Monday, February 22, 2010

இருமல் - சிறுகதை

ராஜேஷ் காய்ச்சல் வந்தவன் போல் முடங்கிப்போய் படுத்துக் கிடந்தான். இருமல் அவனது தூக்கத்தை தடுத்தது. தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தான். அவன் அருகில் படுத்திருந்த செல்போன் சிணுங்கியது. இருமலையும் பொருட்படுத்தாது செல்போனை ஆன் செய்து பேசத்துவங்கினான். ராஜேஷ் 'யார் பேசுறது?' மறுமுனையில் 'நான் ராஜேஷிடம் பேசலாமா?' 'நான்தான் ராஜேஷ், சொல்லுங்கள்'. 'நான் யமுனா, போகஸ் டெக்னாலஜியின் ஹட்ச் ஆர் மேனேஜர், நீங்க சீனியர் டிசைன் இன்ஜினேயர் போஸ்டுக்கு நடந்த இன்டர்வியூல செலக்ட் ஆயிருக்கீங்க'. 'ரொம்ப நன்றி, என்னோட சம்பளம்?' 'நீங்க முன்பே கேட்டிருந்த சம்பளம் பத்துலட்சம்' 'உங்க கம்பெனியில நோட்டீஸ் பீரியட்ஸ் எத்தனை மாசம்?' 'இரண்டு மாசம்' 'உங்களுக்கு இன்னும் ஒரு டெஸ்ட் பாக்கியிருக்கு, அதை முடிச்ச பிறகு தான் ஆஃபர் லெட்டர் அனுப்புவோம்'. தூங்கிகொண்டிருந்த இருமல் மீண்டும் வந்தது. வாயை துணியால் பொத்திக்கொண்டு இருமினான். இருமல் அடங்கவில்லை. இருமலால் யமுனாவின் பேச்சை சரிவர கேட்கமுடியாததால் அவளை திரும்பவும் பேசச் சொன்னான். அப்போதும் இருமல் வந்தது. 'உடம்பு சரியில்லையா?' என்று கேட்டாள். 'ஆமாம், சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி எல்லாம் ஒன்று சேர்ந்து வந்துவிட்டது. ஏதோ டெஸ்ட் பாக்கியிருப்பதாக சொன்னீர்களே என்ன அது?' 'மெடிக்கல் டெஸ்ட், இந்த வார இறுதியில் ஹேமதுர்கா டெஸ்ட் லேப் போய் டெஸ்ட் எடுத்துக்கோங்க. அதற்கான செலவை நாங்க கொடுத்துடுவோம். டெஸ்ட் ரிப்போர்ட்டை வாங்கி எங்களுக்கு கொரியர் செய்துடுங்க. எங்களுக்கு ரிப்போர்ட் கிடைச்ச இரண்டாவது நாள் உங்களுக்கு ஆஃபர் லெட்டர் கிடைக்கும். அதன் பிறகு நீங்க உங்க ஜாயினிங் டேட் சொல்லணும்'. ராஜேஷ் சரி என்று கூறியதும் யமுனாவுடனான தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. ராஜேஷ் காரி இருமியதும் கட்டி சளி வந்தது. சளியை துப்பிவிட்டு சூடான நீரை குடித்தான் தொண்டைக்கு இதமாக இருந்தது. கடிகாரத்தை பார்த்தான் மணி பத்தென காட்டியது.

ஹேமதுர்கா டெஸ்ட் லேபின் ரிசப்சனிஸ்ட் அழகாக இருந்தாள். கண்மை தீட்டியிருந்தாள். லைட்டாக உதடுகளுக்கு உதட்டுச் சாயம் பூசியிருந்தாள். ஒழுங்கான மடிப்புகளுடன் சேலை கட்டியிருந்தாள். வலது பக்க மார்பு சற்று தெரிவது போல் சேலை உடுத்தியிருந்தாள். ஆனால் கவர்ச்சியாகயில்லை. மொத்தத்தில் ஆரோக்கியமான அழகுடன் காணப்பட்டாள். ரிசப்சனிஸ்ட் 'ராஜேஷ்' என்று அழைத்தாள். அவன் எழுந்து அவள் அருகில் சென்றான். அவள் 'முதல்ல முதல் மாடிக்கு சென்று பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட் எடுத்துக்கோங்க. பிறகு இரண்டாவது மாடிக்கு சென்று இ.சி.ஜி எடுத்துக்கோங்க. கடைசியாக மூன்றாவது மாடிக்கு சென்று எக்ஸ்-ரே எடுத்துக்கோங்க. நாளை ஞாயிற்றுக்கிழமை ஆபிஸ் லீவ் ரிப்போர்ட்டை நீங்க திங்கள் கிழமை காலையில் பத்து மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளலாம்'. என்று ஒரே மூச்சில் பேசவேண்டியதை பேசி முடித்த அவள் அவனிடம் ஏதும் கேள்வி இருக்கிறதா என்று காத்திருந்தாள். ராஜேஷ் 'ஒகே' என்று கூறியதும் அவள் ராஜேஷ்க்கு நன்றி கூறிவிட்டு வேறொருவரின் பெயரை கூவினாள்.

ராஜேஷ் முதல் தளம், மற்றும் இரண்டாவது தளத்தை முடித்துவிட்டு மூன்றாவது தளம் செல்வதற்காக லிப்ட்டை எதிர்பார்த்து இரண்டாவது தளத்தில் காத்திருந்தான். லிப்டினுள் ஏறியதும் இருமல் வருவதற்கான அறிகுறிகளை உணர்ந்தான். அவன் நினைத்தது போல் இருமல் வந்தது. மூன்றாவது மாடி வந்தது. தொடர்ந்து இருமியபடியே எக்ஸ்-ரே அறையினுள் நுழைந்தான். லேப் டெக்னீசியன் ராஜேஷின் பனியன் சட்டையை கழட்டச் சொன்னான். டெக்னீசியன் 'உங்களுக்கு என்ன ப்ராளம்?' 'ப்ராபளம் எதுவும் இல்லை, புது கம்பெனி சேரப்போறேன் அதற்கான மெடிக்கல் டெஸ்ட்'. அவன் இருமல் இப்போதும் நிற்கவில்லை. 'மூச்ச நல்லா இழுத்துப் பிடிச்சிக்கோங்க, சொல்றப்ப விட்டுருங்க' என்று டெக்னீசியன் சொன்னது போல் செய்தான் ராஜேஷ். எக்ஸ்-ரே மெசின் ராஜேஷின் நுரையீரலை படம் பிடித்துக் கொடுத்தது. டெக்னீஷியன் எடுத்த படம் சரியாக வந்துள்ளதா என்று சரி பார்த்துவிட்டு ராஜேஷிடம் 'உங்களுக்குரிய எல்லா டெஸ்டும் எடுத்தாச்சி நீங்க போகலாம்'. அடங்காத இருமலை ராஜேஷ் வாயில் கைகுட்டையை வைத்து அடைத்தபடி ஹேமதுர்கா டெஸ்ட் லேபை விட்டு வெளியே வந்தான்.

