாட்டிக்கொடுத்தாள். நன்றாக இருந்தது. ஏதோ கேட்டாள். எனக்கு கிழவி கேட்பது புரியவில்லை. அழுகை வந்தது. கண்களிலிருந்து வழிந்து வந்த உப்புநீரின் சுவை கடல்நீரின் உப்பைவிட அதிகமாக இருந்தது. கிழவியும் அழத்துவங்கினாள்.

மறுநாள் கிழவி இறந்துவிட்டாள். அவள் சடலத்தை புதைக்க ஜந்தாறு பேர் வந்திருந்தனர். இவள் இறந்தவிவரம் இவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது. இத்தனை நாள் இவர்கள் எங்கிருந்தார்கள்? எல்லாம் மர்மமாக இருந்தது.

இவளின் பெயர் என்னவென்று வந்திருப்பவர்களிடம் கேட்டேன்.

“இந்தக்கிழவியின் பெயர் போவா. இவள் போ மொழியின் கடைசி பெண்”

“போ மொழி தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லையா?” என்ற கேட்டேன். கேள்விக்கு பதில் கூற எவரும் வரவில்லை. கடைசியாக கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி பதிலளித்தாள்.

“ஒரு மொழியின் அழிவு யாருக்கும் கவலை அழிப்பதில்லை. போ மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. போ அந்தமான் பழங்குடியினர் பேசும் மொழி. 1858ல் ஆங்கிலேயர் வருகைக்கு பின்னர் அந்தமானியர் பலர் கொல்லப்பட்டனர். பலர் ஆங்கிலேயர் கொண்டுவந்த நோயினால் இறந்து போயினர். இதனால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. 2004ம் ஆண்டு சுனாமியில் சிலர் இறந்து போயினர். கடைசியாக ஜம்பத்தியோரு பேர் இருந்தனர். அதில் போவா தவிர எவருக்கும் போ மொழி தெரியாது. ஜம்பது பேரும் நகர்புறங்களுக்கு குடிபெயர்ந்தனர். போவா மட்டும் செல்லவில்லை”

“இந்த இடம்? “

“அந்தமான், ஸ்டிரைட் ஜலேண்ட். இந்தியாவிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தீவு”
கடற்கரை ஓரத்தில் நின்றிருந்த படகில் என்னை இத்தீவிற்கு அழைத்து வந்த படகோட்டியும், உணவு கொடுத்தவனும் இருந்தனர். படகில் ஏறி அமர்ந்து கொண்டேன். படகு புறப்பட்டது. உணவு கொடுப்பவன் பொட்டலம் ஒன்றை கையில் கொடுத்தான். பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. உணவு கொடுத்தவனை பார்த்து சிரித்தேன். அவனும் சிரித்தான்.

படகு சென்னை கடற்கரை வந்து நின்றது. கரையில் தலையில் அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.

---------------------------------------முற்றும்-----------------------------------------------
கிரகம்.

Friday, March 16, 2012

வேசி வீட்டுத் திண்ணை - சிறுகதை

வருடம் முழுவதும் செய்யும் வேலையை மறந்து ஒருநாள் பொழுதை கழிக்கவும், உலகை மறப்பதற்கும், மடியில் படுத்து உறங்கவும், ஓடிப்பிடித்து விளையாடவும், காமம் கொண்ட உடலை உணவு கொடுத்து அடக்கவும் வேசி ஒருத்தி கொழும்பு நகரத்தில் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்து வந்தாள்.

1764ம் ஆண்டு பைபஸ் என்ற ஆங்கிலேயர் மெட்ராஸ் கிழக்கிந்திய கம்பெனியிலிருந்து கண்டியை ஆண்டு வந்த ராஜாவுடன் நல்லுறவு அமைக்க சிலோன் அனுப்பி வைக்கப்பட்டார். கண்டிராசா ஆங்கிலேயர்களை வணிகம் செய்ய அழைத்தார். ஆங்கிலேயர்கள் கொழுப்பில் துறைமுகம் அமைத்துக் கொள்வதற்கு அனுமதி அளித்தார்.  ஆங்கில அரசாங்கம் துறைமுகத்திலிருந்து இறக்குமதி, ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு வரி செலுத்த ஒப்புக்கொண்டது.

வேசி வீட்டு திண்ணையில் பல தலைகள் தெரிந்தது. திண்ணையானது நீளமாகவும், அகலமாகவும் பலர் அமர்ந்து கொள்ளும் இடம் கொண்டது. யானைதந்தம், காட்டில் விளைந்த மிளகு, ஜப்பான் காப்பரில் செய்யப்பட்டிருந்த சமையல்பாத்திரங்கள், மதுரா முத்துமாலை மற்றும் பலவிதமான பொருட்களை கைகளில் தூக்கிப்பிடித்துக் கொண்டு சிறுவர்கள் திண்ணையில் அமர்ந்திருந்தனர். இக்கூட்டத்தினுள் ரமணசிங்கா இலங்கபட்டை எண்ணெய் பாட்டிலை கையில் பிடித்திருந்தான். அவன் முதலாளி குணசேனா வேசி வீட்டு திண்ணை முன்னேயிருந்த தோட்டத்தினுள் திரிந்து கொண்டிருந்தார்.

 வேசி கதவை திறந்து வெளியே வந்தாள். திண்ணையில் அமர்ந்திருந்தவர்கள், தோட்டத்தின் முன்பு வரிசையாய் நின்று கொண்டிருந்த ஊர்தலைவர்கள், தொப்பை வைத்த இலவங்கபட்டை தோட்ட முதலாளிகள், உடல்பசி தேடி வந்தவர்கள் வேசியை பார்த்தனர். தலைக்கு கொண்டை போட்டு, அதன்மீது பூவை சுற்றி, கண்களுக்கு மை இட்டு, முலைக்காம்பு சேலை நுனியில் தெரியும் படி இறுக்கமாய் சேலை கட்டியிருந்தாள் வேசி.

வேசி ஒவ்வொருவரின் பரிசுப்பொருளையும் பார்த்தாள். ரமணசிங்கா கையிலிருந்த இலவங்க எண்ணெயின் மணம் அந்த இடம் முழுவதும் வீசியது. வேசி எண்ணெய் வாங்கி நுகர்ந்து பார்த்தாள். காரம் கொஞ்சம் இனிப்பும் கலந்த மணம் இருந்தது. அன்றைய தினம் குணசேனா தேர்வு செய்யப்பட்டார். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர்.

இலவங்கபட்டை சிலோனில் கொழும்பு, மதுரா, கேளி போன்ற இடங்களில் அதிகம் பயிரிடப்பட்டது. நல்ல விளைச்சலைக் கொடுத்தது. 12,000 பேருக்கும் மேல் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இலவங்கபட்டை காடுகளில் பயிரிடுவதால் வேலை பார்ப்பவர்களின் உயிர்களுக்கு யானை, எருமை, கரடி போன்ற விலங்குகளால் உயிருக்கு பாதிப்பு இருந்தது. அதற்காக இலங்கபட்டை பயிரிடும் தோட்டத்தை சுற்றி வேலிகள் போடப்பட்டிருக்கும். 

