Sunday, December 20, 2009

வல்லினம் இலக்கிய இதழில் 7 சிறுகதைகள்

வல்லினம் டிசம்பர் 2009 மாத இதழில் 7 சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

1. அவள் நான் அவர்கள்
- மா.சண்முக சிவா

மருத்துவமனைக்கு வந்திருக்கும் தமிழ் பேசும் பெண்ணை சேர்க்க மறுப்பதாக நர்ஸ் துர்க்காபாய் டாக்டர் சிவாவிடம் கூறுகிறாள். துர்க்காபாய் தமிழ் பேசும் சீனப்பெண். தமிழ் பேசும் நபர்களை பார்த்தால் நட்புடன் பழகுபவள். டாக்டர் சிவா துர்க்காபாய் சொன்னது யார் என்று பார்க்க செல்கிறார். டாக்டர் செரினா தன் வார்டில் எல்லாம் பூர்த்தியாகி விட்டதென்றும் வேண்டுமென்றால் இவளை உங்கள் வார்டில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறாள். டாக்டர் சிவா தினேஸ்வரி என்ற பனிரெண்டு வயது பெண்ணை தன்னுடைய வார்டில் சேர்த்துக்கொள்கிறார்.

ஸ்கேன் செய்து பார்த்த பின் தினேஸ்வரியின் வயிற்றில் 14 வார குழந்தை இருப்பது தெரிகிறது. டாக்டர் செரினா இந்த செய்தியை கேட்டு கொதிப்படைகிறாள். டாக்டர் சிவா தினேஸ்வரியிடம் இதைப்பற்றி விசாரிக்கிறார். தன் கற்பத்திற்கு யார் காரணமென்று சொல்ல மறுக்கிறாள் தினேஸ்வரி. தினேஸ்வரியை தேடிக்கொண்டு அவளின் அம்மா மருத்துவமனைக்கு வருகிறாள். குடும்ப சூழ்நிலையின் காரணமாகத்தான் தினேஸ்வரியை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பியதாக சொல்கிறாள். தினேஸ்வரியின் அப்பா ஆயுள் தண்டனை பெற்று ஜெயிலில் இருப்பதாகவும் பாதுகாப்பிற்காக இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் கையில் வைத்திருக்கும் குழந்தை அவருக்கு பிறந்ததென்றும் சொல்கிறாள். இது பற்றிய விவரம் இரண்டாவது கணவருக்கு தெரிந்தால் தன்னையும் தினேஸ்வரியையும் கொன்றுவிடுவார் என்றும் அதனால் தினேஸ்வரியை ஆஸ்பத்திரியிலே வைத்து பார்த்துக்கொள்ள சொல்கிறாள். சென்றவள் மீண்டும் தினேஸ்வரியை பார்க்க வரவில்லை. தினேஸ்வரியும் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தினேஸ்வரியை பற்றி விவரம் பத்திரிக்கைகளுக்கு தெரியவருகிறது. மந்திரிகள் வருகின்றனர். மகளிர் அணித்தலைவி வருகிறாள் புகைப்படக்காரர்களுடன் வந்து போட்டோ எடுத்துச் செல்கிறாள். ஏதோ ஒரு கூட்டம் வந்து தினேஸ்வரிக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு இந்துப்பெயர் வைக்க வேண்டும் என்கிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் டாக்டர் செரினா "இப்படியெல்லாம் செய்தால் அவளின் மனநிலை பாதிக்கப்பாடாதா?" என்று கவலையடைகிறாள்.

சில நாள்களில் தினேஸ்வரிக்கு ஆஸ்பத்திரி நன்கு பழக்கப்பட்ட இடமாகிறது. ஆஸ்பத்திரியின் எல்லா வேலைகளையும் செய்கிறாள். வயிறு வெளியே தெரிய ஆரம்பிக்கிறது. அவளைப் பாக்கும் ஒவ்வொருவரும் ஒருவிதமாக பார்க்கின்றனர். டாக்டர் சிவா வேலைக்காரணமாக வெளியூர் செல்வதால் துர்க்காபாயிடம் கொஞ்சம் பணம் கொடுத்து தினேஸ்வரியை பார்த்துக்கொள்ள சொல்கிறார். குழந்தை பிறந்த பிறகு தினேஸ்வரியை ஆஸ்பத்தியிலிருந்து ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச் செல்கின்றனர். துர்க்காபாய் டாக்டர் சிவாவிற்கு போன் செய்து தினேஸ்வரியும் குழந்தையும் காணாமற்போன செய்தியை சொல்கிறாள். பதறிப்போன டாக்டர் சிவா ஆதரவற்றோர் இல்லத்திற்கு இதை பற்றி விசாரிக்க துர்க்காபாயுடன் செல்கிறார். டாக்டர் சிவா தனக்கு தெரிந்த போலீசார் மேலதிகாரிகளை கொண்டு தினேஸ்வரியை தேடிக்கண்டுபிடிக்க போவதாக ஆதரவற்றோர் இல்லத்தின் மேலதிகாரியிடம் கூறுகிறார். தினேஸ்வரியை விசாரித்துவிட்டு திரும்பும் போது துர்க்காபாய் தினேஸ்வரியை தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் போலீசிற்கு போக வேண்டாமென்றும் டாக்டர் சிவாவிடம் கேட்டுக்கொள்கிறாள். தன்மீது சந்தேகம் வராமலிருக்கத்தான் டாக்டரை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அழைத்துச்சொன்றதாகவும் கூறுகிறாள். ஒண்டிக்கட்டையான தனக்கு தினேஸ்வரி இனி பிள்ளையென்று கூறுகிறாள். கதை முடிகிறது.

கதையின் நடை இயல்பாக அமைந்திருப்பது கதையின் சிறப்பு. மிதமான வேகத்தில் செல்லும் கதையின் முடிவில் சின்னதொரு திரும்பம்.

இதைத்தவிர,

2. கருப்பண்ணன் - சு.யுவராஜன்

3. ராதா, எண்7, இருபத்தி நான்காவது மாடி - முனீஸ்வரன்

4. உற்றுழி - கமலாதேவி அரவிந்தன்

5. கார்ட்டூன் வரைபனின் கதை - ம.நவீன்

6. நீலக்கடல் மீது பாவும் நீல கண்டப்பறவைகள் - கோ.முனியாண்டி

7. சிகப்பு விளக்கு - என்னுடைய சிறுகதையும் வெளியாகியுள்ளது.

வல்லினம் மாத இணைய இதழில் கவிதைகள், கட்டுரைகள், புத்தக பகிர்வு, நூல் வெளியீடு என்று எல்லா தளங்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளது. வலைப்பதிவர்கள், வாசகர்கள் உங்களின் கருத்துகளையும் படைப்புகளையும் வல்லினம் இதழுக்கு அளியுங்கள்.

வல்லினம் இதழ் பற்றி முழுவிவரம் அறிய இந்த லிங்கிற்க்கு சொல்லுங்கள். http://www.vallinam.com.my/

No comments:

பார்வைகள்