ஹய் டூமா,

அதிகம்போனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஹதராபாத்தில் இருக்கப்போவதில்லை. ஆதலால் சென்னை கிழக்கு கடற்கரை சாலையோரம் ஏதாவது பங்களாவை பேசிமுடித்துவிடு. ஆமாம் நீ நினைத்தது சரிதான். எனக்கு புதியதோர் வேலை வாய்ப்பு வந்துள்ளது. அலுவலகமானது சோலிங்கநல்லூரில் உள்ளது. அதனால் தான் உன்னை இ.சி.ஆர் ஒரம் பங்களா பார்க்க சொல்கிறேன். இப்போது வேலை பார்க்கும் ஆபீஸில் சேர்ந்து மூன்று வருடங்களாகிறது. நன்றாகத்தான் உழைத்தேன். எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. சரியாக சொன்னால் கழுதைபோலத்தான் உழைத்தேன். இந்த வருட அப்ரைஸ்ஸலில் எனக்கு நன்றாக குத்திவிட்டார்கள். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள மேனேஜரை அணுகினேன். மேனேஜர் கூறிய ஒரே காரணம் ரிசசன். இந்த வருடம் யாருக்குமே அதிகமாக தரவில்லை, உன்னைப்போல சீனியர் எம்பிளாயிக்கு மட்டும்தான் அதிகமாக ஊதிய உயர்வு தந்திருப்பதாக கூறினான். விசாரித்து பார்த்ததில் மேனேஜர் கூறியது பொய்யென்று தெரிந்தது. அதன் பிறகு வேறொரு வேலை தேட ஆரம்பித்தேன். மூன்று பன்னாட்டு நிறுவனங்கள் எனக்கு வேலைதர தயாராகயிருந்தன. அதன் சம்பள விபரம் பின்வருமாறு இருந்தது. ஆறுலட்சம், எட்டுலட்சம், பத்து லட்சம் முடிவாக பத்துலட்சம் தர சம்மதித்த பன்னாட்டு நிறுவனத்தில் சேருவதாக உள்ளேன். மெடிக்கல் டெஸ்ட் ரிசல்ட் கையில் கிடைத்தவுடன் இப்போது வேலை பார்க்கும் கம்பெனியில் பேப்பர் போட்டுவிடுவேன்.

மகள் தர்சிணி எப்படியிருக்கிறாள்? அவளுக்கு இரண்டு வயது முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என் சார்பாக உன் மகளுக்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிடு. மனைவி எப்படியிருக்கிறாள்? கேட்டதாக சொல், உன் உடல் நலம் எப்படியிருக்கிறது? உடல் பூரண குணம் அடைந்துவிட்டதா? பதில் கடிதம் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

பங்களாவை பற்றி ஏதும் விவரம் தெரிந்தால் தெரிவிக்கவும்.

இப்படிக்கு,

ராஜேஷ

ஹதராபாத்.

என்று ராஜேஷ் நண்பன் ஒருவனுக்கு இ-மெயில் அனுப்பினான்.

ஹேமதுர்கா டெஸ்ட் லேபில் டெஸ்ட் ரிப்போர்ட் வாங்கச் சென்ற ராஜேஷ், டெஸ்ட் ரிசல்டில் ஏதோ ஒன்று நெகட்டிவாக வந்திருப்பதாக கூறிய ரிசப்சனிஸ்ட் ராஜேஸை கூகட்பள்ளியிலுள்ள டாக்டர் ரங்காரெட்டியை பார்த்து ஆலோசனை பெற்றுக்கொள்ளும்படி கூறினாள்.

டாக்டர் ரங்காரெட்டி செஸ்ட் ஸ்பெசலிஸ்ட். ராஜேஷ் அவரை பார்க்க சென்றிருந்தான். அவனுக்கு முன்னால் ஐந்து பேர் அமர்ந்திருந்தனர். ஆறாவதாக சென்று பதிவு செய்து கொண்டான். அட்டைபெட்டியினுள் தெலுங்கு மற்றும் ஆங்கில வார இதழ்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிலிருந்து ஆங்கில வார இதழ் ஒன்றை எடுத்து பக்கங்களை புரட்டிடத் துவங்கினான். முன்னால் அமர்ந்திருந்த ஐந்து பேர் பார்த்த பின்பு ஆறாவதாக சென்று ராஜேஷ் ஹேமதுர்கா டெஸ்ட் லேபிலிருந்து அனுப்பியிருப்பதாக கூறி டெஸ்ட் ரிசல்ட்டை கொடுத்தான். டாக்டர் படித்துப் பார்த்துவிட்டு எக்ஸ்-ரேயை கேட்டார். செவ்வகவடிவ வெள்ளை நிற பிளாஸ்டிக் டப்பாவின் மேலேயிருந்த கிளிப்பில் எக்ஸ்-ரேயை சொருகினார். பிளாஸ்டிக் டப்பாவின் வலது புறமிருந்த ஸ்விட்சை தட்டினார். டப்பாவின் உள்ளேயிருந்த லைட் ஒளிர்ந்தது. டாக்டர் எக்ஸ்-ரேயை சிறிது நேரம் பார்த்துவிட்டு 'டிரீட்மெண்ட ஆரம்பித்து எத்தனை மாதம் ஆகுது'. ராஜேஷ்க்கு அவர் என்ன கேட்கிறார் என்று புரியவில்லை. ராஜேஷ் 'நான் டிரீட்மெண்ட்டுக்காக வரவில்லை, நியூ எம்பிளாய்மெண்ட் மெடிக்கல் டெஸ்ட் எடுத்தப்ப, ஏதோ ஒரு டெஸ்ட் பெயில் ஆயிருந்ததா சொன்னாங்க. அதைப்பற்றி தெரிந்து கொள்ளத்தான் வந்திருக்கேன்'. டாக்டர் 'நல்லவேளை இப்பவாவது தெரிஞ்சிகிட்டீங்களே'. 'என்னது டாக்டர்?' 'உங்களுக்கு டியூபர் குளோசிஸ்ங்கர நோய் இருக்குது, குணப்படுத்திடலாம்' 'நான் புதிய கம்பெனியில் இன்னும் இரண்டு மாசத்துல ஜாயின் பண்ணணும். அதற்குள்ள சரியாகிடுமா?' 'இல்லப்பா, உனக்கு இப்ப இருக்கிறத பார்த்தா நோய் ஆரம்பித்து ஆறு மாதம் இருக்கும்போல தெரியுது. குறைந்தது ஆறு மாசம் முதல் ஒன்பது மாசம் ஆகும் முழுவதுமாக குணமாக'. 'நான் அப்படியே சென்னை போனகூட அங்கயிருந்து டிரீட்மெண்ட்டை எடுத்துக்கொள்ளலாமா?' 'இப்ப கிடைச்சிருக்கிற கம்பெனி சென்னையிலா இருக்கு?' 'ஆமா டாக்டர்' 'சில கம்பெனியில இந்த மாதிரி கேஸை எடுக்கமாட்டாங்க, ஏன்னா இது ஒரு தொற்றுவியாதி'. 'இதை முழுசா முடிவு செய்யுறதுக்கு ஸ்பவுட்டம் டெஸ்ட் எடுத்தா தெளிவா தெரிஞ்சிடும்'. 'எங்க டாக்டர் எடுக்கணும்?' டாக்டர் ராஜேஷ்க்கு ஸ்பவுட்டம் எங்க எடுக்க வேண்டும் அதை எப்படி எடுக்கவேண்டும் போன்ற விவரங்களையெல்லாம் அவனுக்கு கூறினார். ராஜேஷ் டாக்டருக்கு முண்ணூறு ரூபாய் பணம் செலுத்திவிட்டு எக்ஸ்-ரே, மெடிக்கல் ரிப்போர்ட் போன்றவற்றை பொறுக்கிக்கொண்டு டாக்டரின் கிளினிக்கை விட்டு மனபாரத்துடன் வெளியே வந்தான்.

ஹய் அன்பு,

நீ இழுத்துவிட்ட சிகரெட் புகையை என்னுடைய நுரையீரலும் சுவாசித்துள்ளது. நீ என்னுடன் இருந்த ஆறு மாதங்களில் நீ புகைத்துவிட்ட சிகரெட் புகையைத்தான் அதிகம் சுவாசித்துள்ளேன்.

ஸ்பவுட்டம் டெஸ்ட் ரிசல்ட் காசநோய்க்கு சாதகமாக அமைந்தது. இதைப்பற்றி யமுனாவிடம் கூறினேன். கடவுள் உங்களை காப்பாற்றுவார் என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டாள். கோட்டைக்கு ஆசைப்பட்டு கோமளியாக நிற்கிறேன்.

சென்னை வேண்டாம், இசிஆர் வேண்டாம், பங்களாவேண்டாம். எனக்கு ஹதராபாத்தே போதும். இங்கு கற்கள் அதிகமாக இருந்தாலும் மனிதர்கள் நல்லவர்கள். இன்னும் இரண்டு வருடம் இப்போது வேலை பார்த்துவரும் கம்பெனியிலே வேலையை தொடரலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

என்னுடைய இந்த வாழ்க்கை மாற்றத்துக்கு நீயும் ஒரு காரணம். உனக்கிருந்த காசநோய் எனக்கு வந்தது நீ புகைத்த புகையினால்தான் என்று புரிந்து கொண்டாயா?