குணசேனாவிற்கு இலங்கபட்டை தோட்டம் காட்டின் பல இடங்களில் இருந்தது. அங்கு வேலை செய்வோரின் பெயர் கொண்ட புத்தகம் ரமணசிங்காவிடம் இருக்கும். இலங்கபட்டை பற்றி ரமணசிங்காவிற்கு குணசேனா கற்று கொடுத்தார். இலவங்கபட்டை யில் இருவகைகள். ஒன்று நல்ல மணமும் உணவுக்கு சுவையை தரக்கூடியது, இன்னொன்று இருபத்திஜந்து அடி முதல் முப்பது அடி வளரும் சுவையற்றது உணவுக்கு உதவாது. நல்லவகை இலவங்கபட்டை பயிரிட்ட மூன்று வருடங்களில் ஜந்தடி முதல் ஆறாடி உயரம் வரை மரம் போல் வளரும். கிளைகள் வரும். பூக்கள் வரும். பூக்களிலிருந்து வரும் பழங்கள் புளிப்பு சுவை கொண்டது. யானைகள் இப்பழங்களை சாப்பிடுவதற்கு ஆள் இல்லாத இரவு நேரங்களில் தோட்டத்திற்கு வரும். 

குணசேனா காட்டில் வளர்ந்தவர். அவருக்கு காட்டை நன்கு தெரிந்திருந்தது. வீசும் காற்றை வைத்து நடக்கப்போவதை கணித்துவிடுவார். ஒருநாள் இரவில் பறவைகளின் கீச்சுச்சப்தம், மரக்கிளைகள் ஒடியும் சப்தம் கேட்டு எழுந்தவர் கையில் தீபந்தத்துடன் தோட்டத்தினுள் நடந்து சென்றார். பத்து யானைகள் இலவங்கபட்டை மரத்திலிருந்த பழங்களை பறித்து சாப்பிட்டிக் கொண்டிருந்தது. யானைகள் பழங்களை சாப்பிடுவது மட்டுமல்லாமல் மரத்தையே ஒடித்துப்போட்டுவிடும். அதிகநஷ்டம் உண்டாகும். குணசேனா கையிலிருந்த தீ பந்தத்தை கொண்டு யானையை விரட்ட முயன்றனர். யானைகள் அசையாது ஒவ்வொரு பழமாக தின்று மரத்தை சாய்த்து கொண்டிருந்தது. குணசேனா தோட்டத்திலிருந்த கூலியை அனுப்பி மிஸ்டர்நார்தை அழைத்து வரச்சொன்னார்.

மிஸ்டர்நார்த் ஸ்கார்லாந்த் நாட்டைச் சேர்ந்தவர். இவர் ஒரு யானை வேட்டை பிரியர். தன் இருபது வருட சிலோன் வாழ்க்கையில் சுமார் இருநூறு யானைகளையாவது சுட்டுக்கொன்றிருப்பார். கையில் துப்பாக்கியுடன் தோட்டத்திற்கு வந்து பத்து யானைகளையும் சுட்டுக் கொன்றார். குணசேனா இதை கொண்டாடுவதற்கு மறுநாள் மிஸ்டர்நார்த்தை தோட்டத்திற்கு அழைத்து பனைமரத்து கள் விருந்தளித்தார். 

கொன்ற யானைகளிலிருந்து எடுக்கப்பட்ட துதிக்கைகளை ரமணசிங்கா வேசி வீட்டுற்கு எடுத்துச்சென்றான். திண்ணையில் அமர்ந்து கொண்டு தோட்டத்தை வேடிக்கை பார்த்தான். அவ்வாறு பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா ஒரு அநாதை. குணசேனா அவனை எடுத்து வளர்த்தார். குணசேனா ஒவ்வொரு முறை வேசி வீட்டிற்கு வரும் போதும் ரமணசிங்காவை கூடவே அழைத்து வருவார். அவன் கையில் வேசிக்கு கொடுக்க வேண்டிய பரிசுப்பொருள் இருக்கும். வேசி ஆண்களின் முகம் பார்த்தோ இல்லை புஜங்களின் பலம் பார்த்தோ அவர்களை தேர்தெடுப்பது இல்லை. அவர்கள் கொண்டுவரும் பரிசுப்பொருட்கள் கொண்டே ஆண்களை தேர்ந்தெடுத்தாள். தன்னை புரிந்த ஆண் தனக்கு விருப்பமான பரிசுப்பொருளை கொண்டு வந்திருப்பான் என்பது அவளின் நம்பிக்கையாக இருந்தது. குணசேனா வேசியை பார்க்கவரும் நாட்கள் தவிர மற்ற நாட்களிலும் பரிசுப்பொருட்கள் அனுப்பி வைப்பார். பரிசுப்பொருளை வாங்க வெளியே வந்த வேசியின் வயிறு பெரிதாய் இருந்தது.  

வேசி மாசமாய் இருப்பது ஊரில் பலருக்கு தெரிய வந்தது. கர்ப்பகாலங்களில் வேசி யாருடனும் உடலுறவு வைத்துக் கொள்வதில்லை என்பது ஊரின் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ரமணசிங்கா அதனால் தினமும் பார்க்க வருவான். இருவரும் திண்ணையில் அமர்ந்து பேசுவார்கள். தினமும் இலவங்க மரங்களுடன் பேசிப்பேசி அலுத்துப் போயிருந்தவனுக்கு அவளுடனான பேச்சு ஆனந்தத்தை அளித்தது. சூரியன் மறையும்வரை அவளுடன் பேசிவிட்டு செல்கையில் திரும்பி திண்ணையை பார்த்து செல்வான்.

வேசி இதுவரை ஏழுமுறை கருத்தரித்து ஏழு ஆண்பிள்ளைகள் பெற்றிருக்கிறாள். ஏழில் ஒன்றும் உயிருடன் இல்லை. பிறந்தவுடன் கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிட்டாள். ஊர்காரர்களுக்கு வேசியின் செயல் கிறுக்குத்தனமாக தெரிந்தாலும் வேசியிடம் அதற்கான உறுதியான காரணங்கள் இருந்திருக்கலாம். வேசிக்கு பெண்குழந்தை பிறந்தது.

கூர்மையான கத்தியால் இலவங்க மரத்தில் மேலிருந்து கீழாக கீறினால் பிசுபிசுவென்று கீறும் இடத்திலிருந்து வரக்கூடாது. அவ்வாறு இருப்பவை அறுவடைக்கு தயாரானவை. அம்மரங்கள் வெட்டப்படும். வெட்டப்பட்ட மரத்தின் சொரசொரப்பான வெளிப்பகுதி நீக்கப்படும். இவ்வாறு நீக்கப்பட்ட இலவங்கப்பட்டைகள் ஒன்றின் மீது ஒன்றாக வைத்து கட்டப்பட்டு பெரிய மூடைகள் ஆக்கப்படும். இம்மூடைகள் பத்திரமாக குடோனில் கொண்டு சேர்க்கப்படும்.