இனிமேலும் நீ புகைக்க நினைத்தால் சுடுகாட்டில் உனக்கு குடிசை போட்டு தருகிறேன். எலும்பு கூடுகளுடன் சேர்ந்து கொண்டு நிம்மதியாக புகைக்கலாம். உனக்கு பின்னால் உன் குழந்தை தர்சிணி இருக்கிறாள். அவளுக்காவது நீ புகைப்பதை நிறுத்த வேண்டும்.

இப்படிக்கு,

ராஜேஷ

ஹதராபாத்.

இ-மெயில் அனுப்பிய பிறகு ராஜேஷ்க்கு இருமல் வந்தது. காரி இருமினான்.

- முற்றும் -

 உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

Thursday, February 18, 2010

பிரிவின் வலி - சிறுகதை

கழிவறைக் கதவை சாத்திவிட்டு சுவர் கடிகாரத்தை பார்த்தாள் அமுதா. சூரியன் உதயமாக இன்னும் அதிகம் நேரம் இருந்தது. கோடைகாலத்தின் வெப்பக்காற்றை மின்விசிறி அறை முழுவதும் நிரப்பி வைத்திருந்தது. வெளிக்காற்றை சுவாசிப்பதற்காக சன்னல் கதவை திறந்துவிட்டாள். வெளியே இருள் அப்பியிருந்தது. தூரத்தில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது.



மாடியில் சுவிட்ச் ஆன் செய்யும் சப்தம் கேட்டது. தண்ணீர் சிந்தும் சப்தம். மீண்டும் சுவிட்ச் ஆப் செய்யும் சப்தம் கேட்டது. மேல்மாடியில் அமுதாவின் மூத்த மகனும் மருமகளும் தங்கியிருக்கிறார்கள். நிசப்தம் தொடர்ந்தது.


அமுதா நடந்துவந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள். தூக்கம் வராமலே முழித்தபடி படுத்துக்கிடந்தாள். அமுதாவுக்கு இது ஒன்றும் புதிதானது அல்ல. பல நாட்கள் இவ்வாறு தூக்கம் வராமல் அதிகாலையிலே எழுந்துவிடுவாள். இப்படி சீக்கிரம் எழும் நாட்களில் அமுதாவின் மனது இளைய மகனை நினைத்து புலம்பிக் கொண்டிருக்கும்.


*
அன்று என் இளைய மகன் ராமு காலை சூரியன் எழுந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தான். நான் ரவாலட்டுவை பிய்த்து ராமுவின் வாயில் திணித்தேன். அவன் "தூ" வென்று துப்பினான். துப்பிய ரவாலட்டு துண்டுகள் என் கன்னத்தில் பட்டு கீழே விழுந்தது. நான் மீண்டும் ரவாலட்டினை பிய்த்து ராமுவுக்கு ஊட்டினேன். உட்கொள்ளாது துப்பினான்.


கண் முழித்த ராமு "என்னம்மா இது! கொஞ்சம் நேரம் தூங்க விடு."

நானோ, "எழுந்திரிடா, உனக்கு இன்னைக்கு பிறந்தநாள்." அனத்தல் தாங்காமல் எழுந்து கழிவறை சென்றான்.


 கழிவறையிலிருந்து வந்த பின்பு நான் அவனுக்கு தேநீர் பருக கொடுத்தேன். தேநீரை பருகிய படியே வீட்டுப்பாடம் செய்யத்துவங்கினான் ராமு.


ராமு குளிக்க செல்லும் முன்பு ரேடியோவை ஆன் செய்துவிட்டுத்தான் செல்வான். அவன் ஒரு இசைப்பிரியன். ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களை பாடியபடி குளிப்பான். இந்தப்பழக்கம் அவன் அப்பாவிடமிருந்து தான் வந்திருக்கக்கூடும். அவரும் இப்படித்தான் புதிதாக வரும் திரைப்படத்தின் பாடல் கேசட்டை உடனே வாங்கிவிடுவார். எண்ணிப்பார்த்தால் அவர் வாங்கிய கேசட் எண்ணிக்கை ஐந்நூறை தாண்டும். எங்கள் வீட்டில் மொத்தம் ஐந்து ரேடியோ இருந்தது. இப்போதெல்லாம் அந்த கம்பெனி இருப்பதே சந்தேகம் தான்.


குளித்துவந்த ராமுவுக்கு சூடாக எட்டு இட்லி பரிமாறினேன். இட்லியை பிய்த்து தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பர் என்று மூன்றிலும் தொட்டுத் தின்றான். சாப்பாட்டு விசயத்தில் ராமு என்னைப்போல்தான்.


ராமுவுக்கு பிறந்த நாள் பரிசாக பேண்ட், சட்டை, பனியன் மற்றும் உள்ளாடைகள் வாங்கி வைத்திருந்தேன். அதற்கு முன்பு வரை அவன் அரைக்கால் டிரவுசருடன்தான் எங்கும் சென்றுவருவான். ராமுவின் ஆசிரியர் அவனை உள்ளாடை அணியாமல் வந்ததற்கு தண்டித்ததாக ஒரு நாள் இரவில் படுக்கையில் தூங்குவதற்கு முன்பு கூறினான். எனது பரிசை பெற்றுக் கொண்ட ராமு முத்தம் ஒன்று கொடுத்தான்.


ராமுவின் செயல்களில் அப்போதெல்லாம் பெரிய மாற்றம் இல்லை. பள்ளிக்கு செல்வது, படிப்பது, விடுமுறை நாட்களில் கிட்டுப்புல் விளையாடுவது, கோலிக்குண்டு விளையாடுவது, சில நேரங்களில் ஊர் நூலகத்தில் சென்று வார இதழ்கள் படிப்பது, இதுதான் அவனது உலகமாகயிருந்தது. வீட்டுக்கு டிவி வந்த பிறகு கிரிக்கெட் பார்க்கத் துவங்கினான். அதன் பின்பு தெரு பசங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி எதிர் வீட்டு நாயக்கர் வீட்டு சன்னல் கண்ணாடியை உடைத்தான். ராமுவின் செயல்பாடுகள் அனைத்தும் வேறொருவரின் செயல்களை ஒத்தே காணப்பட்டது. அவனுக்கு சுயமாக யோசிக்கும் சிந்தனை அப்போது வரவில்லை.


இப்படி இருந்த என் மகன் ராமுவுக்கு எப்படி அந்த செயலை செய்ய நெஞ்சழுத்தம் வந்தது?


ராமுவுக்கு பனிரெண்டாம் வகுப்பு முழுப் பரிட்சை முடிந்தது. திருவண்ணாமலையிலிருக்கும் மாமா வீட்டுக்கு சென்று வர அனுமதிகேட்டான். நானும் மனநிறைவோடு அனுப்பிவைத்தேன். இது தான் ராமுவுக்கும் எனக்குமான முதல் பிரிவு. ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தான். ரிசல்ட் வெளிவந்தது. நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தான். சென்னையிலுள்ள ஐ.ஐ.டியில் இன்பர்மேஷன் டெக்னாலஜியில் சீட் கிடைத்திருப்பதாக கூறினான். நான் அவ்வளவு தூரம் வேண்டாம் அருகிலுள்ள அழகப்பாவில் சேர்ந்து படி என்றேன். அவன், "இல்லம்மா, ஐஐடி ரொம்ப பெரிய காலேஜ்ம்மா, படித்து முடிச்ச அடுத்த நாள் அமெரிக்கா போயிடலாம். டாலர்ல சம்பாதிக்கலாம்" என்று கூறினான். அவன் ஆசையை நிறைவேற்றி வைத்தேன்.


ராமுவுக்கும் எனக்குமான இடைவெளி அதிகமானது. நாட்கள் நகர்ந்தன. இரண்டு மாதத்துக்கு ஒரு முறை பார்க்க வருவான். ஊருக்கு வரும் போதெல்லாம் சென்னை மனிதர்களை பற்றி கதை கதையாக கூறுவான். குறிப்பாக அவன் நண்பர்கள் பெண் தோழிகளை பற்றி கூறுவான். துவைக்காத ஜீன்ஸ் பேண்ட்டை விரும்பி அணிவதாகவும் ஒருவர் அணியும் உள்ளாடையை தவிர மற்ற எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதாகவும் கூறினான்.


நான், "நீ எப்படி?" என்றேன். "ஊரோடு ஒத்து வாழ வேண்டும் என்று யாரோ சொல்லியிருக்கிறாரே அதனால் நானும் அவர்கள் கூட்டத்தில் ஐக்கியமாகிவிட்டேன்" என்றான்.


மூன்றாம் ஆண்டுக்கான ஹாஸ்டல் பீஸ் கட்ட பணம் கேட்டான். கையில் பணமில்லை திருவண்ணாமலையிலுள்ள அண்ணனிடம் கேட்டேன். அவரும் மறுக்காமல் பணம் கொடுத்தார், எப்போது திருப்பித்தருவாய் என்று கேட்காமலே. நான் ராமுவிடம் "மாமாதான் நமக்கு உதவி செய்திருக்கிறார் அதற்காக அவரை மாதம் ஒரு முறையாவது சென்று பார்" என்றேன். ராமுவோ, "நான் இங்கு வந்த இரண்டு வருடங்களில் இருபது தடவைக்கு மேலாக சென்றிருக்கிறேன்" என்றான். நான் அப்போது அவன் பாசத்தினால் தான் சென்று வருகிறான் என்று கருதினேன். அதற்கு பின்னாலியிருந்த சூழ்ச்சி எனக்கு தெரியவில்லை. நான்காம் ஆண்டும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போதும் திருவண்ணாமலை அண்ணண் தான் உதவினார்.


ராமுவுக்கு கேம்பஸ் இண்டர்வியூல் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. படிப்பு முடிந்த ஒரு வாரத்தில் வேலையில் சேர்ந்தான். முதல் மாதம் சம்பளம் வாங்கிவிட்டு என்னை பார்க்க சிங்கம்புணரி வந்தான். அவன் வருகையை எதிர்பார்த்து அதிகாலையிலே பஸ்நிறுத்ததிற்கு சென்று காத்திருந்தேன். எனக்கு சேலையும், அப்பாவுக்கு வேஷ்டி சட்டையும், உதவாக்கரை அண்ணணுக்கு ஜீன்ஸ் பேண்ட் டீசர்ட்டும் வாங்கி வந்திருப்பான் என்று ஆவலுடன் காத்திருந்தேன்.


கையை வீசிக் கொண்டு வந்திறங்கினான். அவன் முகத்தில் சோகம் தவழ்ந்தது. எந்தப் பேச்சுக்கும் பிடி கொடுக்காமல் பேசினான். இப்படிபேசுவதை கூட யாரிடமிருந்தோ கற்றுக் கொண்டிருக்கிறான். எனக்கும் என் கணவருக்கும் இது போல் பேசி பழக்கமில்லை.


இரவில் மாடியில் சேர் போட்டு அமாவாசை இருட்டை பார்த்தபடி அமர்ந்திருந்தான் ராமு. நான் தரையில் அவனருகில் அமர்ந்து கொண்டு பேசினேன்.


"என்னடா என்ன பிரச்னை?"

அவன் பதில் கூறவில்லை.


"யாரோடவாவது சண்டை போட்டியா?"


மீண்டும் அவனிடம் நிசப்தம் நிலவியது.


"உடம்பு ஏதும் சரியில்லையா?"


பதில் கூறாது ஊமையாய் அமர்ந்திருந்தான்.


நான் எழுந்து அவன் முன் நின்றேன்.


"ஏதும் தப்பு தண்டா பண்ணிட்டியா?"


அவன் முகத்தை பார்த்து பேசாமல் தலையை குனிந்தபடி பேசினான்.


"எனக்கு திருமணம் ஆயிடுச்சி" என்றான்.


மேற்கொண்டு அவன் கூறியதை என்னால் ஜீரணிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.


அதன் பிறகு அவன் என்னை பார்க்க ஊருக்கு வரவேயில்லை. அவன் திருமணம் செய்திருப்பது திருவண்ணாமலையிலுள்ள அண்ணணின் மூத்த மகளைத்தான். அவள் இவனை விட ஐந்து வயது மூத்தவள். ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேட்டதற்கு பயமாக இருந்தது என்றான்.


உனக்கு திருமணம் செய்து வைத்தது "யார்?" என்று கேட்டேன். "மாமா" என்றான். அப்போது தான் முடிவு செய்தேன் உலகிலுள்ள சொந்தங்கள் அனைத்தும் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே உதவி செய்கின்றன என்று.


இந்த நிகழ்வு நடந்த ஒரு வருட காலத்துக்கு பின்பு சொந்தங்களின் வாய்களின் வழியாக என் காதுக்கு செய்தி எட்டியது. ராமுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார்கள். அரைக்கால் டிரவுசருடன் உள்ளாடை அணியாமல் திறிந்தவன் இன்று குழந்தை பெற்றிருக்கிறான் என்று அவன் குழந்தை பருவத்தை இப்போது நடந்த நிகழ்வுடன் ஒத்துப் பார்த்தேன்.


*


அமுதா நன்றாக தூங்கிப் போயிருந்தாள். எழுந்து மணியை பார்த்தாள் பத்தென காட்டியது. தேதியை பார்த்தாள் மனதில் புது சந்தோசம் உருவானது குளித்து முடித்து தலைவாரிக் கொண்டு கோயிலுக்கு சென்றாள். கடவுளிடம் கோரிக்கையை இட்டுவிட்டு கடைத்தெருவுக்கு சென்று ரவை, சீனி, தேங்காய், முந்திரிப்பருப்பு, வாங்கிக் கொண்டாள். ஐவுளிக் கடைக்கு சென்று பொம்மைக்கு மாட்டியிருந்த பேண்ட், சட்டையை வாங்கி வீடு வந்து சேர்ந்தாள்.


பத்து ரவாலட்டு உருண்டைகளை குண்டு சட்டியில் போட்டு வாசலில் நின்றிருந்தாள். கையில் புதிதாக வாங்கிவந்திருந்த பேண்ட், சட்டையுடன் வாசலில் நின்று ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தாள். ராமுவின் வயதை ஒத்த ஆள் யாருமே ரோட்டில் நடமாடவில்லை. மாலை முடிந்து இரவு தொடங்கும் நேரமானது. தூரத்தில் யாரோ ராமுவின் வயதை ஒத்த ஆள் வருவது போல் தெரிந்தது. அந்த ஆள் நேராக அமுதாவின் வீட்டை நோக்கிவந்தான். அந்த ஆணுடன் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் கையில் குழந்தை இருந்தது. அவர்கள் இருவரும் அமுதாவின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றனர். அமுதாவின் கண்களிலிருந்து வழிந்த நீர் அவர்களுக்கு அர்ச்சனையாக மாறியது.


அமுதா, "ராமு" என்றாள்.


*
யூத்புல் விகடனில் வெளியாகியுள்ளது 

Saturday, February 6, 2010

சிறுகதை - நூறாவது கவிதை

நிறம்: மாநிறம், உயரம்: ஐந்தடி ஆறு அங்குலம். முகமெங்கும் தாடி, தாடியின் பாதிமுடி கறுப்பாகவும், பாதிமுடி வெள்ளையாகவும் இருந்தது. நீ தான எங்கப்பாவை கொன்ன, உன்னை விடமாட்டேன் நிச்சயமாக நான் உன்னை கொல்வேன் தொடரும்...... ரத்தம் உடல் முழுவதும் ரத்த வெள்ளமாக இருந்தது. வயிற்றில் குத்தப்பட்ட கத்தி எடுக்கப்படாமல் தரையில் கிடந்தான். கடல் அவனை உள்ளே இழுத்துக்கொண்டது. அவனது சுவடுகளை கூட விட்டுவைக்காமல் கடல்நீர் சுத்தமாக அழித்தது.