ஆங்கில அதிகாரி ஒருவன் குடோனில் இலவங்கபட்டைகளின் தரத்தை பரிசோதனை செய்தான். அவன் அருகில் ரமணசிங்கா, குணசேனா நின்று கொண்டிருந்தனர். காவிநிறத்திலிருக்கும் இலவங்கபட்டை நல்லமணமும் இனிப்பு சுவையும் கொண்டது. அடர்காவிநிறத்திலிருக்கும் இலவங்கப்பட்டை மணமற்ற கசப்பு சுவை கொண்டது. 2500 மூடைகள் காவிநிற இலவங்கப்பட்டை ஜரோப்பாவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் ஏற்றமதி செய்ய வேண்டுமென்று ஆங்கில அதிகாரி கூறினான்.

தென் அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு இஞ்ச் இலவங்கபட்டை தினமும் உணவில் கலந்து சாப்பிட அளிக்கப்பட்டது. சுரங்கத்திலிருந்து வெளியாகும் நச்சுவாயுவை சுவாசிப்பதனால் ஏற்படும் சுவாச கோளாறுகளை இலங்கம் சரி செய்தது. இலவங்களை ஏற்றுமதி செய்வதற்கு முன்பு குணசேனா ஒவ்வொரு மூடையிலும் கொஞ்சம் மிளகு சேர்த்து கட்டச்சொன்னார். மிளகு தரும் வெப்பம் இலவங்கபட்டை நமத்துப்போகாமல் பாதுகாப்பதோடு இலவங்கத்தின் சுவையையும் அதிகரித்தது. இந்த ஏற்றுமதியால் குணசேனாவிற்கு நல்ல லாபம் கிடைத்தது.

வேசியின் மகளுக்கு யார் அப்பா? என்ற கேள்விக்கான பதிலை ஊரிலுள்ள ஒவ்வொரு ஆணும் தன் பெயரை சொல்லிக் கொண்டான். வேசிக்கு மட்டும் யார் அப்பா என்பது தெரிந்திருந்தது. அது பற்றி வேசி யாரிடமும் பேசிக்கொள்ளவில்லை. வேசி தன் மகளுக்கு பிலோமி என்று பெயரிட்டாள். பிலோமி பிறந்த பின்பு வேசி எவருடனும் உடலுறவு வைத்துக்கொள்ளவில்லை. அவள் வீட்டிற்கு வரும் ஆண்கள் உண்டு, உறங்கி, பிலோமியுடன் விளையாடிச் சென்றனர்.

தொடர்மழையால் மழைநீர் குளங்கள் அமைத்திருந்தன. குளங்கள் எங்கும் கொசுக்கள் முட்டை பொரித்து கொழும்பு நகரெங்கும் குண்டு கொசுக்கள் மனிதர்களை கடித்துத்திரிந்தன. ஊரெங்கும் காலரா பரவியது. தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி தொடர்ந்தவர்கள் இறந்தனர். ஆங்கிலேயர்கள் காலரா பரவியிருக்கும் கொழும்பு நகர வீதிகளில் நடந்து செல்ல பயந்தனர். தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக மிஸ்டர்நார்த் இறந்து போனார். அவர் சடலத்தை சென்று பார்த்து வந்த குணசேனாவிற்கு காலரா தொற்றிக் கொண்டது. நாளிற்கு இருபதுமுறை வயிற்றுப்போக்கு போனது. காட்டிலிருந்து பச்சிலை அறைத்து தின்று பார்த்தார் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. காய்ச்சலும் கூடிக்கொண்டே சென்றது. ரமணசிங்காவிடம் தன் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு போகிறது சீக்கிரமே சாகப்போவதாக கூறினார்.

ரமணசிங்கா குணசேனாவை பல்லக்கில் வைத்து வேசி வீட்டிற்கு கூட்டிச் சென்றான். வேசி வீட்டு முற்றம், திண்ணை, தோட்டம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. வேசி குணசேனாவிற்கு சுடுநீரில் தேன்கலந்து கொடுத்தாள். வயிற்றுப்போக்கு நின்றது. பாலை சூடு செய்து அதில் மிளகு, இலவங்கம் சேர்த்து சாப்பிட்டதில் காய்ச்சலும் சரியானது. குணசேனாவின் உடல் நன்கு தேறியிருந்தது. பிலோமியுடன் விளையாடினார். வேசி, ரமணசிங்கா, குணசேனா திண்ணையில் அமர்ந்து கதை பேசினர். உற்சாகமான பேச்சு குணசேனாவை பூரணமாக குணமாக்கியது. பிலோமியுடன் விளையாடும் போது பிலோமியின் தொடையில் பெரிய மச்சம் ஒன்று இருப்பதை பார்த்தார். தன்னைப்போல் பிலோமி தொடையிலும் இது போன்ற மச்சம் இருப்பது கண்டு மிகுந்த சந்தோஷம் அடைந்தார். குணசேனா மறுநாள் கிழம்பி தன் தோட்டத்து வீட்டிற்கு சென்றார்.

குணசேனாவை ஒருவாரமாக காணவில்லை. எங்கு சென்றார் என்ற விவரமும் சரியாக தெரியவில்லை. ஆதிவாசியினர் குணசேனாவின் உடல் காட்டின் உட்பகுதியில் யானையின் பாததடங்களுக்கு அடியில் கிடந்தாக கூறி ரமணசிங்காவிடம் கொடுத்துச் சென்றனர்.

பிலோமி ருதுவானாள். ஊரே அவளின் சடங்கை செய்தது. ரமணசிங்கா குணசேனாவின் சார்பாக செய்யவேண்டிய சடங்குகளை செய்தான்.  மறுநாள் காலை வேசிவீட்டு கிணற்றில் வேசியின் உடல் மிதந்து கொண்டிருந்தது.

பழையது போல் திண்ணையில் பல தலைகள் தெரிந்தன. அதில் ரமணசிங்காவும் அமர்ந்து கையில் இலவங்க எண்ணெய் பாட்டிலை பிடித்திருந்தான். பிலோமி கதவை திறந்து வெளியே வந்தாள். பரிசுகளை வைத்து ஆண்களை தேர்வுசெய்யும் வழக்கத்தையே அவளும் கடைப்பிடித்தாள். இலவங்க எண்ணெய் பிலோமிக்கு பிடித்திருந்தது. ரமணசிங்கா தேர்வு செய்யப்பட்டான். மற்றவர்கள் பரிசுப்பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு அவரவர் வீடு நோக்கி சென்றனர். ரமணசிங்கா பிலோமியின் இரண்டு கன்னத்தில் முத்தமிட்டு குணசேனா தங்கியிருந்த தோட்டவீட்டை நோக்கி நடந்தான். இலவங்கபட்டை பிலோமியின் வாழ்க்கையில் புதிய பாதையை ஏற்படுத்தியது. தினமும் பரிசு கொடுத்து முத்தமிட்டு செல்வது ஊரின் வழக்கமாகிப்போனது.
---------------------------------------முற்றும்-----------------------------------------------
கிரகம்.