60/51, மேற்கு சைதாப்பேட்டை வீடு ஆனந்தமாக இருந்தது. வீடெங்கும் எப்போதும் சிரிப்பொலிதான். மணி மிகுந்த சந்தோஷமாக இருந்தார். பல நாட்களுக்கு முன்பு கழுவி வைத்து உபயோகப்படுத்தாமல் இருந்த இங்க் பேனாவினுள் மையை ஊற்றினார். மை ஊற்றும்போது கட்டை விரலில்பட்ட ஊதா நிற மையை தலைமயிரில் தேய்த்தார். அவருடைய வெள்ளை முடியில் சில முடிகள் ஊதாநிறத்திற்கு மாறின. தூசி படிந்திருந்த ரூல்டு நோட்டை எடுத்தார். தூசியை துடைத்துக் கொண்டு தனது அறையை விட்டு வெளியேறி வீட்டின் நடுகாலுக்கு வந்தார். மருமகள் கமலா பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தாள். அவளைச்சுற்றி மணியின் மகள்கள் லதா, குமாரி, சிந்து மற்றும் மணியின் மனைவி ராசம்மா தரையில் உட்கார்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனர். மணி அவர்களை கடந்து சென்றபோது 'மாமா, எங்க போறீங்க?' என்றாள் கமலா. மணி 'பூங்கா வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்'. நீண்ட வருடங்களுக்கு பிறகு கமலா சில மாதங்களாகத்தான் சிரித்து பேசுகிறாள்.


மாலைநேரம் என்பதால் பூங்காவில் ஜனங்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை தினம் என்பதால் பூங்காவில் அன்று கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. பூங்காவிலிருந்த எல்லா சிமிண்ட் இருக்கைகளும் முழுமையாக பூர்த்தியாகியிருந்தன. மணி எதிர்பார்த்திருந்த சூழலில் பூங்கா இல்லை. பாதங்கள் பூங்காவை விட்டு வெளியேறி கலைஞர் வளைவிற்கு எதிரேயிருந்த சைதாப்பேட்டை பஸ் ஸ்டாண்டை நோக்கி சென்றது. கோவளம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டார். ஜன்னலோர இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்து கொண்டார். ரூல்டு நோட்டின் பக்கங்களை புரட்டுகிறார். காலம் மணியை இழுத்துச் செல்கிறது பின்னோக்கி அவருடைய குழந்தை பருவத்திற்கே.


மணி தன்னுடைய பத்துவயதில் வெங்கடேச நாயக்கரிடம் வேலைக்கு சேர்ந்தான். வெங்கடேச நாயக்கர் தனியார் பஸ் கம்பெனியின் முதலாளி. மணி வெங்கடேச நாயக்கரை முதலாளி என்றே அழைப்பான். டீ, காபி வாங்கித்தரும் எடுபுடி வேலையில் சேர்ந்த மணி கொஞ்சம் கொஞ்சமாக தொழிலை கற்றுக் கொண்டு பஸ் டிரைவராக உயர்ந்தான். ஒரு நாள் மணி ராசம்மாவை திருமணம் செய்து கொண்டான். ராசம்மா மணியின் கூடப்பிறந்த அக்கா மகள். சைதாப்பேட்டையிலுள்ள முருகன் கோயிலில் இவர்களின் திருமணம் நடந்தது. வெங்கடேச நாயக்கர் கல்யாணத்துக்கு வந்தவர்களில் அதிகமான மொய் பணம் எழுதியிருந்தார். எழுதிய தொகை நூறு ரூபாய். மணி முதலிரவு அறையில் விட்டத்தை பார்த்தபடி படுத்துக்கிடந்தான். ராசம்மா ஆறு மாத காலமாக ஒரு வடநாட்டுக்காரனை காதலித்து வந்தாள். ராசம்மாவுக்கோ வட நாட்டுக்காரனின் பெயர்மட்டும் தெரியும். ஊர் என்ன? தொழில் என்ன? அப்பா யார்? அம்மா யார்? எதுவுமே தெரியாது. வடநாட்டுக்காரன் ராசம்மாளிடம் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றான். ராசம்மாளின் அம்மா 'ஏண்டி முண்ட ஏதோ ஒரு நாய் கூப்பிட்டதுன்னு பின்னாடிப் போனியே அவன் யாருன்னு முழுசா தெரியுமாடீ?' என்று ராசம்மாளின் தலைமயிரை பிடித்து ஆட்டியபடி கேட்டாள். 'அந்த வடநாட்டு நாய்க்கு ஏற்கனவே ஆயிருக்காம் நாலு கல்யாணம், தெரியுமாடீ உனக்கு?' என்று கேட்டாள் ராசம்மாளின் அம்மா. ராசம்மா 'தெரியாது' என்றாள். 'என் தம்பி மட்டும் உன்னை பஸ் ஸ்டாண்டில் பார்த்து கூட்டிட்டு வரலை. இப்ப நீ என் முன்ன நிக்கமாட்ட. ஒரு வருஷத்திலோ, இல்ல ஆறு மாசத்திலோ வயித்துல குழந்தையோட என் முன்னாடி வந்து நிப்ப'. ராசம்மாவின் அம்மா மணியின் காலில் விழுந்து தன் மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு பிச்சை கேட்டாள். மணியும் செய்வதறியாது சரியென்று கூறினான்.


ராசம்மா வருடம் தோறும் தவறாது பிள்ளைஒன்றை பெற்றெடுத்தாள். முதலில் பிறந்தவள் சிந்து, இரண்டாவதாக குமாரி, மூன்றாவதாக லதா, கடைசியாக முத்து. மணி சம்பாதிக்கும் பணத்தில் முதல் செலவு சாராயம். சாராயத்திற்கு மிஞ்சிய பணம் ராசம்மாவின் கைக்கு போய்சேரும். முந்தய தின இரவில் நடந்த நிகழ்வுகளை பேப்பரில் எழுதி ராசம்மாவிடம் படிக்கக் கொடுத்தான் மணி. ராசம்மா வாசித்து பார்த்தாள் 'குடும்பம் ஒரு நாடக மேடை, நானோ நாயகன், நீயோ நாயகி, நம்பிள்ளைகளோ ரசிகர்கள், உன் திட்டுக்களோ பின்னனியிசை, பறக்கும் தட்டுகளோ போர்க்களம், உன் சிரிப்போ நகைச்சுவை' என்று ஒரு பக்கதாள் முழுவதும் எழுதியிருந்தது. 'மனசில கண்ணதாசனு நினைப்போ! முதல்ல உன் சம்பளத்தை என்கிட்ட முழுசா கொடு அப்புறமா கவிதை கழுதை எதவேணா எழுதிக்கோ' என்று முகத்தில் காரி துப்பாத குறையாக வைதாள் ராசம்மா.


மணிக்கு வாரத்தின் ஆறு நாட்கள் வேலை நாட்கள், வாரத்தின் ஏதாவது ஒரு நாள் விடுமுறை நாளாக இருக்கும். விடுமுறை நாளானது ஞாயிறு அல்லாத தினங்களில் அமைந்தால் மாலைநேரம் சைதாப்பேட்டை நூலகம் செல்வான். மணி நூலகத்தில் அதிகம் படிப்பது வார இதழ்களில் வரும் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் க்ரைம் கட்டுரைகள். கவிதைகளில் விரும்பிப்படித்தவை வைரமுத்துவின் கவிதைகள். ராசம்மா வயதுக்கு வந்த போது அவளுக்காக பட்டுபாவாடை, தாவணி வாங்கியிருந்தான். இது நாள் வரை ராசம்மாவிடம் கொடுக்கவில்லை, காட்டியதுமில்லை, பேசியதுமில்லை. இன்றும் அந்த பட்டு புடைவையும், தாவணியும் மணியின் டிரங்பெட்டியின் அடித்தளத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது. கல்யாணத்திற்கு முன்பு மணி ராசம்மாவின் மீது ஒரு தலைக் காதல் கொண்டிருந்தான். மணி கவிதை எழுதுவதற்கு ராசம்மாவும் ஒரு விதத்தில் காரணம். அவன் எழுதும் கவிதைகளில் ராசம்மா கடுகளவேனும் இருப்பாள். இன்லாண்ட் லெட்டரில் கவிதைகள் எழுதி வார இதழ்களுக்கு அனுப்பி வைத்தான். சாராயத்துக்கு அடுத்தபடியாக மணியின் செலவுக் கணக்கில் இதுவும் சேர்ந்தது. எத்தனை கவிதைகள் அனுப்பியாகியது எதற்கும் பதில் கடிதம் வரவில்லை. மணி ஏன் என்று யோசித்து பார்த்ததில் தன் கவிதைகளுக்கு எங்கோ ஒரு இடத்தில் ஊனம் இருப்பதாக கருதினான். தொடர்ந்து மனம் தளறாது தன் வாசிப்பை இலக்கிய இதழ்களின் பக்கம் திசை திருப்பினான்.