இந்த வார சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. http://solvanam.com/?p=19499

Tuesday, November 1, 2011

அவள் - சிறுகதை - கிரகம்


அவள்                                     [கார்ப்ரேட் கதைகள்]



நெடுஞ்சாலையை இருட்டு நன்கு கவ்வியிருந்தது. நெடுஞ்சாலையை ஒட்டியிருந்த ஏழாவது மாடியில் ஹிப்ஹாப் இசை ஒலித்தது. ஜந்தாறு குண்டர்கள் ஏழாவது மாடியின் வாசலில் நின்று கொண்டு காதலர்களாய் வருபவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். குறைந்த வெளிச்சம், ஒவ்வொருவரின் கைகளிலும் மதுக்கிண்ணம், இசைக்கு தகுந்தாற்போல் பெண்கள் குதிக்கும் போது ஏறி இறங்கும் அவர்களின் மார்பகங்கள் என ஏழாவது மாடியே போதையில் இருந்தது. ரீமா மதுக்கோப்பையை கைகளில் ஏந்தியபடி மேடையில் ஆடினாள். ரீமாவின் ஆட்டத்தை மேடையின் கீழே அமர்ந்திருப்பவர்கள் ரசித்துப்பார்த்தனர். ரீமா சேத்தனை கை நீட்டி தன்னுடன் ஆட அழைத்தாள். சேத்தனும் உற்சாகமாக ரீமாவுடன் ஆட மேடை மீது ஏறினான்.



அவள் இன்று எப்போதும் வரும் நேரத்தை விட சற்று முன்னதாகவே வந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை கூட வித்தியாசமானது. இதற்கு முன் அணிந்து வராதது. சேலை அணிந்திருந்தாள். ஆனால் அதிக கவர்ச்சியாக இருந்தது. கையில்லாத ஜன்னல் வைத்த ஜாக்கெட், இடுப்புதெரிய கட்டியிருந்த சேலை, உதட்டில் சிவப்பு நிற சாயம், இடைகள் அசைந்தாட கீல்ஸ் சப்தத்துடன் நடந்து வந்தவள் தன் இருக்கையில் அமர்ந்து கணிணியை ஆன் செய்தாள். வெளியில் நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்பு இது போன்றதொரு மழை நாளில் இவ்வலுகத்தில் சேர்ந்தாள்.



முதல்நாள் அலுவலகத்தில் சேர்ந்த அன்று பூங்கொத்துகளும், கலர் தாள்களில் சுற்றப்பட்ட சாக்லெட்டுகளும் அவளுக்கு அளிக்கப்பட்டன. அவள் அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்கள் வேலை தரப்படவில்லை. வேலை எதுவும் இல்லாமல் அலுவலகத்திற்கு சும்மாவே வந்து சென்றாள். அவளுக்கு அப்போது நண்பர்களும் கிடைக்கவில்லை. அவளுடன் பத்து பதினைந்து பெண்கள் வேலை செய்கின்றனர். அந்த பெண்கள் எல்லாம் திருமணம் ஆனவர்கள். அவர்கள் டிவி சீரியல் பற்றியும், மாமியார் கொடுமை பற்றியுமே அதிகம் பேசுவார்கள். ஒருமுறை டாய்லெட் சென்றிருக்கும் போது மறதியில் செல்போனை மறந்து வைத்துவிட்டாள். அருணா அதை பத்திரமாக எடுத்து அவளிடம் கொடுத்தாள். அருணா முதன் முதலாக அவளிடம் அந்நோன்யமாக பழகினாள்.



"உங்க பேர் என்ன?"       

"ரீமா சிங்"

"எந்த ஊர்"

"பஞ்சாப்"

"என்ன படிச்சிருக்கீங்க?"

"பி.எஸ்.சி எலக்ட்ரானிக்ஸ்"

"என்ன வேலை உங்களுக்கு?"

"சோர்சிங். ரெசிஸ்டர், டிரான்சிஸ்டர், கெபாசிட்டர் போன்ற எலக்ட்ரானிக் பார்ட்ஸ் யாரிடம் விலை கம்மியா கிடைக்குதோ அவங்ககிட்டயிருந்து வாங்குறது என்னோட வேலை"

"எனக்கு எலக்ட்ரானிக்ஸ்னாலே அலர்ஜி"

"எனக்கு எலக்ட்ரானிக்ஸ் விருப்பமான பாடம்"

"உன்னோட டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு"

"தேங்க்ஸ்"



சேத்தன் அவள் டீமில் ஒருவன். அவன் மேனேஜரிடம் திட்டு வாங்காத நாட்களே கிடையாது. எதற்கெடுத்தாலும் திட்டு. திட்டு வாங்கும் போதெல்லாம் கைகட்டி நிற்பான். சில சமயம் தலையை குனிந்து கொள்வான். அவனுக்கு அவமானமாக இருக்கும். திட்டும் சப்தம் கேட்டு தூரத்தில் அமர்ந்திருப்பவர்கள் எழுந்து நின்று பார்த்துவிட்டு அமர்ந்து கொள்வார்கள். திட்டும் போது அவமானம் தாங்காமல் பயம் அதிகரித்து அவன் சொட்ட மண்டையெல்லாம் வேர்த்துவிடும். ரீமாவும் சேத்தன் திட்டு வாங்குவதை பலமுறை பார்த்திருக்கிறாள்.



அலுவலக ஆண்டுவிழாவை முன்னிட்டு பாட்டுபோட்டி, நடனப்போட்டி, நாடகம் போன்ற போட்டிகள் நடத்தவிருப்பதாக அனைவருக்கும் மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டது. மேலும் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் சேத்தன் அல்லது ரீமாவை தொடர்பு கொள்ளவும் என்று மெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆண்டுவிழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அலுவலகம் விழாக்கோலம் பூண்டது. கலாச்சார தினம் என்ற நாள் அறிவிக்கப்பட்டு அன்றைய தினத்தில் கலாச்சார உடையில் வரும் ஆண்கள் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேத்தனும், ரீமாவும் இருவர் நடனப்போட்டியில் பங்கு பெறுவது உறுதியானது. இருவரும் அதற்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.



அருணா திருமணத்திற்காக வேலையை விட்டு நிற்கப்போவதாக ரீமாவிடம் கூறியினாள்.



ரீமா "கல்யாணம் பண்ணிட்டு வேலை செய்யலாமே?"

"எனக்கு வேலை பார்க்கிறது இஷ்டம். ஆனாள் அவருக்கு இஷ்டமில்லை. வீட்ல குழந்தை குட்டி பிறந்திடுச்சின்னா எப்படி சமாளிப்பதுன்னு கேள்வி கேட்கிறார்"

"நீ என்ன கல்யாணம் ஆன அடுத்த நாளேவா குழந்தை பெத்துக்க போற?. எனக்கு இந்த மாதிரியான உடன்பாட்டில் சுத்தமா விருப்பம் இல்லை"

"இன்னும் இந்த சொஸைட்டில ஆண்களின் அதிகாரம் மறைமுகமா அதிகமா இருக்கு. படிச்ச பொண்ணு வேணும் ஆனா வேலை செய்ய கூடாது. நாற்பது லட்சம் வரதட்சனை கொடுத்துதான் என் கல்யாணம் நடக்கப்போகுது"



ரீமா அருணாவிடம் மேற்கொண்டு விவாதம் செய்யவில்லை. இரண்டு மாதத்தில் அருணா வேலையை விட்டு நின்று கொண்டாள்.