மணியின் மூன்று மகள்களும் சமைந்தார்கள். ஒவ்வொரு வருட இடைவெளியில் ஒவ்வொரு மகள்களின் திருமணம் முடிந்தது. ஒரு வருடத்தில் மூன்று பெண்களும் மாசமாகி குழந்தை பெற்றெடுக்க ராசம்மாவின் வீட்டிற்கு வந்தனர். ஒரு வருடத்தில் ஒரு பெண்ணின் பிரசவ காலங்களை நல்ல படியாக கவனித்துக் கொள்ளவே கஷ்டப்படுவாள் ஒரு தாய். இங்கோ மூன்றுபேர். திண்டாடிப்போனால் ராசம்மா. இதுபோல் நெருக்கடியான காலங்களிலும், பிரச்சனைகளிலும் இன்பமான வலியை உணர்ந்தாள் ராசம்மா. பேருந்து கோவளத்தை வந்தடைந்தது. பேருந்திலிருந்து இறங்கிய மணி தர்கா வாசலை கடந்து கடற்கரை நோக்கி நடந்தார்.


முத்துவுக்கும் கமலாவுக்கும் திருமணம் முடிந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று வருடங்கள் கடந்தன. கமலாவிற்கு மாதவிலக்கு நிற்கவில்லை. தினப்பொழுதின் பகலை கடப்பது கமலாவிற்கு நீந்த தெரியாத ஒருவன் நடுக்கடலில் விடப்பட்டது போல் இருந்தது. ராசம்மாவின் ஒவ்வொரு வார்தைகளும் கமலாவின் இதயத்தை குத்தி கிழித்தன. அவளுக்கென்று துணையாக நினைத்தது இரவில் தனிமையும், முத்துவையும். வருடமும் நகர்ந்தது. ஐந்து வருடங்களாகியும் குழந்தை பெற்றெடுக்கவில்லை கமலா.


மணியின் கவிதைகள் யாவும் அவனது சூழலை பின்னியேயிருந்தது. அவனுடைய ஒரு கவிதைகள் கூட அவன் வீட்டு படிக்கட்டை தாண்டியதில்லை. மணியின் கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதைகள். மரபுக்கவிதைகள் எழுதுமளவிற்கு அவன் படித்ததில்லை. ஒரு கவிஞன் எப்போது சாகிறான் என்றால் அவனது கவிதைகள் வாசிக்கப்படாத போது மணியும் ஒரு விதத்தில் செத்தவன்தான்.


வீட்டிலுள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். 'நீ தான எங்கப்பாவை கொன்ன உன்னை விடமாட்டேன் நிச்சயமா நான் உன்னை கொல்வேன்' என்று கத்தி கூறுகிறான் முப்பது வயது ஆண். தொடரும்.... என்று அந்த வாரத்திற்கான எப்பிஸோடு முடிந்தது.


கமலாவிற்கு வாந்திவந்தது. அடுத்த பத்தாவது நாளில் ஊர்ஜிதமானது. கமலா மாசமாக இருப்பது. கமலாவிற்கு அப்பா, அம்மா கிடையாது. அவள் ஒரு அனாதை. அவள் படித்தது, வளர்ந்தது எல்லாம் அனாதை ஆசிரமத்தில். மணியின் கடைசி மகளான லதாவும், கமலாவும் பள்ளி தோழிகள். வாரவிடுமுறை நாட்களில் கமலா மணியின் வீட்டிற்கு வருவாள். கல்லூரிக்கு சென்ற பிறகும் இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தனர். முத்து கமலாவை காதலித்தான். முத்து மணியிடம் கமலாவை மணந்து கொள்ள சம்மதம் கேட்டான். மணியும் ராசம்மாவும் கலக்கமின்றி சரியென்று கூறினர்.


கமலா பிளாஸ்டிக் சேரிலும், சிந்து, குமாரி, லதா மற்றும் ராசம்மா தரையில் அமர்ந்து சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர். கமலா பட்டுச்சேலை உடுத்திருந்தாள். கைகள் நிறைய வளையல்கள் அணிந்திருந்தாள். கன்னங்களில் சந்தனம் பூசப்பட்டிருந்தது. நெற்றியெங்கும் பூசப்பட்டிருந்த திருநீறு, சந்தனம், குங்குமம் சரிவர இல்லாமல் கோணலாகயிருந்தது. 'ரத்தம்! ஊடல் முழுவதும் ரத்த வெள்ளமாகயிருந்தது. வயிற்றில் குத்தப்பட்ட கத்தி எடுக்கப்படாமல் தரையில் கிடந்தான்' தொடரும்........ என்று முடிந்தது அந்த வார எப்பிஸோடு, மணி பத்தென காட்டியது கடிகாரம்.


பத்து மணியாகியும் வீடு திரும்பாமல் இருந்த மணியை தேடி சென்றான் முத்து. முதலில் பூங்காவில் சென்று பார்த்தான் பூங்கா பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது. எங்கு சென்றிருப்பார் என்ற யோசனையில் பூங்காவின் வாசலில் நின்றிருந்தான் முத்து.


மணி கோவளத்தின் கடற்கரையோர மணல் மீது அமர்ந்திருந்தார். பௌர்ணமி வெளிச்சத்தில் ரூல்டு நோட்டின் பக்கங்களை திருப்பினார். பக்கத்திற்கொரு கவிதைகள் எழுதியிருந்தார். பக்கங்களுக்கு எண்கள் இட்டார் ஒன்று, இரண்டு என்று ஏறுவரிசையில் ஊதா நிற மைபேனாவால் பக்கங்களை திருப்பினார் காற்றும் அவருடன் சேர்ந்து படித்தது ஒவ்வொரு பக்கங்களாக. திருப்பப்பட்ட பக்கங்கள் மொத்தம் 99. நூறாவது பக்கம் எழுதப்படாமலிருந்தது. எழுதத்தொடங்கினார்.


மலடல்ல
என் மருமகள்
பூக்கள் பூக்கும்
நந்தவனமவள்


நிலவுபோல்
பிள்ளை பெறப்போகிறாள்
இன்னும் மூன்று மாதங்களில்


நட்சத்திரங்களே
தொட்டில் கட்டுங்கள்
வானவில்லால் வானத்தில்
என்பேரனை
தாலாட்ட


செத்துப்போன
இந்த கவிஞனின் சிந்தனைகளை
என் பேரனுக்கு கற்றுக் கொடுங்கள்
அவனாவது
இந்நாடு போற்றும்
கவிஞனாக வாழட்டும்
செய்வீர்களா சொல்லுங்கள்?

இருதயத்தில் வலித்தது. முகத்தில் வேர்வை முத்துக்கள் போட்டன. எழுந்திறிக்க முடியவில்லை. நாக்குவரண்டது. கத்துவதற்கு திராணி இல்லை. நோட்டு ஒருபுறம், பேனா ஒருபுறம் கிடந்தது. திருட்டுத்தனமாக அவனது கவிதைகளை கடல் காற்று படித்தது. கடல் லாவகமாக மணியை உள்ளே இழுத்தது. மணி எதுவும் பேசவில்லை. கடல்நீர் மணியின் கவிதைகளை விரும்பிபடித்தன. படிக்க படிக்க எழுத்துருக்கள் அழிந்துவந்தன. கடல் அவனை உள்ளே முழுவதுமாக உள்ளே இழுத்துக் கொண்டது. அவனது சுவடுகளை கூட விட்டு வைக்காமல் கடல் நீர் சுத்தமாக அழித்தது. அவனது மைபேனாவை மட்டும் உள்ளே இழுத்துச் செல்லாமல் கரையிலே விட்டுச்சென்றது கடல். இரத்த ருசி பார்த்த காட்டேரி போல் கத்தியது கடல்.