வாரவிடுமுறை நாளான சனிக்கிழமை காலை ஏழு மணிக்கு மாதாபூர் அருகேயுள்ள பொட்டல் நிலத்தில் அலுவகத்திலுள்ள ஆண்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். அதிகமானோர் தொப்பை வைத்த ஆண்களே. அவர்கள் விளையாடுவதை விட அலுவலக கதைகளை பேசுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர்.



"தல, உங்க ஆள் ரீமாவை சேத்தன் எப்படியோ கரெட் பண்ணிட்டான்"

"அது சின்ன பொண்ணுங்க, அதை போய் அப்படி பேசுறீங்க"

"அது சின்ன பொண்ணா. அதுக்கு இருபத்தி ஆறு வயசு"

"நம்மாள் வேலை செய்றத தவிர மத்த எல்லா வேலையையும் சரியா செய்றார்"

"ஆமா நிஜமாகவே கேட்கிறேன். ரீமாவுக்கும் சேத்தனுக்கும் இடையில ஏதும் மேட்டர் ஓடுதா?"



ரீமாவுக்கும் சேத்தனுக்கும் இடையே உள்ள உறவை புரிந்த கொள்ள அவர்கள் பற்றிய பேச்சு முதன்முதலாக கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.



அலுவலகம் கூட ஒரு வகையில் வீடு. இவர்கள் ஒவ்வொருவரும் கணிணி முன் அமர்ந்து வேலை செய்தாலும் சிந்தனையெல்லாம் மற்றவர்களை பற்றியதாகவே உள்ளது.



அலுவலக ஆண்டுவிழாவானது மழைக்காலத்தின் ஓர் அழகான மாலைப் பொழுதில் நடைபெற்றது. அவள் வேலை பார்க்கும் அலுவலகம் பன்னாட்டு நிறுவனம். இந்த விழாவிற்காக அலுவலக இயக்குனர் அமெரிக்காவிலிருந்து வந்திருந்தார். அவருக்கு நாற்பது வயது இருக்கும். தலையில் ஒரு முடி கிடையாது சுத்த வழுக்கை, புருவத்தில் கூட முடிகள் இல்லை, ஆள் மட்டும் வெள்ளைவெளேர் என இருந்தார். அழகாக சேலை உடுத்திய பெண் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவரை நிகழ்ச்சி நடக்கவிருக்கும் மேடையின் முதல் வரிசையில் உட்கார வைத்தாள். மேடையிலிருந்த ஸ்பீக்கரில் ஹிந்தி பாடல் ஒலித்தது. ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். நிகழ்ச்சி பாட்டு கச்சேரியிலிருந்து ஆரம்பமானது. சேத்தனும் ரீமாவும் நிகழ்ச்சி அமைப்பாளர் என்பதால் அவர்களின் தலை மேடையில் அதிகம் தென்பட்டது.



இருவர் நடனப்போட்டியில் அடுத்தது சேத்தனும், ரீமாவும் ஆடவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. ரீமாவை இப்போது பார்ப்பவர்களுக்கு அதிகம் ஆச்சர்யம் அளித்தது. இந்தப் பெண்ணுக்குள் இவ்வளவு அழகா என்று புகழ்பாட தொடங்கினர். இடுப்பில் சேலையை மடித்து டோத்தி போல் கட்டியிருந்தாள், மார்பகத்தின் பிளவு தெரியும் படி ஜாக்கெட் அணிந்திருந்தாள். சேத்தன் சட்டையில்லாமல் டோத்தி மட்டும் கட்டியிருந்தான். உயிரே படத்திலிருந்து "நெஞ்சினிலே நெஞ்சினிலே" ஹிந்தி பாடல் ஒலித்தது. அரங்கம் முழுவதும் ஒரே ஆரவாரம். பாடல் முடிந்த பின்பும் பார்வையாளர்களின் கண்களில் ரீமா ஆடிக் கொண்டிருப்பது போல் பிரம்மை நீடித்தது. இருவர் நடனப்போட்டியில் சேத்தனும், ரீமாவும் வெற்றி பெற்றனர்.



சேத்தனின் பூர்விகம் பாகிஸ்தான். சேத்தனின் தாத்தா சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானில் வாழ்ந்து வந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தனர். அப்படி குடிபெயர்ந்தவர்களில் சேத்தனின் குடும்பமும் ஒன்று.



மழை சிறு தூரலாய் பெய்து கொண்டிருந்தது. சாலையில் செல்பவர்கள் கைகளில் குடை இருந்தது. தள்ளுவண்டியில் மக்காச்சோளத்தை தீயில் சுட்டு விற்பவனிடம் இளம் தம்பதியினர் சுட்ட மக்காச்சோளத்தின் மீது உப்பு மிளகாய் பொடியை எலுமிச்சைபழத்தின் தோளால் தொட்டு நன்கு தேய்த்து தரச் சொல்லி கேட்டனர். மழைக்கு காரமும் சூடான மக்காச்சோளம் நாவிற்கு சுவையாக இருந்தது. இந்த ஊர் மக்கள் மழைக்காலத்திற்கு நன்கு பழக்கப்பட்டிருந்தனர். மழைக்காலத்தை ரசிக்கின்றனர். மழையை விரும்புகின்றனர்.



ரீமா ஹைய்தராபாத் சென்ட்ரல் செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாள். ரீமா இன்றும் அழகாகவே இருந்தாள். நீலநிற ஜீன்ஸ் பேண்டும், சிகப்பு நிற டீ-சர்ட்டும் உடுத்தியிருந்தாள். கண் புருவத்திற்கு கருப்புமை தீட்டியிருந்தாள், உதடுகளுக்கு லேசாக சாயம் பூசியிருந்தாள். ஹைய்தராபாத் சென்ட்ரல் வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறிக்கொண்டாள். பஸ் மைத்ரிவனம் சிக்னலில் பச்சைநிற விளக்கிற்காக காத்திருந்தது.



அந்தபெண் அந்த ஆணை இறுக்கமாக கட்டியிருந்தாள். பெண்ணின் சிகப்பு நிற அண்டர்வேர் அவள் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டிலிருந்து விலகி தெரிந்தது. பொது இடம் என்று பார்க்காமல் அந்த பெண் அந்த ஆணின் கழுத்துப்பகுதியில் முத்தமிட்டாள், காதை கடித்தாள். பஸ்ஸில் ரீமாவின் அருகில் அமர்ந்திருந்த இளைஞன் அந்தப் பெண்ணின் செயலை பார்த்து சிரித்தான். ரீமாவும் அதை பார்த்து சிரித்தாள். சிக்னல் சிகப்பிலிருந்து பச்சைக்கு மாறியதும் அந்த ஆணின் டூ-வீலர் சீறிக் கொண்டு முன்னே சென்றது. கல்லூரி மாணவியர் சிலர் சிக்னலை அடுத்த பஸ்நிறுத்தத்தில் இறங்கினர்.



ரீமா வாரவிடுமுறை நாட்களை சேத்தனுடன் செலவழித்தாள். ரீமாவும் சேத்தனும் சிந்தி மொழியில் பேசிக் கொண்டனர். இந்த மொழி கூட இவர்கள் இருவரையும் மற்றவர்களிடமிருந்து தனிமைபடுத்தியிருக்கலாம்.



மதிய உணவு சரியாக பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகும். கேண்டீன் அறையினுள் ஜந்து கண்ணாடி மேஜைகள் இருக்கும். ஒவ்வொரு கண்ணாடி மேஜையை சுற்றி மரத்தினால் செய்யப்பட்ட ஜந்து சேர்கள் போடப்பட்டிருக்கும். மஞ்சள், சிவப்பு நிறக்குடுவையினுள் குண்டு பல்புகள் அந்தரங்கத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும். சுவரில் பெயர் சொல்லி விளக்கமுடியாத பெயிண்டிங்கள் வரையப்பட்டிருக்கும். கூட்டம் கூட்டமாக அமர்ந்து உணவு உண்பார்கள். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்களின் மதிய உணவில் நிச்சயம் ஊறுகாய் இருக்கும். ஊறுகாயானது காரம், உப்பு, எண்ணெய் அதிகமாக இருக்கும். ஏதாவது காய்கறியை பொறியல் செய்து எடுத்து வந்திருப்பார்கள். முதலில் சோற்றில் ஊறுகாயை போட்டு பிசைந்து தின்பார்கள். பிறகு பொறியலுடன் சாதத்தை பிசைந்து தின்பார்கள், பொறியலிலும் காரம் அதிகமாக இருக்கும். இறுதியாக சோற்றுடன் தயிர் சேர்த்து தின்பார்கள்.



ஆண்டுவிழாவிற்கு பின்னர் சேத்தனும், ரீமாவும் அலுவலகத்தில் பிரபலமானார்கள். இப்போதெல்லாம் மதிய உணவு வேளையில் அவர்களை பற்றியே அனைவரும் பேசினர்.



கல்யாணம் ஆன பெண்கள் இப்படி பேசிக்கொண்டிருந்தனர்.



"ஏன் சேத்தன் அவள் பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான்?"

"அந்த அவள் யாரு?"

"அதாண்டி பஞ்சாப்காரி ரீமா"

"அப்படியா நீ அவளை அவனோட எங்க பார்த்த?"

"என் புருஷனோட ஹைய்தராபாத் சென்ட்ரலுக்கு ஷொப்பிங போயிருந்தேன். அங்க அவளோட வந்திருந்தான்"

"அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பெண்குழந்தை இருக்கே"

"கல்யாணம் ஆனா என்னடி. லைப்-பாட்னர் ஒருத்தி. பிஸ்னஸ்-பாட்னர் ஒருத்தி" என்று சொன்னதும் கூட்டத்திலிருந்தவர்கள் கலகலவென சிரித்தனர்.



இரவு முழுவதும் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே மழைநீர் குளங்கள் அமைத்திருந்தது. தார் சாலைகள் பழுதடைந்து பெரிய பள்ளங்கள் சாலையின் மத்தியில் உருவாகியிருந்தது. இந்த மழைக்கு பிறகும் காலைவேளையில் வானம் கருத்தே இருந்தது.



ஹை-டெக் சிட்டியிலிருந்து மாதாப்பூர் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல்பங்கின் வலதுபுறம் உள்ள தெருவின் இறுதியில் சாய்பாபா கோவில் உள்ளது. சாய்பாபா கோவிலின் இடதுபுறம் உள்ள குறுகிய சந்தின் இறுதியில் ரீமா தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் உள்ளது. அபார்ட்மெண்டின் எதிர்புறத்தில் எருமை பண்ணை உள்ளது. எருமை சானியின் நெடி அபார்ட்மெண்டை சுற்றி எப்போதும் இருக்கும். ரீமா முதல் மாடியில் தங்கி இருக்கிறாள். வாசற்கதவை திறந்து வெளியே வந்து நின்றாள். விடிந்து வெகுநேரம் ஆகியும் சூரியன் வானில் தெரியாமல் வானம் முழுவதும் மேகமூட்டமாக இருப்பதை பார்த்தாள். மூச்சை ஒருமுறை நன்றாக உள்ளிழுத்தாள். எருமை சானியின் நெடி காற்றில் கலந்திருப்பதை உணர்ந்தாள். உள்ளிழுந்த மூச்சை மெதுவாக வெளியிட்டாள். ரீமாவின் வீட்டு வாசலை கடந்து சென்றவர் ரீமாவை பார்த்தார். கையில்லாத பனியனிலிருந்து பிரா விலகி இருந்தது, பனியன் இறக்கமாக இருந்ததால் மார்பகங்கள் தாராளமாய் வெளியே தெரிந்தது, அரைக்கால் டிரவுசரின் கொக்கிகள் சரியாக மாட்டாமல் டிரவுசர் ஒருபுறம் இறங்கியிருந்தது. கால்மயிர்கள் வலிக்கப்பட்டு இருந்தன.



"'குட் மார்னிங் ரீமா"

"குட் மார்னிங்" 

"மணி எட்டு ஆகுது. ஆபிஸ்க்கு கிளம்பளயா?"

"இன்னைக்கு என்னோட பிறந்த நாள். நேத்து ராத்திரி பார்ட்டிக்கு போயிட்டு வர லேட் ஆயிடுச்சி"

"நேத்து ராத்திரி உன்னை சேத்தன் தூக்கிட்டு வந்ததை பார்தேன்"

அசட்டுத்தனமாய் சிரித்துக் கொண்டு தலையை குனிந்தாள்.

"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரீமா"

"நன்றி" கூறிவிட்டு வாசற்கதவை சாத்தினாள்.



சேத்தனின் டூ-விலர் பார்க்கிங் பகுதியில் நின்று கொண்டிருந்தது.



சூரியன் மாலைநேரம் மேற்கே சாயும் போது தேநீர் நேரமும் ஆரம்பமாகும். தேநீர் தரும் புத்துணர்வைவிட மாலை நேரம் சூரியனை பார்ப்பதையும், மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது எறும்பு போல் செல்லும் வாகனங்கள், குளிர்ச்சியான காற்றும், அரட்டையுமே அதிக புத்துணர்வை அளித்தது.



கேரம்-போர்ட் ஆடிக்கொண்டிருந்த ஆண்கள் கூட்டம்,



"ரீமாவை சேத்தன் கையாள தூக்கிட்டு வந்தாங்க?"