சைதாப்பேட்டை இரயில் நிலையத்தின் டிக்கெட் வாங்கும் வரிசையில் நிற்கிறாள் கமலா. அவளது கையில் அவள் மகன.; சுவரொட்டியை பார்க்கிறான் அந்த சிறுவன். காணவில்லை உயரம் ஐந்தடி ஆறு அங்குலம். படத்தில் இருப்பவரின் முகத்தில் முகமெங்கும் தாடி, தாடியின் பாதிமுடி கறுப்பாகவும், பாதிமுடி வெள்ளையாகவும் இருந்தது. காணாமல் போன போது கறுப்பு நிற பேண்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். இவரைப்பற்றிய தகவல் தெரிந்தால் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு எழுதியிருந்தது. சிறுவன் கமலாவிடம் இவர் யாரென்று கேட்டான். 'இவர்தான் உன் தாத்தா மணி' என்று கூறிவிட்டு இரயிலை பிடிக்க ஒட்டமிட்டாள் கமலா.


---- முற்றும் -----

தடாகம் இணைய இதழில் வெளியானது

சிறுகதை - மறுபிறவி

டிசம்பர் மாதம் 28ம் தேதி காலைப்பொழுதில்...


இரு சக்கர வாகனத்தில் சாய் அக்சித் அவன் மாமாவுடன் ஹைதராபாத் திலுள்ள கே.பி.ஹைச்.பி காலணியில் சென்று கொண்டிருந்தான். தெலுங்கானா பந்த் நடைபெற்று வருவதால் ஊரெங்கும் மெளனம் நிலவியது. ஆட்கள் நடமாட்டம் சாலையில் அவ்வளவாகயில்லை. சேர் ஆட்டோ மட்டும் ஆட்களை ஏற்றிய வண்ணம் சாலையில் சென்று கொண்டிருந்தது. கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு 200 மீட்டர் தொலைவிலும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தன. சாலைகள் சந்திக்கும் இடத்தில் முழுமையாக எரிந்து போயிருந்த டயர் அதன் சாம்பலை மட்டும் விட்டுப்போயிருந்தது. எதிர் பாராத விதமாக சாய் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த லாரி ஒன்றின் மீது மோதியது. சாய், அவன் மாமா, இருசக்கர வாகனம் மூவரும் தனித்தனியாக தரையில் சிதறிக்கிடந்தனர். சாலையின் சந்திப்பில் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் விபத்தை பார்த்து சம்பவ இடத்தை நோக்கி ஓடி வந்தனர். சாயின் மாமாவை தூக்கி ஓரமாக உட்கார வைத்தனர். அவரின் ஒரு பக்கம் முழுவதும் சிராய்ப்பு, சிராய்ப்பிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. சாய் எழுந்திரிக்க முடியாமல் சாலையில் படுத்தபடியே கிடந்தான். சாயின் இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. “யோவ் பையனுக்கு நாடித்துடிப்பு இருக்கு யாராவது 108க்கு போன் செய்ங்க” என்றார் ஒரு போலீஸ்காரர்.



ooo



சாயின் அப்பா ரவீந்திரபாபு கோயில் சன்னதி தெருவில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கிறார். வீட்டின் ஒரு பகுதியானது கடையாக மாறியிருந்தது. வீடானது ஒரே ஒரு நீண்ட அறை கொண்டது. சமையல்கட்டிற்கு மட்டும் தடுப்புச்சுவர் இருக்கும். சமையல்கட்டின் எதிரே குளியலறை சேர்ந்தார் போல் கழிப்பறை அதனுள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் மஞ்சள் நிற குண்டு பல்பு. இரவில் எல்லா விளக்குகளையும் அணைத்த பின்பு மேற்சுவருக்கும் குளியலறை கதவிற்கும் இடையே யுள்ள இடைவெளி வழியே வெளிவரும் மஞ்சள் நிற ஒளி சமையல் திண்டின் மேல் விழும். சாய் ஒரு நாள் பள்ளிக்கு சென்று திரும்பி வந்த போது ரவீந்திர பாபு அவன் கையில் ரோலக்ஸ் வாட்ச் ஒன்றை மாட்டிவிட்டார். ஆனந்தத்தில் துள்ளிய சாய் ரவீந்திர பாபுவின் கன்னத்தில் பச்சென்று முத்தமொன்று கொடுத்தான். ரவீந்திர பாபு குள்ளமானவர், உருண்டை முகம் கொண்டவர், அவரின் கரிய நிறத்திற்கு நெற்றியில் பூசியிருக்கும் திருநீர் பளிச்சென்று தெரியும். சாய் படித்து வந்த பாலிடெக்னிக் கல்லூரி அவன் வீட்டிலிருந்து ஜந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. “அப்பா நான் இன்னிக்கு காலேஜிக்கு ரமேஸோட பைக்ல போறேன். என்னோட சைக்கிள் சாவி கண்ணாடி தட்ல இருக்கு” என்றான் சாய். கோயில் சன்னதி தெருவில் சாய் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்செல்ல அவன் பின்னே ரமேஸ் அமர்ந்திருப்பதை ரவீந்திர பாபு தன் கடையிலிருந்து பார்த்தார்.



ooo



டிசம்பர் மாதம் 29ம் தேதி இரவுப்பொழுதில்...



சாய் வென்டிலேட்டரினுள் வைக்கப்பட்டிருந்தான். லைப் சப்போர்ட் இயந்திரங்களின் உதவியால் அவன் உயிர் பிழைத்துக்கொண்டிருந்தது. உடலில் சிராய்ப்பில்லை, தலையின் வலது பக்கம் பலமாக அடிபட்டு இரத்தம் வந்துள்ளதாக டாக்டர் ரவீந்திரபாபுவிடம் கூறினார். அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரினுள் வைக்கப்பட்டிருந்த சாயை கண்ணாடி கதவின் வழியே பார்த்தார் ரவீந்திர பாபு. விபத்து நடந்த அன்று அதாவது 28ம் தேதி சாயை சேர்த்திருந்த ஆஸ்பத்திரியில் போதிய மருத்துவ வசதி இல்லாததால் 29ம்தேதி காலை வேறொரு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டிருந்தான். விபத்து நடந்ததிலிருந்து சாய் கோமாவிலிருந்து வருவதாகவும், எப்போதாவது உடலில் சிறுசிறு அசைவுகள் தென்படுவதாகவும், இருதயம் சரியாக செயல்படுவதாகவும், மூளை தண்டுவடத்தில் பலமாக அடிபட்டுள்ளதால் மூளை தன் செயல் திறனை முழுமையாக இழந்துவிட்டதாகவும் டாக்டர் சாயின் உடல் நிலை பற்றி ரவீந்திர பாபுவிடம் கூறினார்.



ooo



ரவீந்திர பாபு அடகுகடையில் தான் அணிந்திருந்த தங்கச்சங்கலி, கைவிரல் மோதிரம், கையில் கட்டியிருந்த தங்க கடிகாரம் அனைத்தையும் அடகு வைத்து சாய்க்கு பைக் வாங்கிவந்தார். ரவீந்திர பாபு நகையை அடகுகடையில் அடகு வைப்பது பற்றி மனைவியிடமோ, பைக் வாங்கப்போவது பற்றி சாயிடமோ ஒரு வார்த்தை பேசவும் இல்லை கேட்கவும் இல்லை. ரவீந்திர பாபுவின் மனைவி இது தெரிந்து கோபமாக திட்டினாள். சாய் தனக்கு பைக் கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தத்தின் உச்சியில் இருந்தான்.



ooo



டிசம்பர் மாதம் 29ம் தேதி இரவுப்பொழுதில்...



“உங்க பையன் ப்ரைன் டெட்ல இருக்கார். ப்ரைன் டெட்னா மூளை செத்துப்போச்சின்னு அர்த்தம்” என்றார் டாக்டர்.



“அப்ப என் பையன் செத்துட்டானா?” என்று கேட்டார் ரவீந்திரபாபு.