"ஏன் கையாள தூக்கிட்டுவந்தான்?"

"அவள் என்னோட அப்பார்ட்மெண்டில முதல் மாடியில இருக்கா. பிறந்தநாளுக்கு முந்தன நாள் ராத்திரி ரீமா சரியான தண்ணி அடிச்சி நடக்க முடியாம சேத்தன் அவளை தூக்கிட்டு அபார்ட்மெண்ட்டுக்கு வந்தான்"

"அந்த பொண்ணு நல்ல பொண்ணு மாதிரி இருக்கு. இவர் சும்மா ரீல்விடுகிறார்"

"நீங்க வேணா கூட வாங்க சேத்தன் கிட்ட போய் கேட்கலாம். ரீமா தண்ணி அடிப்பாளான்னு"

"நானும் சில சமயம் பார்த்திருக்கிறேன். அந்த பொண்ணு தம் அடிக்கிறத"

"அன்னைக்கு ராத்திரி முழுவதும் சேத்தன் அவள் வீட்ல இருந்திருக்கான். அவன் இருந்ததுக்கு சாட்சி அடுத்த நாள் காலையில சேத்தன் டூ-வீலர் எங்க அபார்ட்மெண்ட்ல நின்னது"

"இது அவன் பொண்டாட்டிக்கு தெரியுமா?"

"இது என்ன நேத்து இன்னைக்கா நடக்குது. ஆறுமாதமா சேத்தன் அவள் வீட்லதான தங்கியிருக்கான்"



அலுவலகத்தில் அவர்கள் என்பதே ரீமா, சேத்தன் என்றாகி போனது. இவர்கள் இருவர் பற்றிய சிந்தனையிலே பலருக்கு இரவில் தூக்கம் இல்லாமல் போனது.



ரீமா இந்த ஒரு வாரகாலம் பதற்றமாகவே இருக்கிறாள். அலுவலகத்திற்கு காலை பதினோரு மணிக்கு மேல் வருகிறாள். சாயந்திரம் ஜந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பிவிடுகிறாள். இந்த ஒரு வாரகாலம் அவள் உடுத்தும் உடைகளிலும் கவனம் செலுத்துவதில்லை.



காலையில் தொடங்கிய மழை இன்னும் நின்றபாடில்லை. ஹபிஸ்பெட் பாலத்தின் மீது அமைக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. சாலையில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாக இல்லை. ஹபிஸ்பெட் பாலத்தின் இறக்கத்தில் சேத்தனின் அபார்ட்மெண்ட் உள்ளது. தெருவில் நாய்கள் ஊலையிடும் சப்தம் கேட்டது. சேத்தன் வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தாள் ரீமா. சேத்தன் வீட்டிலிருந்து வெளியே வராமல் வீட்டினுள்ளே இருந்து கொண்டான். ரீமா நாளை பார்க்க வருவதாக சேத்தனிடம் கூறினாள். துப்பட்டாவால் தலையை மறைத்துக் கொண்டு முதல் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தாள். அதே அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் சகஊழியர் எதிரே வரும் ரீமாவை பார்த்து சிரித்தார். ரீமா துப்பட்டாவால் முகத்தை மறைத்துக் கொண்டு வேகமாக அவரை கடந்து சென்றாள்.



"ரீமா தினமும் ஆபிஸ்ல இருந்து சீக்கிரமே கிழம்பி நேரா சேத்தன் வீட்டுக்கு போறா. ராத்திரி பதினோரு மணி வரைக்கும் அங்கதான் தங்கியிருக்கா"

"நார்த்தில கலாச்சாரமே அப்படித்தான். நம்ம ஊர் மாதிரியெல்லாம் கிடையாது"

"இதெல்லாம் வீட்ல வச்சாயா செய்றது. ஹோட்டல், ரிசார்ட், பார்க்கின்னு எவ்வளவு இடம் இருக்கு"

"அவன் பொண்டாட்டி அவனுக்கு ஒழுங்கா சோறு போட்டிருந்தா இந்த நாய் எதுக்கு ஊர் மேய போகுது. அவன் பொண்டாட்டி சரியில்லை. எல்லாம் அதுதான் காரணம்"



சேத்தன் ரீமாவை பற்றி தினம் ஒரு கதை அலுவகத்தில் உலாவிக் கொண்டிருந்தது. அதில் எது உண்மை எது பொய் என்று எவராலும் சரியாக சொல்ல முடியவில்லை. ரீமா தினமும் அணிந்து வரும் ஆடை, போட்டுவரும் சூ, உதட்டு சாயத்தின் நிறம் என்று அவளின் ஒவ்வொரு மாற்றத்திற்கும் சேத்தனை காரணமாக வைத்து பேசினர்.



ராகவ்ரெட்டி கைராசியான டாக்டர். பிரசவத்திற்கு பெயர் போனவர். மியாபூர் ஆல்வின் காலணியில் உள்ளார். எப்போதும் அவர் கிளினிகில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் அன்று கூட்டம் அதிகமாக இல்லை. டாக்டரை பார்க்க சேத்தனும் ரீமாவும் வந்திருந்தனர்.



"வாந்தி வருதா?"  

"இல்ல டாக்டர்"

"நல்லா சாப்பிடுங்க"

"சரி டாக்டர்"

"எத்தனை நாளைக்கு ஒரு முறை புருஷனோட சேர்றீங்க?"

"வாரத்துக்கு ஒரு முறை"

"ஆணுறை உபயோகிக்க சொல்லுங்க. வயித்துல இருக்கிற குழந்தைக்கு எந்த பாதிப்பும் வராம பார்த்துக்கோங்க"



அந்தப்பெண் சென்ற பிறகு ரீமா உள்ளே சென்றாள்.



"எதுவுமே சாப்பிட முடியலை. சாப்பிடதெல்லாம் வாந்தியா வருது"

"எத்தனை நாளா இருக்கு"

"இரண்டு நாளா"

"இந்த மாசம் பீரியட்ஸ் வந்துடுச்சா?"

"இன்னும் வரலை டாக்டர்"

"........





"நேத்து சேத்தன் ரீமாவை பிரசவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு வந்தான்"

"எதிர்பார்த்தது தான் நடந்திருக்கு. எத்தனை மாசமா?"

"அது தெரியலை"

"நான் கூட கவனிச்சேன். அவள் வயிறு கொஞ்சம் வெளிய தள்ளிட்டு தெரிஞ்சது"



சேத்தன்  சில மாதங்களில் பஞ்சாபில் வேலை கிடைத்து குடும்பத்துடன் பஞ்சாப் சென்று குடியேறினான்.



-------------



எனக்கு சேத்தன் நன்கு பழக்கமானது அலுவலக ஆண்டுவிழாவிற்கு பிறகு. அவனை நல்ல நண்பன் என்றே சொல்ல வேண்டும். என் அண்ணன் உயிரோடு இருந்திருந்தால் அவனுக்கும் சேத்தன் வயது இருக்கும். சிறுவயதில் கிணற்றில் குளிக்கும் போது நீர் பாம்பு கடித்து இறந்து போனான்.



சேத்தனின் மனைவி கூட சேத்தனை போல் நன்கு பழகக்கூடியவள். அவள் எனக்கு சிந்தி தெரியும் என்பதால் சிந்தியில் பேசச்சொல்லி வற்புறுத்துவாள். சிந்தியில் கவிதைகள் எழுதுவாள். சில கவிதைகள் போட்டியில் பரிசும் பெற்றுள்ளன. இந்த செருப்பு கூட ஹைய்தராபாத் சென்ட்ரல் சென்றிருந்த போது சேத்தனின் மனைவி வாங்கிக்கொடுத்தது.



எந்தவொரு பொருளாதார நிர்பந்தத்தாலும் நான் இங்கு வேலை பார்க்க வரவில்லை. ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும், தெரிந்து கொள்ள வேண்டும் என்று தான் வேலை செய்து வருகிறேன். ஹைய்தராபாத் வந்த சில மாதங்கள் எனக்கு நண்பர்களே கிடைக்கவில்லை. ஆணும் பெண்ணும் சந்தித்து பேசினாலே ஏற இறங்க பார்க்கிறார்கள். அருணாதான் முதன் முதலில் நட்புடன் பழகினாள். அவளும் சில மாதங்களில் பிரிந்து சென்றாள். அதன் பின் சேத்தனின் நட்பு கிடைத்தது.



சேத்தனும் அவன் மனைவியும் டூ-வீலரில் சென்று கொண்டிருந்த போது லாரி ஒன்றில் மோதி பலத்த காயம் அடைந்தனர். சேத்தனுக்கு கை முறிவு ஏற்பட்டது. சேத்தனின் மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. ஒன்றிரண்டு தினங்கள் அலுவலகத்திற்கு சீக்கிரமே கிளம்பி அவர்களை பார்த்துவிட்டு வீடு வந்து சேர இரவு பனிரெண்டு மணி ஆகிவிடும். எங்களுடன் பணிபுரியம் ஒருவர் அதே அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். ஒவ்வொரு முறை அவர்கள் வீட்டிலிருந்து வெளி வரும் போது அவர் முன் வருவார். அவரின் பார்வையே ஏதோ தவறு செய்தவரை பார்ப்பது போலவே இருக்கும். இவர்களெல்லாம் ஜந்துக்கள் என்று அப்போது முடிவு செய்தேன்.



பஞ்சாபில் இருக்கும் போது மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பப்பிற்கு செல்வேன். நன்றாக குடிப்பேன். விடிய விடிய ஆட்டம் போடுவேன். ஒரு நாள் அலுவலகத்தில் சிகரெட் குடித்துக் கொண்டிருந்த போது அலுவலக நண்பர் ஒருவர் அருகில் வந்து ஒரு மணி நேரம் பாடம் எடுத்தார். அதுவும் அவர் குறிப்பாக பெண்கள் குடும்ப விளக்குகள் இவ்வாறு செய்வது தவறு என்றார். அன்றிலிருந்து அலுவலகத்தில் சிகரெட் புகைப்பதை நிறுத்திக் கொண்டேன். பிறந்த நாள் விருந்துக்கு சேத்தனையும் அவன் மனைவியையும் அழைத்திருந்தேன். போதை தலைக்கேரி ஆடிய ஆட்டத்தில் அரங்கத்திலே வாந்தி எடுத்தேன். சேத்தனும் அவன் மனைவியும் பத்திரமாக அழைத்து வீடு வந்து சேர்த்தனர். என்னை குளிப்பாட்டி ஆடை மாற்றி விட்டாள் சேத்தனின் மனைவி. சேத்தனின் வண்டி வரும் வழியில் பஞ்சர் ஆகிப்போனதால் வண்டியை என் வீட்டில் நிறுத்திவிட்டு இருவரும் நள்ளிரவு ஆட்டோ ஏறி அவர்கள் வீடு சென்றனர்.



அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது இரவு நேரமாகிப்போனதால் ரோட்டு கடையில் விற்ற மசாலா தோசை வாங்கி சாப்பிட்டேன். அடுத்த நாள் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மாத்திரை வாங்கிச் சாப்பிட்டும் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. சேத்தன் மனைவியிடம் போன் செய்து சொன்னவுடன் சேத்தனை அனுப்பி வைத்தாள். தெலுங்கானா பந்த் காரணமாக மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தன. தேடித்தேடி கடைசியில் பிரசவம் பார்க்கும் மருத்துவமனையில் சென்று வைத்தியம் பார்த்தேன். அன்றும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவன் தன் கற்பமான மனைவியுடன் வந்திருந்தான். அவனும் அப்படியே ஏதோ குற்றம் செய்தவர்களை பார்ப்பது போல் பார்த்தான்.



---------



ரீமா மெயில் எழுதிக் கொண்டிருந்தாள். மெயிலின் தலைப்பு "இன்று எனது கடைசி நாள்" 



'இன்று இந்த அலுவலகத்தில் எனது கடைசி வேலை நாள். எனக்கு இந்த அலுவலகம் நிறைய கற்று தந்துள்ளது. நான் இந்த அலுவலகத்திற்கு என்றும் கடமைபட்டுள்ளேன்.



இந்த நகரை மிகவும் நேசிக்கின்றவள். வாரவிடுமுறை நாட்களை அதிகம் கழித்த ஹைதராபாத் சென்ட்ரல், கோல்கொண்டா கோட்டை, சில்பராமம் இடங்கள் என்றும் என் நினைவில் இருக்கும். இந்த நகரில் மழைக்காலம் நான் விரும்பி ரசித்தது. சேத்தனுக்கும் எனக்கும் நட்பு ஆரம்பமானதும் இந்த மழைக்காலத்தில்.



பிரிவு என்பது முடிவு இல்லை, பிரிவு நம்மிடையே அன்பை, நட்பை அதிகப்படுத்தும் என்று நம்புகிறேன். என் வாழ்வில் புதிய அத்தியாயம் அடுத்த மாதம் முதல் ஆரம்பம். அந்த அத்தியாத்தில் ஒரு ஆணுடன் பயணிக்க போகிறேன். பத்திரிக்கை அனுப்புகிறேன் புதிய அத்தியாயத்தின் முதல் நாளில் உங்கள் அனைவரையும் எதிர்பார்க்கிறேன்.



அன்புடன்,

ரீமா சிங்.



(பின்குறிப்பு: தற்போது சேத்தன் பணிபுரிந்து வரும் நிறுவனத்தில் பணிபுரிய போகிறேன்)'



ரீமா மழையில் நனைந்த படியே அலுவலகத்தை விட்டு வெளியே சென்றாள். அவளை பின் தொடர்ந்து வந்தவர்கள் அடுத்த சேத்தன்-ரீமா யார் என்று அலுவலக வாசலில் நின்று எதிர்நோக்கி காத்திருந்தனர்.



-----------------------------------------------------------------------------------------------------------------முற்றும்--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



கிரகம்.

08/01/11



ஹைய்தராபாத்,

+91 9000546422.

பார்வைகள்