“முழுமையா இன்னும் சாகலை, இருதயத்துடிப்பு இன்னும் இருக்கு”



“அப்ப என் பையனை எப்படியாவது காப்பத்துங்க டாக்டர்”



“மூளை வேலை செய்யாதப்ப மற்ற பாகங்கள் இயங்கி உபயோகமில்லை. வாழ்நாள் முழுக்க கோமாவில் தான் இருப்பான். உடலிலிருந்து எந்தவொரு அசையும் இருக்காது. இதே போல் வாழ் நாள் முழுக்க வென்டிலேட்டர்ல தான் வச்சிருக்கணும்”



“அய்யோ! டாக்டர் என் பையனை காப்பாத்துங்க, நீங்க தான் இப்ப எங்களுக்கு கடவுள்”



“சரி நான் ஒரு யோசனை சொல்றேன். நீங்க மட்டும் என்னோட ரூம்க்கு வாங்க. உங்க மனைவி இங்கேயே இருக்கட்டும்”



ooo



பள்ளிப் பருவத்தில் சாய் பள்ளித்தோழி ஒருத்தியை நேசித்து வந்தான். அவளின் பெயர் கோமதி. கோமதி வெள்ளை நிறத்துடன் சற்று குண்டாக இருப்பாள். அவளைப்போலவே அவளின் எழுத்துக்களும் குண்டாகயிருக்கும். சாய் கோமதியை நேசிப்பதற்கு அவளின் எழுத்துக்களும் ஒரு காரணம். பள்ளிப்பருவம் முடிந்து பாலிடெக்னிக் சென்ற பிறகும் சாய் கோமதியின் நினைவாகவேயிருந்தான். விடுமுறை நாள் ஒன்றில் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த கோமதியை பார்த்து பேசினான் சாய். அவளும் வேறொரு பாலிடெக்னிக்கில் ECE சேர்ந்துள்ளதாக கூறினாள். மெளனமாக நின்று கொண்டிருந்தவன் முன்பு ஒரு நாள் அவளை பற்றி எழுதிய காதல் கடிதத்தை அவளிடம் கொடுத்தான். பதற்றத்தில் கைகள் தவறி கீழே விழுந்த கடிதத்தை கோமதி எடுக்க முயன்ற போது முகத்தில் முத்துக்கள் போட்டிருந்த வேர்வை துளிகளோடு சாய் அந்த இடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.



ooo



கோமதியும் தன்னை காதலிக்கிறாள் என்று தன் கல்லூரி தோழிகள் மூலமாக தெரிந்து கொண்டான் சாய். கோமதியின் வீடு கோயில் சன்னதி தெருவிற்கு அடுத்த தெருவிலிருந்தது. நண்பனை பார்க்கச் செல்வது போல் கோமதியின் வீட்டை கடந்து செல்லும் ஒவ்வொரு முறைபும் அவள் இருக்கிறாளா என்று தெரிந்து கொள்ள அவளின் வீட்டு முற்றத்தில் செருப்பை தேடித்திரிந்தன அவனின் கண்கள். இருவரும் வாரம் ஒரு முறை குசைன் சாகர் லேக்கில் சந்திப்பதாக முடிவு செய்தனர். ஜோடி ஜோடியாக லேக்கினை சுற்றி வரும் கூட்டத்தினருடன் இவர்களும் கலந்து கொண்டனர். கல்லூரியின் இறுதி நாட்கள் நெருங்கிக்கொண்டிருந்தது. சாய் மேற்கொண்டு படிக்க வராங்கள் சென்றான். கோமதி மேற்கொண்டு படிக்க முடியாத பொருளாதார சூழ்நிலையால் கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். தெலுங்கானா பிரச்சனை காரணமாக சாய் படித்து வந்த கல்லூரிக்கு விடுமுறை விட்டிருந்தனர். கோமதி கொடுத்த நெருக்கடி காரணமாக சாய் தன் காதலை நேரடியாக ரவீந்திரபாபுவிடம் சொல்வதற்கு பதிலாக கடிதம் மூலம் தெரிவிக்க எண்ணி கடிதம் எழுதினான்.



டிசம்பர் மாதம் 28ம் தேதி காலைப்பொழுதில்...



“மாமா போஸ்ட் ஆபிஸ் போகணும் வர்றியா? ” என்று தன் தாய் மாமாவிடம் கேட்டான் சாய்.



“வா மாப்பிள்ளை போகலாம்”



தபாலை போஸ்ட்பாக்ஸில் போட்டுவிட்டு வந்தவன் மாமாவை இருசக்கர வாகனத்தை ஓட்டச்சொல்லிவிட்டு அவரின் பின்னால் அமர்ந்து கொண்டான்.



“என்ன மாப்பிள்ளை தபால் யாருக்கு கேள் பிரண்டுக்கா?”



“இல்ல மாமா பெஸ்ட் பிரண்டுக்கு”



ooo



ரவீந்திரபாபு டாக்டரின் அறையிலிருந்து வெளியே வந்தார்.



“லதா, டாக்டர் ஒரு யோசனை சொன்னார் எனக்கு அது சரின்னு படுது, உன்னோட விருப்பத்தை சொல்லு” என்று தன் மனைவியிடம் கேட்டார் ரவீந்திரபாபு.



“டாக்டர் என்ன சொன்னார்?”



“பையனோட உறுப்பை தானம் பண்ண சொன்னார்”



“எதுக்கு தானம் செய்யணும்?”



“லதா, பையனோட மூளை செயலிழந்து போச்சி. ஆனா மூளைய தவிர மத்த உறுப்புகள் நல்லா செயல்படுது. நம்ம இப்ப உறுப்பு தானம் செய்ய ஒத்துக்கிட்டா அவனோட ஏழு உறுப்புகள் மத்தவங்களுக்கு உபயோகமாயிருக்கும்”



“என்ன சொல்றீங்க? உயிரோட இருக்கிறவன கொன்னு அவனோட உறுப்பை எடுக்க போறீங்களா? நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். தம்பி இவர் என்ன சொல்றார்ன்னு கேள்”



“இவனுங்க இப்படி செய்வாங்கன்னு தெரிஞ்சிருந்தா நாம வேற ஆஸ்பத்திரிக்கு போயிருக்கலாம். மச்சான் இந்த ஆஸ்பத்திரி வேணாம்” என்று கூறினார் சாயின் தாய் மாமா.



“இது எங்க குடும்ப விசயம், நீங்க இதில தலையிடாதீங்க” என்றார் ரவீந்திரபாபு.



“அப்ப நீங்க உயிரோட இருப்பவனை கொல்லப்போறீங்க?” என்று கேட்டாள் லதா.



“நம்ம இதுக்கு சரின்னு சொல்லலைன்னா. அவங்க லைப் சப்போர்ட் இயந்திரங்களிலிருந்து நம்ம பையனை பிரிச்சிடுவாங்க. அதன் பிறகு ஒரு நாளோ இரண்டு நாளோ கூடப்போனா ஒரு வாரத்துல இறந்திடுவான். அப்படி சாகப்போற நம்ம பையனோட உறுப்பு மத்தவங்களுக்கு பயன்படலாமே”



“நான் இதுக்கு சம்மதிக்க மாட்டேன். அய்யோ! என் பையனை விட்டுடுங்க. கொலைகார பாவி என் பையனை கொல்லாத” என்று லதா ரவீந்திரபாபுவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டு ஓங்கி ஓங்கி குத்தினாள்.



ooo



டிசம்பர் மாதம் 31ம்தேதி காலைப்பொழுதில்...



சாயின் உடலில் இருந்து லிவர், இரண்டு கிட்னி, இரண்டு கண்கள், மற்றும் இரண்டு இருதய வால்வுகள் எடுக்கப்பட்டிருந்தன. டாக்டர் ரவீந்திரபாபுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சாயால் ஏழு பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறினார். தூரத்தில் தபால்பையுடன் தபால்காரன் ரவீந்திரபாபுவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.



“உடலுறுப்புகளை தானம் செய்வோம், இப்பூவுலகில் மறுபிறவி எடுப்போம்”

--------------------------------------------------------------------------------

ஹைய்தராபாத்தில் நடந்த உண்மை சம்பவத்தை பின்புலமாக கொண்டு எழுதப்பட்ட கதை.

பார்வைகள்